சீண்டித்தான் பாருங்க- சிதைச்சுடுவோம்..சீனா,பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் வார்னிங்
சண்டிகர்: இந்தியாவை சீண்டிப் பார்க்கும் எந்த நாட்டுக்கும் தக்க பதிலடி கொடுப்போம் என்று சீனா, பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹரியானாவின் ஜஜ்ஜாரில் மன்னர் பிருத்விராஜ் செளகானின் சிலையை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று திறந்து வைத்தார். பிருத்விராஜ் செளகானை ஒரு சிறந்த ஆட்சியாளர் என்றும் அவர் ஒரு பெரிய நிலப்பரப்பில் ஆட்சி செய்தவர் மட்டுமல்ல, தைரியம், நீதி, பொது நலன் ஆகியவற்றின் உருவகமாகவும் இருந்தார் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.
இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: தேச நலன்களைப் பாதுகாப்பதே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. எதிர்கால சவால்களிலிருந்து நாட்டைப் பாதுகாக்க ராணுவம் அதிநவீன ஆயுதங்களுடனும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள்/உபகரணங்களுடனும் தயாராக இருக்கிறது.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் வெளியாகுமோ பகீர் தகவல்? சிக்கிய 6 பேரை காவலில் எடுக்கும் என்ஐஏ
பலவீனமான நாடு இல்லை- பதிலடி ரெடி
இந்தியா இப்போது பலவீனமாக இல்லை. நாம் அமைதியை நம்புகிறோம், ஆனால் யாரேனும் நமக்குத் தீங்கு விளைவிக்க முயன்றால், நாம் தக்க பதிலடி கொடுப்போம். நமது வீரர்கள் இதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். 2016-ல் துல்லியத் தாக்குதல், 2019 பாலகோட் வான்வழித் தாக்குதல் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தின் போது நமது வீரர்கள் காட்டிய வீரம் ஆகியவை நமது வலிமை மற்றும் தயார்நிலைக்கு சான்றாகும்.
பொருளாதார வல்லரசு
இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை வெறும் கேட்பவர் என்ற நிலையிலிருந்து வலியுறுத்துபவராக பிரதமர் மோடி மாற்றி இருக்கிறார். உலகம் இப்போது டெல்லியை ஆர்வத்துடன் பார்க்கிறது. அரசின் முயற்சிகளால் இந்தியா இப்போது உலகின் முதல் ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளது. வரும் காலங்களில் நாடு முதல் மூன்று இடங்களுக்குள் வரும்.
புதிய இந்தியா
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மாமன்னர் பிருத்விராஜ் செளகான், மராட்டிய வீரர் சத்ரபதி சிவாஜி போன்ற புரட்சியாளர்களிடமிருந்து உத்வேகம் பெற்று, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்துக்கொண்டே, இந்தியாவின் கனவுகளை நனவாக்க அரசு பாடுபட்டு வருகிறது. இந்த ஆண்டு செங்கோட்டை கொத்தளத்திலிருந்து நிகழ்த்திய சுதந்திர தின உரையின் போது பிரதமரால் தொலைநோக்காகக் காணப்பட்ட 'புதிய இந்தியா' வின் தீர்மானமான 'அமிர்த காலத்தின் ஐந்து உறுதிமொழிகள் நினைவு கொள்ளத்தக்கவை.
ஜி20 லச்சினையில் தாமரை
காலனித்துவ மனநிலையிலிருந்து விடுபட, ராஜ்பாத்தின் பெயரை கடமைப் பாதை என்று மாற்றியது, இந்தியா கேட் வளாகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிரமாண்ட சிலை நிறுவியது; மராட்டியப் போர்வீரன் சத்ரபதி சிவாஜியிடமிருந்து ஊக்கம் பெற்ற ஒரு புதிய இந்தியக் கடற்படைக் கொடி, காலாவதியான சுமார் 1,500 பிரிட்டிஷ் காலச் சட்டங்களை நீக்கியது உட்பட பல முயற்சிகளை அரசு எடுத்துள்ளது. அண்மையில் பிரதமரால் வெளியிடப்பட்ட, 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவிக்கான இலச்சினையில் தாமரை மலர் இருக்கிறது. இந்தியாவின் கலாச்சார அடையாளத்துடன் இணைந்த தேசிய மலர் தாமரை. இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.