யூடர்ன் போட்ட ஆம் ஆத்மி அரசு! சித்து மூஸ் வாலா படுகொலை.. மீண்டும் 420 பேருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சண்டிகர்: பஞ்சாபில் பாடகர் சித்து மூஸ் வாலா படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநில அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய பாடகர்களில் ஒருவராக இருந்தவர் சித்து மூஸ் வாலா. 28 வயதான இவர், ஏற்கனவே, துப்பாக்கி கலாசாரம், கேங் கலாசாரம் உள்ளிட்டவற்றைப் புகழ்ந்து பாடுவதாகச் சர்ச்சைகளில் சிக்கி இருந்தார்.
மேலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டிருந்த அவர், கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராகவும் களமிறங்கினார். இருப்பினும், இவர் தோல்வியைத் தழுவி இருந்தார்.

படுகொலை
இந்தச் சூழலில் இவர் கடந்தை மே 29ஆம் தேதி பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே என்ற இடத்தில் தனது ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென அவர் மீது சரமாரியா துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுமார் 30க்கும் மேற்பட்ட ரவுண்டுகள் அவரது காரை நோக்கிச் சுடப்பட்டதில், சித்து மூஸ் வாலா படுகாயமடைந்தார்.

திரண்டனர்
அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்னரே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த மேலும், இருவர் இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், இவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது பெருந்திரளான ரசிகர்களும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் அங்குத் திரண்டு இருந்தனர்.

பாதுகாப்பு குறைப்பு
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் பஞ்சாப் ஆம் ஆத்மி அரசுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் கடந்த சனிக்கிழமை தான் சித்து மூஸ் வாலாவுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பை ஆம் ஆத்மி அரசு குறைத்திருந்தது. பாதுகாப்பு குறைக்கப்பட்டு வெறும் 24 மணி நேரத்தில் அவர் கொல்லப்பட்டது ஆம் ஆத்மி அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏற்கனவே, காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசைச் சாடி இருந்தனர்.

மீண்டும் பாதுகாப்பு
அவர் மட்டுமின்றி, மொத்தம் 424 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைப் பஞ்சாப் அரசு குறைத்து இருந்தது. இந்தச் சூழலில் அவர்களில் 420 பேருக்கு மீண்டும் பாதுகாப்பை அதிகப்படுத்த ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.பி. சோனி வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கு விசாரணையில் தான், மீண்டும் பாதுகாப்பு வழங்க முடிவு செய்துள்ளதாகப் பஞ்சாப் அரசு தெரிவித்தது.

விளக்கம்
பாதுகாப்பு ஏன் குறைக்கப்பட்டது என்று நீதிமன்றம் எழுப்பி கேள்விக்குப் பதில் அளித்த பஞ்சாப் அரசு, "ஜூன் 1984இல் பொற்கோயிலில் ஊடுருவிய பயங்கரவாதிகளை ஒழிக்க ராணுவத் தாக்குதலான ஆபரேஷன் புளூஸ்டாரின் ஆண்டுவிழா ஜூன் 6இல் அனுசரிக்கப்படுகிறது. இதற்குக் கூடுதல் பாதுகாப்பு அதிகாரிகள் தேவை என்பதாலேயே பாதுகாப்பு குறைக்கப்பட்டது" என்று கூறி இருந்தனர்.

பாஜக அட்டாக்
நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு இப்படி பதில் கூறியுள்ள நிலையில், இதை பாஜக கடுமையாகச் சாடி உள்ளது. "விஐபி கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பாதுகாப்பைக் குறைத்ததாக முதலில் கூறினார்கள். ஆனால், இப்போது ஒரு பெரிய யூடர்ன் எடுத்து எதோ பாதுகாப்பு குறைப்பு என்பது தற்காலிக நடவடிக்கை என்பது போலக் கூறுகிறார்கள். ஆம் ஆத்மி பஞ்சாபின் மலிவான ஸ்டண்ட் பஞ்சாபியர்களுக்கு விலைமதிப்பற்ற உயிரைக் குடித்துள்ளது. அவர்களின் நடவடிக்கையைப் பஞ்சாபின் இளைஞர்கள் மன்னிக்க மாட்டார்கள்" என்று கடுமையாக பாஜக கடுமையாகச் சாடிய உள்ளது.












Click it and Unblock the Notifications