பஞ்சாப்: தனிநாடு கோரும் பிரிவினைவாதி சிம்ரஞ்சித் சிங் மான் சங்ரூர் இடைத்தேர்தலில் மீண்டும் வெற்றி!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சங்ரூர் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் சீக்கியர்களுக்கான காலிஸ்தான் தனிநாடு கோரும் பிரிவினைவாத தலைவர் சிம்ரஞ்சித் சிங் மான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் சங்ரூர் லோக்சபா தொகுதி எம்.பி.யாக இருந்தவர் தற்போதைய முதல்வரான ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான். சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வென்றதால் பகவந்த் மான் முதல்வரானார். இதனால் தமது சங்ரூர் லோக்சபா தொகுதி எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த 23-ந் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
பஞ்சாப் இடைத்தேர்தல் ரிசல்ட் - முதலமைச்சர் தொகுதியிலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த ஆம் ஆத்மி
சங்ரூர் இடைத்தேர்தல்
சங்ரூர் இடைத்தேர்தலில் எப்படியும் வெல்வோம் என ஆம் ஆத்மி களமிறங்கியது. இத்தேர்தலில் வழக்கம் போல காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம், பாஜக மற்றும் சிரோமணி அகாலி தளம் (மான் பிரிவு- அமிர்தசரஸ்) ஆகியவையும் களம் கண்டன. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அமோக வெற்றியை அறுவடை செய்திருக்கிறது சிரோமணி அகாலி தளம் (மான் பிரிவு- அமிர்தசரஸ்).
பஞ்சாப் பிரினைவாதி
சிரோமணி அகாலி தளம் (மான் பிரிவு- அமிர்தசரஸ்) சார்பில் இத்தொகுதியில் போட்டியிட்டவர் சிம்ரஞ்சித் சிங் மான். சீக்கியர்களுக்கு தனிநாடான காலிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தீவிரமாக முன்னெடுக்கக் கூடியவர் சிம்ரஞ்சித் சிங் மான். தான் தரன் மற்றும் சங்ரூர் லோக்சபா தொகுதிகளில் 1989, 1999-ல் போட்டியிட்டு வென்றவர் சிம்ரஞ்சித் சிங் மான். லோக்சபாவில் பிரிவினைவாத கருத்துகளை தீவிரமாக பேசியவர். இப்போது 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் லோக்சபா எம்.பி.யாக சிம்ரஞ்சித் சிங் மான் தேர்வாகி இருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
சிம்ரஞ்சித் சிங் மான் யார்?
பஞ்சாப் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் சிம்ரஞ்சித் சிங் மான். 1984-ம் ஆண்டு காலிஸ்தான் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய பிந்தரன்வாலே உள்ளிட்டோர் அமிர்தசரஸ் பொற்கோவிலில் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்ய்யப்பட்டார். அப்போது தமது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிரிவினைவாதி பிந்தரன்வாலே கொள்கைகளுக்காக இயக்கம், கட்சி என இயங்க தொடங்கியவர் சிம்ரஞ்சித் சிங் மான். 1990களில் பஞ்சாப் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் முகமாக அறியப்பட்டவர். இப்போது மீண்டும் லோக்சபா இடைத்தேர்தலில் வென்றதன் மூலம் லைம்லைட்டுக்கு வந்துள்ளார் சிம்ரஞ்சித் சிங் மான்.
வென்றது எப்படி?
இப்போதும் ஜம்மு காஷ்மீரில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவது; சிறைகளில் நீண்டகாலமாக அடைக்கப்பட்டுள்ள சீக்கியர்களை விடுதலை செய்வது உள்ளிட்டவைகளை முன்வைத்துதான் சிங்ரூர் தொகுதி இடைத்தேர்தலில் சிம்ரஞ்சித் சிங் மான் பிரசாரம் செய்தார். சிம்ரஞ்சித் மான் மீது மக்கள் நம்பிக்கை வைத்து அவரை வாக்காளர்கள் தேர்வு செய்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக காலிஸ்தான் எனப்படும் சீக்கியர் தனிநாடு கோரும் இயக்கம் தலைதூக்க தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் சிம்ரஞ்சித் சிங் மானின் வெற்றி அனைவராலும் கவனிக்கப்படக் கூடியதாக இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.