தலைமைச் செயலகத்தில் தயாராகி வரும் 2 அறைகள்! பார்த்து பார்த்து உருவாக்கும் அமைச்சர் எ.வ.வேலு!
சென்னை: சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களுக்கான 2 புதிய அறைகள் தயாராகி வருவதால், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது உறுதியாகியுள்ளது.
இதேபோல் அவருடன் புதிதாக ஒருவரும் அமைச்சராகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தற்போதைய அமைச்சரவையில் விரைவில் மாற்றங்கள் நிகழுமே தவிர, பதவி பறிப்பு என்பது பெரிதாக இருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின்
தமிழக அமைச்சரவை இம்மாத இறுதிக்குள் மாற்றியமைக்கப்படும் என கூறப்படும் நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது உறுதி ஆகியுள்ளது. அமைச்சர் மூர்த்தி சில நாட்களுக்கு முன்னர் இதனை வெளிப்படையாகவே பொதுக்கூட்டம் மேடை ஒன்றில் பேசியிருந்தார். இப்போது என்னவென்றால் தலைமைச் செயலகத்தில் 2 புதிய அறைகள் தயார் செய்யப்பட்டு வரும் நிலையில், அதில் ஒரு அறையை அமைச்சர் எ.வ.வேலு பார்த்து பார்த்து நேரடியாக ஆலோசனைகள் வழங்கி உருவாக்கி வருகிறார்.
எ.வ.வேலு நேரடியாக
பொதுப்பணித்துறை அமைச்சரே நேரடியாக களமிறங்கி இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் என்றால் அந்த அறை நிச்சயம் உதயநிதி ஸ்டாலினுக்கு தான் என கோட்டை வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன. இதேபோல் மற்றொரு அறையும் புதிதாக உருவாகி வருவதால் உதயநிதியுடன் புதுமுகம் ஒருவரும் அமைச்சர் பொறுப்பேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள அமைச்சரவையில் பெரியளவில் பதவி பறிப்புகள் இருக்காது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துறை மாற்றங்கள்
காரணம் ஒருவர் பதவியை பறித்து அதை மகனுக்கு கொடுத்துவிட்டார் என்ற விமர்சனம் எழாமல் இருக்கும் வகையில், அமைச்சரவையில் இலாகா மாற்றங்கள் மட்டும் பெரியளவில் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், ராஜகண்ணப்பன், ஐ.பெரியசாமி போன்றோருக்கு வேறு துறைகள் மாற்றி வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
டெல்லி பிரதிநிதி
தலைமைச் செயலகத்தில் புதிதாக தயாராகி வரும் 2 அறைகளுடன் கூடுதலாக தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனுக்கும் புது அறை தயாராகி வருகிறது. பொதுப்பணித்துறை ஊழியர்கள் தினமும் பணிகளை வேகப்படுத்தி வருவதை வைத்து பார்த்தால் புத்தாண்டுக்கு முன்னரே புதிய அமைச்சரவை பட்டியல் வெளியாகும் எனத் தெரிகிறது.