லஞ்சமா! எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு புகாரளியுங்க... பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அசத்தல்
சண்டிகர்: ‛‛லஞ்சம் கேட்கும் நபர்கள் குறித்து எனது வாட்ஸ்அப் எண்ணுக்கு புகாரளிக்கலாம். நான் எப்போதும் நேர்மையான அதிகாரிகளின் பக்கம் இருப்பவன்'' என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அதிரடியாக அறிவித்துள்ளார்.
பஞ்சாப்பில் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.
இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி ஆம் ஆத்மியிடம் பறிபோனது. பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் நேற்று பதவி ஏற்று கொண்டார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
முதல்வர் அறிவிப்பு
இந்நிலையில் இன்று காலையில் முதல்வர் பகவந்த் மான் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, ‛‛மாநிலத்தின் நலனுக்காக ஒரு பெரிய முடிவை எடுக்க தயாராக இருக்கிறேன். இது பஞ்சாப் வரலாற்றில் யாரும் செய்யாதது. இதுபற்றி விரைவில் அறிவிப்பேன்'' என தெரிவித்து இருந்தார். முதல்வரின் இந்த அறிவிப்பு பல்வேறு யூகங்களை கிளப்பியது. புதிதாக ஏதேனும் திட்டத்தை அறிவிக்க உள்ளாரா என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
லஞ்சத்துக்கு எதிரான ஹெல்ப்லைன்
இந்நிலையில் அடுத்த சில மணிநேரத்தில் பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், ‛‛ஊழல், லஞ்சத்துக்கு எதிராக பொதுமக்கள் புகாரளிக்க ஹெல்ப்லைன் எண் வழங்கப்படும். இது விடுதலை போராட்ட தியாகி பகத்சிங்கின் நினைவு நாளான மார்ச் 23ல் அறிமுகம் செய்யப்படும். இந்தஹெல்ப்லைன் எண் எனது தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்ணாக இருக்கும். உங்களிடம் யாரெனும் லஞ்சம் கேட்டால் நேரிடையாக வீடியோ, ஆடியோ பதிவு செய்து அனுப்பலாம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்''என குறிப்பிட்டு இருந்தார்.
நேர்மையின் பக்கம்
மேலும், ‛‛99 சதவீத மக்கள் நேர்மையானவர்கள். மீதமுள்ள ஒரு சதவீதத்தின் மட்டுமே அரசு கட்டமைப்பை தாழ்த்துகின்றனர். நான் எப்போதும் நேர்மையான அதிகாரிகளின் பக்கம் இருப்பவன். லஞ்சம் வாங்குங்கள் என்று அதிகாரிகளிடம் எந்த தலைவரும் கூறமாட்டார். இந்த அறிவிப்பானது மாநில நலனை பாதுகாக்கும்'' என குறிப்பிட்டு இருந்தார். பகவந்த் மானின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆம்ஆத்மியின் கொள்கை
முன்னதாக ஆம்ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஊழல், லஞ்சத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். ஊழல், லஞ்சத்தை எதிர்த்தே அவர் கட்சி துவங்கி அரசியலில் நுழைந்து டெல்லி முதல்வரானார். இந்நிலையில் தான் பகவந்த் மானும் முதல்வராக பொறுப்பேற்ற நிலையில் மக்களுக்கான முதல் அறிவிப்பாக பஞ்சாப்பில் லஞ்சத்தை ஒழிக்கும் வகையில் தனது தனிப்பட்ட வாட்ஸ் அப் எண்ணை ஹெல்ப்லைனாக அறிவிக்க உள்ளார்.