"அட்லீஸ்ட்.. ஏர்போர்ட்டுக்கு உயிரோடவாவது வந்தேனே".. பஞ்சாப்பில் சொன்ன பிரதமர் மோடி.. பரபரப்பு!
சண்டிகர்: பஞ்சாப்பில் பாதுகாப்பு குறைபாடுகளால் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திரும்பி செல்லும் போது பஞ்சாப் விமான நிலைய அதிகாரிகளிடம் பிரதமர் மோடி என்ன பேசினார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video

பஞ்சாப்பில் இருக்கும் ஹுசைன்வாலா என்ற பகுதியில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு இடத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்ள இருந்தார். இன்று திட்டப்படி பிரதமர் மோடி பதிண்டா விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹுசைன்வாலா பகுதிக்கு செல்ல வேண்டும்.
ஆனால் மோசமான வானிலை காரணமாக கடைசி நேரத்தில் இவர் காரில் புறப்பட்டார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து அங்கு போராட்டம் நடைபெற்றது.

பரபரப்பு
அங்கு பாலம் ஒன்றுக்கு கீழே விவசாயிகள் பலர் போராட்டம் செய்துள்ளனர். இந்த போராட்டம் காரணமாக பிரதமர் மோடியின் கார் அந்த பாலத்திலேயே முடங்கியது. 20 நிமிடமாக கார் அங்கேயே முடங்கியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பிரதமர் மோடியின் எஸ்பிஜி பாதுகாப்பு படையினர் காரை சுற்றி நின்றனர். கடைசி வரை அங்கு போராட்டம் முடிவிற்கு வரவில்லை. இதன் காரணமாக சாலையில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக கடும் எதிர்ப்பு
கடைசியில் பாதுகாப்பை காரணம் காட்டி இந்த கூட்டமே மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. பிரதமர் மோடி மீண்டும் இதனால் பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பினார். இந்த சம்பவத்திற்கு பின் பாதுகாப்பு குறைபாடுதான் முழு காரணம். எஸ்பிஜி பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்து இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் விமர்சனம் செய்துள்ளது. மாநில போலீசார் மற்றும் அரசு மீதும் மத்திய உள்துறை அமைச்சகம் விமர்சனம் செய்துள்ளது. பஞ்சாப் மாநில பாஜக அம்மாநில அரசு மீது இதனால் புகார் வைத்துள்ளது.

அலட்சியம்
பிரதமர் மோடியின் கான்வாய்க்கு மாநில போலீஸ் சரியான பாதுகாப்பு வழங்கவில்லை. பஞ்சாப் மக்களின் நன்மைக்காக அவர்களுக்கு நலத்திட்டங்களை துவங்க வேண்டும் என்றே பிரதமர் மோடி வந்தார். ஆனால் அதற்கு கூட முதல்வர் சன்னி முறையான பாதுகாப்பு வழங்கவில்லை. இதற்காக நாங்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது கூட அவர் போனை எடுக்கவில்லை என்று பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா மற்றும் மாநில பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது.

முதல்வர் விளக்கம்
இதற்கு முதல்வர் சன்னி அளித்துள்ள விளக்கத்தில், எந்த விதமான பாதுகாப்பு குறைபாடும் இல்லை. பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் வருவதாகவே இருந்தது. ஆனால் அவர் கடைசியில் எங்களிடம் சொல்லாமல் கார் மூலம் வந்துவிட்டார். போராட்டம் 3 மணிக்கே முடியும் என்று கூறப்பட்டது. பாஜக கூட்டத்திற்கு 7000 பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 700 பேர் மட்டுமே வந்தனர். எனவே இதை மறைக்க தற்போது ஏதேதோ விஷயங்களை அவர்கள் காரணமாக சொல்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு விளக்கம்
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், பிரதமர் மோடியின் பயண மாற்றம் குறித்து பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இதற்காக முறையான ஏற்பாடுகளை செய்யும்படி கூறி இருந்தோம். கூடுதல் பாதுகாப்புகளை போடும்படி கூறி இருந்தோம். சாலை வழியாக வருகிறோம் என்று முன் கூட்டியே அறிவித்து இருந்தோம். ஆனால் கடைசியில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததால் பயண திட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டு பிரதமர் மோடி திரும்பி வரும் நிலை ஏற்பட்டது, என்று கூறியுள்ளது.

மோடி என்ன சொன்னார்
இந்த நிலையில் பிரதமர் மோடி திரும்பி செல்லும் போது பதிண்டா விமான நிலையத்தில் இருந்த அதிகாரிகளிடம் பேசியதாக கூறப்படுகிறது. அந்த விமான நிலைய அதிகாரி ஒருவர் தேசிய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், உங்களின் முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள்.. நான் அட்லீஸ்ட் ஏர்போர்ட்டுக்கு உயிரோடவாவது வந்தேனே என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications