பஞ்சாப் சட்டசபை தேர்தல்: ஜன.3 முதல் ராகுல் காந்தி பிரசாரம்... முடிவுக்கு வருமா உட்கட்சி பஞ்சாயத்து?
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை ஜனவரி 3-ந் தேதி முதல் தொடங்குகிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவரது இந்த பிரசாரத்தை தொடர்ந்தாவது பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் தலைவிரித்தாடும் உட்கட்சி பஞ்சாயத்து முடிவுக்கு வருமா? என்பது அக்கட்சி தொண்டர்களின் எதிர்பார்ப்பு.
மூவ்மென்ட்டை தடுக்க.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக் கணக்குகள் முடக்கம்
பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளன. ஓமிக்ரான் பரவல் இருப்பதால் இந்த தேர்தல்கள் நடைபெறுமா? என்பது இன்னமும் தெளிவுபடுத்தப்படவில்லை.
காங். உட்கட்சி மோதல்
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. ஆனால் இதுவரை இல்லாத வகையில் பஞ்சாப் மாநில காங்கிரஸில் இடைவிடாத உட்கட்சி மோதல்கள் தொடருகின்றன. ஏற்கனவே உட்கட்சி மோதலால்தான் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர்சிங் ராஜினாமா செய்தார். அத்துடன் காங்கிரஸைவிட்டு வெளியேறி தனிக்கட்சி தொடங்கி பாஜகவுடன் கை கோர்த்தும்விட்டார்.
கருத்து கணிப்புகள்
ஆனாலும் தற்போதைய முதல்வர் சரண்ஜித்சிங்குக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் இடையேயான அக்கப்போர் தொடரவே செய்கிறது. பஞ்சாப் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு முடிவுகளும் ஆட்சியை காங்கிரஸ் பறிகொடுக்கும்; தொங்கு சட்டசபைக்கே அதிக வாய்ப்பு என கூறி வருகின்றன. காங்கிரஸைவிட ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது எனவும் அந்த கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
ராகுல் பிரசாரம்?
இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பஞ்சாப் தேர்தல் பிரசாரத்தை ஜனவரி 3-ந் தேதி தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பஞ்சாப் மாநிலத்தின் மோகாவில் இருந்து ராகுல் காந்தியின் பிரசாரம் தொடங்கப்பட இருக்கிறதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரசாரத்துக்கு வருவாரா என்பது உறுதி செய்யப்படவில்லை.
பஞ்சாயத்துகள் ஓயுமா?
ராகுல் காந்தியின் வருகைக்குப் பின்னராவது பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் ஈகோவை விட்டு உட்கட்சி பஞ்சாயத்தை முடித்து கொள்வார்களா? என்கிற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்களிடம் நிலவுகிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ் எளிதாக ஆட்சியைத் தக்க வைத்திருக்க முடியும். ஆனால் தலைவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி துருவங்களாக செயல்பட்டு வருவதால் வம்படியாகவே ஆட்சியை பறிகொடுக்கிறது காங்கிரஸ் எனவும் குமுறுகின்றனர் அக்கட்சியின் சீனியர்கள்.