போலாம் ரைட்.. நாளை காலை 6 மணி முதல்.. சென்னையிலிருந்து 200 பஸ்கள்.. கிருமிநாசினியுடன் ஏற்பாடு செம!
சென்னை: சென்னையிலிருந்து நாளை காலை 6 மணிக்கு மேல் பல மாவட்டங்களுக்கும் 200 அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதையடுத்து பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்தன.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு, இப்போது, சிறிது சிறிதாக தளர்த்தப்பட்டு வருகிறது.
ஊரடங்கு தளர்வுகளை அமல்படுத்த தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

11 மாவட்டங்களுக்கு அதிக கெடுபிடி
முதல் வகை மாவட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்கள் அமைந்துள்ளன. இந்த 11 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்ததால் தளர்வுகள் குறைந்த அளவில் குறைக்கப்பட்டன.

23 மாவட்டங்கள்
அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பூர், தேனி, தென்காசி, நெல்லை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர், ஆகிய 23 மாவட்டங்கள் 2வது வகையில் உள்ளன.

3வது பிரிவு மாவட்டங்கள்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் 3வது வகை பிரிவில் இடம் பெற்றுள்ளன. நேற்று முன்தினம் 6வது கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது 2வது வகையில் உள்ள 23 மாவட்டங்களிலும் 28ம் தேதி முதல் பேருந்து சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

27 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் பஸ் சேவைகள்
அதன்படி 27 மாவட்டங்களில் நாளை திங்கள்கிழமை அதாவது ஜூன் 28ம் தேதி காலை 6 மணி முதல் அரசு பஸ் போக்குவரத்து சேவை தொடங்க உள்ளது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வழக்கம்போல பஸ் போக்குவரத்து சேவை இருக்கும். சென்னையில் இருந்து ஏற்கனவே காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு பேருந்து சேவை நடந்து வருகிறது. நாளை முதல் கூடுதலாக 23 மாவட்டங்களுக்கு பஸ் சேவை தொடங்க உள்ளது.

200 பஸ்கள்
இதையடுத்து, சென்னையில் இருந்து முதல் கட்டமாக 23 மாவட்டங்களுக்கு 200 பஸ் சேவைகளை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிக கட்டுப்பாடுகள் உள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற முக்கிய நகரங்களுக்கு சென்னையில் இருந்து பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
ஒவ்வொரு பஸ்சிலும் 50 சதவீத பயணிகளுக்கே அனுமதி வழங்கப்படும். முக கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை ஒவ்வொருவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

கிருமி நாசினி பணிகள்
நாளை முதல் அரசு பேருந்து சேவைகள் துவங்க உள்ள நிலையில், அவைகளை இயக்குவதற்கான ஆயத்தப் பணிகளில் தற்பொழுது போக்குவரத்து துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளில் போக்குவரத்து கழக ஊழியர்கள் முனைப்புகாட்டி வருகிறார்கள். அண்டை மாநிலமான, கர்நாடகாவில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பயணிகள் போக்குவரத்து கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. தமிழகத்தில், குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் பேருந்து போக்குவரத்து தொடங்கினாலும் அது மாநில எல்லையான ஜூஜூவாடி வரை மட்டும் இயங்கும். இந்தநிலையில் ஒசூர் பேருந்து பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் தயார்ப்படுத்தி கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications