மத்திய பாஜக அரசுக்கு கண்டனம்... திமுக பொதுக்குழுவில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!
சென்னை: மத்திய பாஜக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 13 தீர்மானங்கள் திமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழகத்தின் முதலமைச்சராக்க பாடுபடுவது என சூளுரை செய்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங்களின் விவரம் பின்வருமாறு;
திமுக பொதுக்குழு சுவாரஸ்யம்... துரைமுருகனுக்கு 218 பேர்.. டி.ஆர். பாலுவுக்கு 125 பேர்..!
வரவேற்பும், வாழ்த்தும்!
கழகத்தின் மூத்த முன்னோடி திரு. துரைமுருகன் அவர்கள் கழகப் பொதுச்செயலாளராக, ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பொதுக்குழு தனது வரவேற்பையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.
பள்ளிப் பருவத்தில் போர்க்குணம் கொண்டவர். சத்தியவாணிமுத்து அம்மையாரை அழைத்து கிளைக் கழகம் துவக்கி, அக்கிளைக் கழகச் செயலாளராகப் பொறுபேற்றவர்.திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது 1963-ல் எம்.ஜி.ஆர் மூலம் கலைஞருக்கு அறிமுகமாகி, 1965 இந்தி எதிர்ப்புப் போரில் முதலில் கைதான மாணவர் தலைவர் - பேரறிஞர் அண்ணாவுடன் சிறைவாசம் - மிசாவில் ஒரு வருடம் சிறை வாசம் - 9 முறை சட்டமன்ற உறுப்பினர் - கழகத்தில் தணிக்கைக்குழு உறுப்பினர் - மாணவர் அணிச் செயலாளர் - தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் - கழக துணைப் பொதுச்செயலாளர் - கழகப் பொருளாளர் என பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட கொள்கைக் கருவூலம் திரு. துரைமுருகன் அவர்கள், பொதுப் பணித்துறை அமைச்சராக, தமிழகத்திற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து சிறப்புறச் செயலாற்றியவர்.
கழகப் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.டி.ஆர்.பாலு அவர்கள் 1957ல் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராகி, பகுதிப் பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர் என்று படிப்படியாய், பல்வேறு பொறுப்புகளை வகித்து, பம்பரம் போல் சுழன்று பணியாற்றி - 1974ல் கழகத்தின் சென்னை மாவட்ட துணைச் செயலாளரானவர். மிசா நெருக்கடி காலத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் ஓட்டுநராகவே பணியாற்றியவர். மிசாவில் கைதாகி சிறை சென்றவர். 1983 முதல் 1992 வரை சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தவர். "பேரறிஞர் அண்ணாவின்" கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப் பாடுபட்டவர். அவரது பெயர் கூறும் பூகோள அடையாளங்கள் நிரம்ப உண்டு. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மாவட்டத் தளபதியாக விளங்கியவர்.
கழக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் க.பொன்முடி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - பேராசிரியர், நாவலர், மதியழகன் ஆகியோர் வரிசையில், திராவிட இயக்கத்திற்குத் தந்த கொடைகளில் ஒருவரான - களப் போராளிகளில் ஒருவரான - டாக்டர் திரு.க.பொன்முடி; தனது 17 ஆண்டு ஆசிரியர் பணியைத் துறந்து விட்டு, திராவிட இயக்கத்துடன் தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டவர். அவர் நாடு போற்றும் நற்றமிழ்ப் பேச்சாளர்; ஆழ்ந்த சிந்தனைமிக்க அவர் எந்தக் கருத்தையும் எவரும் உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம், எளிமையாக எடுத்துவைக்கக் கூடியவர்.
கழக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் க.பொன்முடி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் - பேராசிரியர், நாவலர், மதியழகன் ஆகியோர் வரிசையில், திராவிட இயக்கத்திற்குத் தந்த கொடைகளில் ஒருவரான - களப் போராளிகளில் ஒருவரான - டாக்டர் திரு.க.பொன்முடி; தனது 17 ஆண்டு ஆசிரியர் பணியைத் துறந்து விட்டு, திராவிட இயக்கத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். அவர் நாடு போற்றும் நற்றமிழ்ப் பேச்சாளர்; ஆழ்ந்த சிந்தனைமிக்க அவர் எந்தக் கருத்தையும் எவரும் உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம், எளிமையாக எடுத்துவைக்கக் கூடியவர்.
பாராட்டும் வணக்கமும்
அனைத்து முனைகளிலும் மக்களைப் பாதிக்கும் அ.தி.மு.க. அரசு மற்றும் மத்திய பா.ஜ.க. அரசு ஆகியவற்றின் பிற்போக்கு நடவடிக்கைகளை எதிர்த்து முதலில் குரல் கொடுத்து, கழகத்தின் கூட்டணிக் கட்சிகளுடன் உரிய முறையில் ஆலோசனை நடத்தி; கொரோனா காலத்தில் இதுவரை 104 காணொலிக் காட்சிகள் மூலம் 8,529 பேரிடம் விவாதித்து; குறிப்பாக, 92 காணொலிக் காட்சிகள் மூலம் எல்லா நிலைகளிலும் உள்ள 7,714 கழக நிர்வாகிகளுடன் உரையாடி; பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு; வல்லுநர்களின் வழிகாட்டுதல்களைப் பெற்று; கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அசாதாரணமான இந்தப் பேரிடர் காலத்திலும் சாதாரண காலத்தில் உழைப்பதைப் போல், ஓயாது உழைத்து வருகிறார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கழகத் தலைவர் அவர்கள் முன்னணியில் நின்று மறக்க முடியாத மனிதநேயத்துடன் ஆற்றிய மக்கள் பணிக்கு இந்தப் பொதுக்குழு இதயபூர்வமான பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
அருந்ததியினர் உள்ஒதுக்கீடு
அருந்ததியினர் சமுதாயத்திற்கான உள்ஒதுக்கீடு சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு - இன்றைக்கு அருந்ததியினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்னேற்றத்திற்கு உயர்ந்த வழியாக இருந்து வரும் அந்த உள்ஒதுக்கீட்டை சமீபத்தில் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதை இந்தப் பொதுக்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
மருத்துவக் கல்வி
"மத்தியத் தொகுப்பிற்குத் தமிழ்நாடு அளிக்கும் மருத்துவக் கல்வி இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு உரிமை உண்டு" - "இடஒதுக்கீடு கோரிக்கை ஆதாரபூர்வமானது" (not bereft of substance) என்று, சென்னை உயர்நீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, மாண்புமிகு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பினை மனப்பூர்வமாக இந்தப் பொதுக்குழு வரவேற்கிறது.
உள்ஒதுக்கீடு
கலைஞர் வழங்கியிருக்கும் அந்த உள் இடஒதுக்கீடு செல்லும் என்றும், அதில் குறுக்கிட இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லையென்றும், 31.8.2020 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்தப் பொதுக்குழு மனமார வரவேற்று மகிழ்ச்சி கொள்கிறது.
சமூக ‘அநீதி’
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தியுள்ள 2019-ம் ஆண்டு இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவரின் சமூகநீதி உரிமை அநியாயமாகத் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தியாவின் முன்னேற்றத்தில் பங்கெடுக்க - அதற்கான நிர்வாகக் கட்டமைப்பில் இடம்பெறும் உரிமைபெற இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ‘இந்தியக் குடிமைப் பணிகள்' தேர்வு குறித்து - பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை நடத்தி, நியாயம் வழங்கி - பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தினரின் சமூகநீதி எந்தவிதத் தடையுமின்றி, தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
கல்விக் கொள்கை
"மும்மொழித் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற மத்திய அரசின் கல்விக் கொள்கை", தமிழகத்தில் பேறிஞர் அண்ணா அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து நடைமுறையில் இருந்துவரும் இருமொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமானது என்று தெரிவித்து, அந்த மும்மொழித் திட்டத்தை இக்கூட்டம் நிராகரிக்கிறது. இந்தித் திணிப்பை மும்மொழித் திட்டத்தின் மூலம் தீவிரமாக்க மத்திய பா.ஜ.க. அரசு தந்திரமாகத் திட்டமிடுவதை இப்பொதுக்குழு ஆணித்தரமாக எதிர்க்கிறது.
சுற்றுச்சூழல் அறிவிக்கை
"புதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை-2020"-ஐ வெளியிட்டு - அதன்மீது ‘கருத்துக்கேட்பு' என ஒரு கண்துடைப்பு நாடகத்தையும் நடத்தி - அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் கூட இந்த அறிவிக்கையை வெளியிட நீதிமன்றங்களை நாட வேண்டிய பரிதாபமான நிலையை உருவாக்கி, தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு இப்பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
சுற்றுச்சூழலையும், விவசாயப் பெருமக்களின் வாழ்க்கையையும், வேளாண்மையையும் உருக்குலைக்கும் திட்டங்களை ஊக்குவிக்கக் கொண்டுவரப்பட்டுள்ள - மாநில உரிமைகளுக்கு முரணான - ஜனநாயக விரோத - சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு, நிபந்தனையின்றித் திரும்பப் பெற்றிட வேண்டும் என்று இப்பொதுக்குழுக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மத்திய அரசுக்கு கண்டனம்
அரசியல் சட்டம் உறுதியளித்துள்ள கூட்டாட்சித் தத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய நெறிகளுக்கு விரோதமாக மத்தியில் சர்வாதிகார ஆட்சியை பா.ஜ.க. நடத்தி வருவதற்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தனது பெரும்பான்மை பலத்தை தவறாகப் பயன்படுத்தி, விமான நிலையங்கள், எல்.ஐ.சி நிறுவனம் போன்றவற்றைத் தனியார் மயமாக்கி, நாட்டின் சமூக - பொருளாதார - தொழில் கட்டமைப்புகளுக்கும், அடித்தட்டு மக்கள் போராடிப் பெற்ற சமூகநீதிக்கும் விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற பா.ஜ.க.விற்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
அ.தி.மு.க. அரசின் ஊழல்களைக் கண்டுகொள்ளாமல் அவற்றுக்கு ஒத்துழைப்பு நல்கி, தமிழகத்தில் படுமோசமானதோர் அரசு நடப்பதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து; தமிழகத்தின் உரிமைகளைப் பறித்து, மக்கள் விரோதத் திட்டங்களைத் திணித்திடும் மத்திய பா.ஜ.க. அரசின் கபட முகத்தை மக்கள் மன்றத்தில் உணர்த்திடும் ஜனநாயகக் கடமையைச் செவ்வனே ஆற்றுவதென இந்தப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.
ஸ்டர்லைட் ஆலை
"ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது" என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள மிகவும் முற்போக்கான தீர்ப்பை வரவேற்கும் இந்தப் பொதுக்குழு, இத்தீர்ப்பு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மனிதகுலத்தினைக் காப்பாற்றிடும் மகத்தான தீர்ப்பு என்று பெருமிதம் கொள்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 அப்பாவி உயிர்களைக் கொடூரமாகப் பறித்த அ.தி.மு.க. அரசின் அட்டூழியச் செயலைத் தமிழக மக்கள் எப்போதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். ஏதுமறியாத மக்கள் கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை உரிய நியாயம் கிடைக்காதது குறித்து இந்தப் பொதுக்குழு தனது வேதனையைப் பதிவு செய்து - அந்தத் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோருக்கு விரைந்து நீதி கிடைத்திட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறது.
கொரோனா பேரிடர்
கொரோனா நோய்த் தொற்றிலிருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க இயலாமல் - ஒவ்வொரு கட்ட ஊரடங்கின் போதும் - நிர்வாக ரீதியாகத் தோல்வியடைந்து - மக்களுக்குப் பெரிதும் தேவையான நிதி நிவாரணம் வழங்கிட சிறிதும் அக்கறையற்ற அ.தி.மு.க. அரசுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
இ-பாஸ் வழங்குவதில் முறைகேடு, கொரோனா டெண்டர்களில் முறைகேடு, அதிவிரைவுப் பரிசோதனைக் கருவிகள் முதல் முகக்கவசங்கள், ப்ளீச்சிங் பவுடர் வாங்குவது, கிருமி நாசினி மற்றும் கொரோனா தடுப்புத் தகரங்கள், சவுக்குக் கட்டைகள், பூட்டுகள், கயிறுகள் ஆகியவற்றை வாங்குவது வரை அனைத்திலும் முறைகேடு - கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கும் உணவுகளில்- உதவிகளில் முறைகேடு - என கோரப் பேயாட்டம் போட்ட ‘கொரோனா ஊழல்' தமிழகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியது.
மக்கள் விரோதம்
அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்திட; கழகத்தை ஆட்சிபீடம் ஏற்றிட; கழகத் தலைவரை முதலமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்திட; சூளுரை மேற்கொள்வோம்! "கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்" என்ற ஒரே நோக்கத்திற்காகச் செயல்பட்டு; மக்களுக்கான பணிகளில் முற்றிலும் தோற்றுவிட்டதொரு நிர்வாகத்தை நடத்தி வருவதற்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
அனைத்துத் துறை டெண்டர்களிலும் ஊழல், ஆரவாரமான வெற்று அறிவிப்புகள், மும்மொழித்திட்டத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கைக்குக் கைலாகு, இந்தித் திணிப்பிற்கு மறைமுக ஆதரவு, ‘நீட்' தேர்வுக்கு விலக்கு வாங்க முடியாமல், அந்தத் தேர்வு கொரோனா காலத்தில் நடத்துவதைக் கூட எதிர்க்க இயலாத போக்கு, உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டு முறை நடத்தி படுதோல்வி, அந்நிய முதலீடு திரட்டச் சென்று தோல்வி - ஆடம்பரச் செலவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, எதிர்க்கட்சிகள் மீது பொய் வழக்குகள், தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள மாநில உரிமைகளைக் காவு கொடுத்தல், என அ.தி.மு.க. அரசின் தோல்விகளை வரிசைப்படுத்தினாலும், பட்டியல் முற்றுப் பெறாமல் நீண்டு கொண்டே போகும்.
விவசாயிகள் விரோதம்
மத்திய பா.ஜ.க. அரசும்-மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசும், விவசாயிகள் விரோத அரசாக செயல்பட்டு வருவதற்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுதல், முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுதல், காவிரி டெல்டா பகுதிகளில் எண்ணைய்க் கிணறுகள், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், பாதுகாப்பு பெட்ரோலிய மண்டலங்கள், நியூட்ரினோ திட்டம், விளை நிலங்கள் வழியாக கெயில் குழாய் பதிப்புத் திட்டங்கள், உயர் மின் கோபுரங்கள் அமைத்தல், சேலம் எட்டு வழிச் சாலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விரோத திட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு தமிழகத்தில் புகுத்தி - அதை தட்டிக் கேட்க முடியாமல், கைகட்டி வேடிக்கை பார்த்து நிற்கிறது அ.தி.மு.க. அரசு.