பஞ்சாப்பில் தொங்கு சட்டசபைதான்... காங்கிரஸை விட ஆம் ஆத்மிக்கு அதிக இடங்கள்: NewsX-Polstrat கணிப்பு
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக் கூடிய பெரும்பான்மை இடங்கள் கிடைக்காது; அம்மாநிலத்தில் தொங்கு சட்டசபைதான் அமையும் என்கிறது NewsX-Polstrat-ன் புதிய கருத்து கணிப்பு.
பஞ்சாப்பில் 117 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்ரவரி 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
பஞ்சாப் தேர்தல்: முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அமரீந்தர்சிங்- பாட்டியாலாவில் போட்டி!
ஆம் ஆத்மிக்கு அதிக இடங்கள்
பஞ்சாப் தேர்தல் தொடர்பான இதுவரையிலான அனைத்து கருத்து கணிப்புகளே காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் என்றே தெரிவித்துள்ளன. மேலும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்றும் அக்கருத்து கணிப்புகள் கூறியுள்ளன.
தொங்கு சட்டசபைதானாம்
இதனிடையே NewsX-Polstrat இன்று புதிய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதிலும் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. NewsX-Polstrat கருத்து கணிப்பு முடிவுகளில் கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்கள்: ஆம் ஆத்மி 52-55; காங்கிரஸ் 42-45; சிரோமணி அகாலிதளம் 17-20; பாஜக 0-2. கடந்த டிசம்பர் மாதம் NewsX-Polstrat வெளியிட்ட கருத்து கணிப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு 47-52 இடங்களும் காங்கிரஸுக்கு 40 முதல் 45 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வென்றது; ஆம் ஆத்மிக்கு 20 இடங்களும் சிரோமணி அகாலிதளத்துக்கு 15 இடங்களும் பாஜகவுக்கு 3 இடங்களும் கிடைத்திருந்தன.
அகாலி தளத்து அடி- ஆம் ஆத்மி ஏறுமுகம்
NewsX-Polstrat கருத்து கணிப்பில் கட்சிகள் பெறக் கூடிய வாக்கு சதவீதம் விவரம்: ஆம் ஆத்மி- 39.7%; காங்கிரஸ் 37.2%; சிரோமணி அகாலிதளம் 16.6%; பாஜக 2.7%. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் NewsX-Polstrat நடத்திய கருத்து கணிப்பை ஒப்பிடுகையில் சிரோமணி அகாலிதளத்தின் வாக்கு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளுக்கு இந்த வாக்குகள் மடைமாறி இருக்கின்றன. 2017 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 36.5%; ஆம் ஆத்மி கட்சி 18.7%; சிரோமணி அகாலிதளம் 32.2%; பாஜக 5.4% வாக்குகளைப் பெற்றிருந்தன.
ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளருக்கு ஆதரவு
முதல்வராக யாருக்கு ஆதரவு என்பதில் ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு 38.92% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைய முதல்வரான காங்கிரஸின் சரண்ஜித்சிங்குக்கு 20.78% பேரும் அகாலிதளத்தின் சுக்பீர் பாதலுக்கு 20.34% பேரும் ஆதர்ஃபவு தெரிவித்திருக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மைதான் தேர்தல் கால பிரச்சனைகளில் முதலிடத்தில் இருக்கிறது. மொத்தம் 32.5% பேர் வேலைவாய்ப்பின்மையே பிரதான பிரச்சனை என கூறியுள்ளனர். அதேபோல் இந்துக்கள், சீக்கியர்கள் என வாக்குகள் ஒருமுகப்படுத்தப்பட்டிருப்பது மிகப் பெரும் கவலைக்குரியது என 31.63% பேர் தெரிவித்துள்ளனர். அடையாள அரசியல், காலிஸ்தான் விவகாரமும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றிருக்கின்றன. பிரதமர் மோடியின் பஞ்சாப் வருகையின் போது மாநில அரசு மீது குறை கூறுவதை ஏற்க முடியாது என 45.68% பேர் தெரிவித்துள்ளனர்.