அணைந்தது அக்னிபாத் எதிர்ப்பு? வெறும் 7 நாட்களில்.. விமானப்படையில் சேர 2.72 லட்சம் பேர் விண்ணப்பம்!
சென்னை: அக்னி பாத் திட்டத்தின் கீழ் இந்திய விமானப்படையில் சேர 7 நாட்களில் மட்டும் 2.72 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Recommended Video
அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் ஒரு பக்கம் நடைபெற்றாலும் கூட, அந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர லட்சக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.
ஜூலை 5-ஆம் தேதி வரை விமானப்படை பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் உள்ளதால் 2.72 லட்சம் என்ற எண்ணிக்கையானது மேலும் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அக்னி வீரர்களுக்கு ”பொண்ணு” கிடைக்காது.. பகீர் கிளப்பிய மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக்
அக்னி பாத்
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதியன்று அக்னி பாத் திட்டம் குறித்து அறிவித்தார். இளைஞர்களை ராணுவத்தில் தற்காலிகமாக பணி நியமனம் செய்வதே இந்த அக்னி பாத் திட்டமாகும். இதன்மூலம் 46 ஆயிரம் பேரை வேலைக்கு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே பணி பாதுகாப்பின்மையை சுட்டிக்காட்டி நாடு முழுவதும் ராணுவப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் அக்னி பாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2.72 லட்சம் விண்ணப்பம்
இப்படி ஒரு பக்கம் போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும் கூட, அக்னி பாத் திட்டத்தின் கீழி ராணுவப் பணியில் சேர விண்ணப்பங்களும் குவிந்து வருகின்றன. அதன்படி இந்தியா விமானப்படையில் பணிக்கு சேர வெறும் 7 நாட்களில் மட்டும் இரண்டே முக்கால் லட்சம் பேர் நாடு முழுவதும் இருந்து விண்ணப்பித்துள்ளனர். விமானப்படையில் பணிக்கு சேர்க்கும் நடவடிக்கை கடந்த 24-ஆம் தேதி தொடங்கி வரும் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எண்ணிக்கை கூடும்
விமானப்படையில் சேரவே இவ்வளவு பேர் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றால் இன்னும் கடற்படை, தரைப்படை என முப்படைகளிலும் பணிக்கு சேர பல லட்சம் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என திட்டவட்டமாக மத்திய அரசு அறிவித்ததுடன் , அக்னிபாத் திட்டத்தில் பணியில் சேருபவர்களுக்கு என்னென்ன வகைகளில் முன்னுரிமை தரப்படும் என்ற விவரத்தையும் வெளியிட்டது.
காங்கிரஸ் எதிர்ப்பு
நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அக்னி பாத் திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த திங்கள்கிழமை அன்று நாடு முழுவதும் இந்த திட்டத்தை திரும்பப்பெறக் கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டன.