பஞ்சாப் நேசனல் வங்கி மோசடி: சிஇஓ உஷா அனந்தசுப்ரமணியன் அதிகாரங்கள் பறிப்பு
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி உஷா அனந்தசுப்ரமணியன்,மெகுல்சோக்சி ஆகியோரின் பெயர்கள் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற
சென்னை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற 13,700 கோடி மோசடி தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிக்கைகளை தாக்கல் செய்துள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றுள்ள அலகாபாத் வங்கியின் தலைவர் உஷா அனந்த சுப்ரமணியனின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன.
உஷா அனந்தசுப்ரமணியன் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் இருந்து வந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் இவரது தொடர்பு குறித்து சிபிஐ சமீபத்தில் விசாரணை நடத்தியிருந்தது.
மூன்று மாத கால விசாரணைக்கு பின்பு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சிபிஐ குற்றப்பத்திரிக்கையில், முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி உஷா அனந்தசுப்ரமணியன்,குஜராத் தொழிலதிபர் மெகுல்சோக்சி, இயக்குநர்களான கே.வி.பிரம்மாஜி, சஞ்சீவ் ஷரன், பொது மேலாளர் நேஹல் அஹத் உள்ளிட்ட அனைவரும் திட்டம் தீட்டி மோசடியில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிபிஐ தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப்பத்திரிக்கையில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள மெகுல் சோக்சியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது தவிர 17 நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. இதில் மெகுல் சோக்சியின் நிறுவனங்களும் அடங்கும்.
பிஎன்பியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான உஷா அனந்த சுப்ரமணியனை இரண்டாவது குற்றப் பத்திரிகையிலும் சிபிஐ மீண்டும் சேர்த்துள்ளது.
உஷா அனந்தசுப்ரமணியன் தற்போது அலகாபாத் வங்கியின் தலைவராக உள்ளார். சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கலுக்குப் பிறகு இவரது அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. குற்றப் பிரிவு 409 (அரசு, வங்கி ஊழியர் நம்பிக்கை மோசடி செய்வது), பிரிவு 420 (ஏமாற்றுதல், பொருளை திரும்ப அளிப்பதில் நேர்மையற்ற தன்மை) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகிய இருவரும் ரூ. 700 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்துள்ளதாகவும் இதில் ரூ. 512 கோடி அளவுக்கு மோசடி செய்த கடிதங்களை சான்றுகளாக சிபிஐ தனது குற்றப் பத்திரிகையில் இணைத்துள்ளது. மொத்தம் ரூ. 4,886 கோடி அளவுக்கு வங்கிகளில் 143 கடன் உத்திரவாத கடிதங்கள் மூலமும் மற்றும் வெளிநாட்டு கடன் ஒப்புதல் கடிதங்கள் 224 மூலம் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது.
அதேசமயம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குநர்களான கே.வி. பிரம்மாஜி ராவ், சஞ்ஜீவ் சரன், பொது மேலாளர் நேகல் அகாத் ஆகியோரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளன. தனியார் நபர்களின் துணையோடு வங்கி அதிகாரிகள் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கில் 50 பேரை சாட்சிகளாக சிபிஐ சேர்த்துள்ளது. அதேபோல 12 பரிவர்த்தனைகளில் மெகுல் சோக்சியை பிரதான குற்றவாளியாக சிபிஐ குறிப்பிட்டுள்ளது. வழக்கில் கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட், கிலி இந்தியா லிமிடெட், நக்ஷத்திரா பிராண்ட் லிமிடெட் ஆகிய மூன்று நிறுவனங்களையும் சிபிஐ தனது குற்றப் பத்திரிகையில் இணைத்துள்ளது.