10ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ்நாட்டில் இன்று தொடங்கியது.. 9,76,089 மாணவ, மாணவியர்கள் பங்கேற்பு
சென்னை: தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி உள்ளது.. மாணவர்கள் முதல்நாள் மொழித்தேர்வினை எழுதி வருகிறார்கள்.. பொதுத்தேர்வை மொத்தம் 9 லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ-மாணவியர் சந்திக்கிறார்கள்.. இன்று தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை 10ம் வகுப்பு தேர்வு நடைபெற இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி பொதுதேர்வுகள் நடைபெற்று வருகின்றன.. இதில், முதற்கட்டமாக மேல்நிலை வகுப்புகளுக்கான 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் சமீபத்தில்தான் நடந்து முடிவடைந்துள்ளன.

இதன் அடுத்த கட்டமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று முதல் ஆரம்பமாகி உள்ளது.. தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.
இதில், இன்றைய தினம் முதல் தேர்வாக மொழி தேர்வு நடந்து வருகிறது.. ஏற்கனவே, 12ம் வகுப்பு மொழித்தேர்வின் போது 50,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகை தராமல் இருந்தது மிகப்பெரிய சர்ச்சையையும், சலசலப்பையும் ஏற்படுத்திய நிலையில், 10ம் வகுப்பு தேர்வு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.. அதுவும் குறிப்பாக 10ம் வகுப்பு செய்முறை தேர்விற்கே 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு வராமல் இருந்தனர்..
இந்நிலையில், இன்று பொதுத்தேர்வு துவங்குகிறது.. இன்று முதல், 20ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இறுதி தேர்வாக சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படும்.. இந்த முறை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 9,76,089 மாணவர்கள் எழுத தயாராக உள்ளனர்.. இதில் 5,01,028 மாணவர்கள், 4,75,056 மாணவிகள் தேர்வு எழுத போகிறார்கள்.. இதில் மாற்று திறனாளி மாணவர்கள் மற்றும் சிறைவாசிகளும் அடக்கம்.. அந்த வகையில் மாற்று திறனாளி மாணவர்கள் 13,151 பேரும், சிறையில் இருந்து தேர்வு எழுதுபவர்கள் 264 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 4025 தேர்வு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது. பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 55,000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முறைகேடுகளை தடுக்க 4,235 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.. மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் செல்போன் உள்ளிட்டமின்சாதனங்களை கொண்டு வரதடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எந்த காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனாகொண்டு எழுதக்கூடாது. விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயரை குறிப்பிடக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றாலோ அல்லது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டாலோ அதிகபட்சம் 3 ஆண்டு அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடைவிதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications