எடுத்துட்டு போன பொருட்கள கொடுத்திடுங்க! சின்னசேலத்தில் தண்டோரா மூலம் வார்னிங்! களமிறங்கிய போலீஸ்!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மம் மரணம் விவகாரம் தொடர்பான கலவரத்தின் போது பள்ளிகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்துச் சென்றவர்கள் அதனை பள்ளிக்கு அருகே வைத்துச் செல்ல வேண்டும் என தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வரும் நிலையில் இரண்டாவது நாளாக பள்ளியில் சிபிசிஐ போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மாணவி படித்து வந்த பள்ளி முன்பு நேற்று முன்தினம் திடீரென 500-க்கும் மேற்பட்டோர் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அது வன்முறையாக மாறியது. பள்ளியில் இருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடு, பள்ளியில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டது.

சூறையாடப்பட்ட பள்ளி
பள்ளி இருந்த நாற்காலிகள் சேர்கள் மாணவர் அமரும் இருக்கைகள் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தில் வைத்து தீயிட்டு கொளுத்தினர். அப்போது கிடைத்த இடைவேளையில் போராட்டக்காரர்கள் என்று கூறி பள்ளிக்குள் புகுந்த சிலர் அங்கு இருந்த பொருட்களை எல்லாம் முடிந்த அளவு அள்ளி சென்றனர் ஏசி நாற்காலி கணினி உள்ளிட்ட எதையும் விட்டு வைக்காமல் போட்டி போட்டுக் கொண்டு தங்களுக்கு கிடைத்ததை எல்லாம் சுருட்டிக்கொண்டு இரு சக்கர வாகனங்களில் தப்பி சென்றனர்.

பொருட்கள் திருட்டு
வாகனங்களில் அவர்கள் தப்பிச் செல்வதும் பொருட்களை எடுத்துச் செல்லும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவி கடும் விமர்சனத்தை பெற்றது. இதனிடையே கனியாமூர் தனியார் பள்ளியில் புகுந்து பொருட்களை திருடிச் சென்ற 15 பேர் போலீசிடம் சிக்கினர். ஏமாப்பேர் என்ற இடத்தில் போலீஸ் நடத்திய வாகன சோதனையில் மடிக்கணினி, நாற்காலி, மேஜை திருடிய 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

தண்டோரா
இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற சோதனையில் மேலும் பல கணிணிகள், பேன்கள், டேபிள், சேர் உள்ளிட்ட பல பொருட்கள் மாயமாகி இருப்பதும் அவற்றில் மதிப்பு பல ஆயிரங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. பள்ளியை சீரமைக்கு பல மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கள்ளக்குறிச்சியில் மாணவி மரணமடைந்த பள்ளியில் பொருட்களைத் தூக்கிச் சென்றவர்கள் அவற்றைத் திரும்பத் தரவில்லை என்றால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தண்டோரா போடப்பட்டுள்ளது.

சிபிசிஐடி விசாரணை
இதனிடையே கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் மற்றும் வன்முறை தொடர்பாக 2வது நாளாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை சிபிசிஐடி காவல் ஆய்வாளர் தனலட்சுமி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரது தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை கலவரத்தில் ஈடுபட்ட 302 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், வாட்ஸ் அப் குழுவில் இருந்து பெறப்பட்ட 600 எண்களை வைத்து அவர்களில் யார் யார் கலவரம் நடந்த இடத்தில் இருந்தனர் என அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications