பட்ஜெட் 2018: ஸ்டாண்டர்டு டிடெக்ஸன் மீண்டும் வேண்டும் - மாத சம்பளதாரர்கள் கோரிக்கை
மாத சம்பளதாரர்கள் தங்களின் வருமான வரியில் ஒரு குறிப்பிட்ட தொகை வரையில் நிலையான கழிவு (Standard Deduction) என்னும் பெயரில் சலுகை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்.
டெல்லி: மாத சம்பளதாரர்களின் வரி சுமையை குறைக்கும் விதமாக ஸ்டாண்டர்டு டிடக்ஸன் என்னும் நிலையான கழிவு என்னும் முறையை மீண்டும் பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று மாத சம்பளதாரர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
உயர்ந்து வரும் பணவீக்க விகிதம், விலைவாசி உயர்வு, பஸ் கட்டண உயர்வு போன்றவற்றினால் மாத சம்பளதாரர்கள் திண்டாடினாலும், இந்தியாவில் வருமான வரி செலுத்துவதில் மாத சம்பளம் வாங்குபவர்களே முதலிடம் பெறுகிறார்கள்.
வருமான வரியில் மாத சம்பளம் வாங்குபவர்களிடம் இருந்தே 70 சதவிகிதம் வசூலிக்கப்படுகிறது. அதே சமயத்தில் தொழில் துறையினரிடம் இருந்து வசூலிக்கப்படும் வரியானது 30 சதவிகிதம் மட்டுமே.
இருந்தாலும் தொழில் துறையினருக்கு கிடைக்கும் பெரும்பாலான சலுகைகள் மாத சம்பளதாரர்களுக்கு கிடைப்பதில்லை. தொழில் துறையினர் தங்களின் நிறுவனங்களுக்கு செலவிடும் தொழில் அபிவிருத்தி செலவு, நிறுவன வாடகை, ஊழியர்களின் சம்பளம், ஊழியர்களின் மருத்துவ செலவு, வண்டி வாடகை, பெட்ரொல், டீசல் செலவு பேருந்து செலவு, தொலைபேசி கட்டணம் போன்றவற்றை மொத்த வருமானத்தில் இருந்து கழித்து மீதம் உள்ள லாபத்திற்கு மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர்.
மாத சம்பளம் வாங்குபவர்களும் தொலைபேசி கட்டணம், மருத்துவ செலவு, காப்பீடு செலவு, போக்குவரத்து செலவு, வீட்டு வாடகை, பெட்ரோல் செலவு போன்றவற்றிற்கு செலவு செய்கிறார்கள். ஆனால் இவற்றை எல்லாம் 80சி என்னும் பிரிவின் கீழ் ஒன்றறை லட்சம் வரையில் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக மாத சம்பளம் வாங்குபவர்களின் வாங்கும் திறன் குறைந்து வருவதால், இதனை தவிர்க்க தங்களுக்கு வருமான வரியில் தற்போது உள்ள சலுகைகள் குறைவாக உள்ளது என்றும் வரிச் சலுகைகளை அதிகரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். மருத்துவ செலவிற்காக தற்போது 15000 ரூபாய் வரையில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இதனை குறைந்தது 50000 வரையிலும் உயர்த்த வேண்டும் என்பது மாத சம்பளம் வாங்குபவர்களின் எதிர்பார்ப்பாகும்.
நிலையான கழிவு (Standard Deduction)
மாத சம்பளதாரர்கள் தங்களின் வருமான வரியில் ஒரு குறிப்பிட்ட தொகை வரையில் நிலையான கழிவு (Standard Deduction) என்னும் பெயரில் சலுகை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள். கடந்த 2006ம் ஆண்டு வரையிலும் 20000 வரையிலும் நிலையான கழிவுத் தொகையை வருமான வரியில் சலுகையாக பெற்றுவந்தனர். அதன்பின்னர் இந்த சலுகையை நீக்கி விட்டு 80சி என்னும் பிரிவை கொண்டுவந்தனர்.
தற்போது மீண்டும் நிலையான கழிவு என்னும் பிரிவை சேர்க்க வேண்டும் என்று அனைத்து மாத சம்பளதாரர்களும் கோரிக்கை விடுக்கின்றனர். ஒரு தனியார் நிறுவனம் எடுத்த சர்வேயின் படி சுமார் 69 சதவிகிதம் பேர் மீண்டும் நிலையான கழிவு (Standard Deduction), வருமான வரிச் சலுகை அதிகரிப்பு போன்றவை வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தற்போதும் மாத சம்பளதாரர்கள் சுமார் 40000 முதல் 73000 ரூபாய் வரையில் நிலையான கழிவு (Standard Deduction) தொகையை வருமான வரியில் சலுகையாக பயன்பெற்று வருகிறார்கள். அதுபோலவே, இந்தியாவிலும் மாத சம்பளதாரர்கள் தங்களின் ஆண்டு வருவாயில் சுமார் 30 முதல் 40 சதவிகிதம் வரையில் நிலையான கழிவு (Standard Deduction) வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இவர்களின் கோரிக்கையை நிதி அமைச்சர் நிறைவேற்றுவாரா அல்லது கடந்த வாரம் கிண்டிய அல்வாவை மாத சம்பளதாரர்களுக்கு கொடுத்துவிட்டு அதிக சலுகை என்னும் ஜாங்கிரியை பெரும் தொழில் துறையினருக்கு அளிப்பாரா என்று பட்ஜெட் உரையில் தெரிந்துவிடும்.