கஞ்சா எப்படி வருது? பேட்டி எடுத்து பேஸ்புக்கில் போட்ட செங்கல்பட்டு பாஜக நபர்! வெட்டி தள்ளிய கும்பல்
செங்கல்பட்டு: கஞ்சா விற்பனையை துப்பு துலக்கிய பாஜக பிரமுகரை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டில் நடக்கும் கஞ்சா விற்பனையை கடந்த சில மாதங்களாக யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்து, அவர்களிடம் விசாரணை நடத்தி துப்பு துலக்கி வந்த நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த பாஜக பிரமுகர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கஞ்சாவுக்கு எதிராக களமாடும் பாஜக
தமிழகம் முழுவதுமே இளைஞர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட கஞ்சாவை பயன்படுத்தும் அளவுக்கு மிக எளிதாக கிடைக்கக்கூடிய பொருளாக அது மாறியிருக்கிறது. கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டில் வீட்டிலிருந்து ஆன்லைனில் மாணவர்கள் கல்வி கற்றபோது கஞ்சா புழக்கம் அதிகரித்தது. அதை குறைக்க தற்போது காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், கஞ்சாவால் குற்றச்சம்பவங்களும் அதிகமாகி வருகின்றன.

துப்பு துலக்கிய பாஜக பிரமுகர்
இந்நிலையில், சென்னையை அடுத்த செங்கல்பட்டில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் துரை தனசேகர் (47) சமீபகாலமாக துப்பு துலக்கி வந்துள்ளார். அதன்படி, கஞ்சா போதையில் இருப்பவர்களிடம் சென்று, யாரிடம் நீங்கள் கஞ்சா வாங்குகிறீர்கள் என கேட்டு, போதையில் அவர்கள் கூறுவதை தனது செல்போனில் அப்படியே வீடியோ எடுத்து, அதை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு வந்துள்ளார் துரை தனசேகர்.

வைரலான வீடியோ
அந்த வகையில், கடந்த வாரம் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞரிடம் தான் துப்பு துலக்கிய வீடியோவை தனது பேஸ்புக்கில் பதிவிட்டார் துரை தனசேகர். அந்த வீடியோவில் கஞ்சா புகைத்தபடி பேசிய இளைஞர், தனக்கு கஞ்சா விற்றவர்களின் பெயர்களை முகவரியுடன் உளறினார். மேலும், போலீஸாருக்கு மாமூல் கொடுப்பதையும் அவர் கூறினார். இந்த வீடியோவையும் துரை தனசேகர் பேஸ்புக்கில் பகிர, அந்த வீடியோ பெரும் வைரலானது.

கொலைவெறி தாக்குதல் - கைது
துரை தனசேகரின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த கஞ்சா கும்பல் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி, இரு தினங்களுக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த துரை தனசேகரை வழிமறித்து ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த துரை தனசேகரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், துரை தனசேகரை வெட்டியதாக அதே பகுதியைச் சேர்ந்த அகமது பாஷா, மன்சூர் அலி, சையது அப்துல் ரகுமான், இப்ராஹிம் ஆகியோரை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications