முதல் நாள் ஐஏஎஸ் விருப்ப ஓய்வு பெற்றவர்.. மறுநாள் பாஜக வேட்பாளர்.. பஞ்சாப் தேர்தலில் அதகளம்
சண்டிகர்: ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே பஞ்சாப் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றிய ஜக்மோகன் சிங் ராஜூ நேற்று விருப்ப ஓய்வு பெற்றார். விருப்ப ஓய்வு கொடுத்த மறுநாளே அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்நிலையில்,ஜக்மோகன் சிங் பஞ்சாப் தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸின் பஞ்சாப் மாநில தலைவராக இருக்கும் நவ்ஜோத் சிங் சித்துவை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பாஜக சதி.. டெல்லியில் என் ஹெலிகாப்டரை நிறுத்திட்டாங்க.. அகிலேஷ் யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு
ஜக்மோகன் சிங் ராஜூ
தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் தலைமை ஆணையராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரி ஜக்மோகன் சிங் ராஜூ நேற்று விருப்ப ஓய்வு பெற்றார். ஓய்வு பெறுவதற்கு இன்னும் ஓராண்டு மேல் உள்ள நிலையில் நேற்று திடீரென விருப்ப ஓய்வு கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கடிதம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "எனது சொந்த மாநிலத்தின் வேதனை நிறைந்த சூழ்நிலை என் மனசாட்சியை உலுக்குகிறது. தாய் மண்ணை நேசிக்கும் ஒரு மகன், என் மாநிலத்துக்கு ஏதாவது செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்துள்ளேன்" என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தால், 3 மாதங்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும். ஆனால், ஜக்மோகனுக்காக விதியை தளர்த்தப்பப்பட்டு உடனடி ஓய்வு கொடுக்கப்பட்டது.
ராஜினாமா
நேற்று ஜக்மோகனின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து பாஜக சார்பில் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பஞ்சாபின் ஸ்டார் தொகுதியான அமிர்தசரஸ் கிழக்கில் ஏற்கெனவே காங்கிரஸ் பஞ்சாப் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் சிரோமணி அகாலி தளம் தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா ஆகியோர் போட்டியிடுகின்றனர். தற்போது ஜக்மோகன் சிங் ராஜூவும் களமிறங்கியிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.
பஞ்சாப்
பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜக்மோகன் சிங் ராஜூ கூறுகையில், ''1980களில் நான் பஞ்சாபிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வந்தேன். தமிழ்நாடு வந்தபோது பஞ்சாப் எல்லா துறைகளிலும் முதலிடத்தில் இருந்தது. ஆனால் இப்போது பொருளாதார வளர்ச்சி, விவசாயம், சமூக நீதி என அனைத்து அம்சங்களிலும் பஞ்சாப் மோசமாக சரிவை சந்தித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பஞ்சாப்புக்கு திரும்பி செல்ல ஆலோசித்து வந்தேன்.
தேர்தல்
பஞ்சாப்பில் இப்போது தேர்தல் என்றால் வசைபாட தொடங்கிவிடுகிறார்கள். வேட்பாளர்கள் ஒருவரையொருவர் தவறான வார்த்தைகளில் திட்டிக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும் பஞ்சாபின் வளர்ச்சி பற்றி பேசுவதில்லை. பஞ்சாபின் வளர்ச்சி மத்திய அரசு மூலமாகவே வர முடியும். மத்திய - மாநில ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்" என்று வருத்தம் தெரிவித்துள்ளார் ஜக்மோகன் சிங்.