கொரோனா வேக்சின் ஆராய்ச்சியின் முதுகெலும்பு.. டிஎன்ஏ டெக்னாலஜியில் தமிழர் சாதனை.. யார் இந்த ஷங்கர்?
சென்னை: டிஎன்ஏ ஜீனோம் ஆராய்ச்சியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஷங்கர் பாலசுப்ரமணியன் நிகழ்த்திய ஆராய்ச்சிதான் பல்வேறு கொரோனா வேக்சின் கண்டுபிடிப்புகளில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆராய்ச்சியாளர்கள் ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவரும் நிகழ்த்திய டிஎன்ஏ ஆராய்ச்சி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது.
Recommended Video
டிஎன்ஏ ஜீனோம் ஆராய்ச்சியில் புதிய முறையை அறிமுகப்படுத்தியதற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவருக்கும் 2020ம் ஆண்டுக்கான மில்லினியம் டெக்னாலஜி பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது டெக்னாலஜி துறையில் நோபலுக்கு இணையானதாக பார்க்கப்படுகிறது.
27 வருடங்கள் இவர்கள் நிகழ்த்திய ஆராய்ச்சி மூலம் இனி டிஎன்ஏவை மிக எளிதாக sequence செய்ய முடியும், அதாவது டிஎன்ஏவின் ஜீனோமை இனி எளிதாக பகுப்பாய்வு செய்ய முடியும். புதிய வைரஸ்களின் டிஎன்ஏவை ஒரே நாளில் ஆராய்ச்சி செய்து, அதற்கு எதிரான மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகளை முடுக்கிவிட முடியும்.
சென்னை
தொழில்நுட்ப துறையில் மிக உயரிய விருதான மில்லினியம் டெக்னாலஜி பரிசை வென்று இருக்கும் ஷங்கர் பாலசுப்ரமணியன் சென்னையை பூர்வீகமாக கொண்ட தமிழர். தற்போது பிரிட்டனில் குடியுரிமை பெற்று இவர் அங்கு உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ட்ரினிட்டி கல்லூரியில் படித்து தற்போது கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ வேதியியல் பேராசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளராக இவர் இருக்கிறார்.
ஆராய்ச்சியாளர்
அதோடு சொலெக்ஸ்சா மற்றும் எபிஜெனிடிக்ஸ் ஆகிய ஆராய்ச்சி மையங்களின் நிறுவனர்களில் ஒருவராகவும் இவர் உள்ளார். 1966ல் இவர் சென்னையில் பிறந்தார். பின்னர் 1967ல் பிரிட்டனில் இவரின் குடும்பம் குடியேறியது. பின்லாந்தில் உள்ள டெக்னாலஜி அகாடமி பின்லாந்து என்ற அமைப்பு மூலம் வழங்கப்படும் மில்லினியம் டெக்னலாஜி பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. டிஎன்ஏ ஜீனோம் ஆராய்ச்சியில் புதிய முறைகளை புகுத்தியதற்காக ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவருக்கும் இந்த பரிசு சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா
இவர்களின் டிஎன்ஏ ஆராய்ச்சிதான் கொரோனா வேக்சின் ஆராய்ச்சியிலும் முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது. Next Generation DNA Sequencing (NGS - என்ஜிஎஸ்) என்று அழைக்கப்படும் டிஎன்ஏ ஆராய்ச்சி முறையில் இவர்கள் நிகழ்த்திய கண்டுபிடிப்பு மூலம் டிஎன்ஏ ஆராய்ச்சி எளிதானது. என்ஜிஎஸ் முறை மூலம் புதிய டிஎன்ஏக்களை ஒரே நாளில் ஆராய்ச்சி செய்து முடிவுகளை அறிவிக்க முடியும்.
ஆராய்ச்சி
அதாவது ஒரு டிஎன்ஏவை ஜீனோமை ஒரே நாளில் ஆராய்ந்து அதன் பண்புகள், செயல்பாடுகள், ஆற்றல்கள் என் என்று அனைத்து விதமான விஷயங்களையும் ஒரே நாளில் கண்டுபிடிக்க முடியும். புதிதாக ஒரு வைரஸ் உருவாகிறது என்றால் அதன் டிஎன்ஏவை உடனே என்ஜிஎஸ் முறை மூலம் ஆராய்ச்சி செய்து, அதன் பண்புகளை ஒரே நாளில் கண்டுபிடிக்க முடியும். முன்பெல்லாம் இதற்கு பல மாதங்கள் எடுத்த நிலையில் ஷங்கர் பாலசுப்ரமணியன் மற்றும் டேவிட் க்ளேனர்மேன் இருவரும் அறிமுகப்படுத்திய முறை மூலம் டிஎன்ஏவை ஒரே நாளில் மிக எளிதாக ஆராய முடியும்.
உதவியது
இவர்களின் ஆராய்ச்சிதான் கொரோனா வைரஸின் dna sequencingல் உதவியது. கொரோனாவின் பண்புகள் என்ன, அதன் புரோட்டின் ஸ்பைக்குகள் எப்படி இருக்கின்றன என்பது உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உதவியது. கொரோனா வைரஸ் குறித்து 2020 நடந்த பல ஆராய்ச்சிகளில் இவர்களின் என்ஜிஎஸ் முறை பயன்படுத்தப்பட்டது. இவர்களின் என்ஜிஎஸ் தொழில்நுட்பம் மூலம்தான் கொரோனா குறித்து வேகமாக ஆராய்ச்சி செய்து, அதன் விளைவாக வேகமாக வேக்சின்களை உருவாக்க முடிந்தது.
கொரோனா வைரஸ்
என்ஜிஎஸ் முறை இல்லை என்றால் இப்போது பல வேக்சின்களை உருவாக்கியது போல உருவாக்கி இருக்க முடியாது. ஒரு சில வேக்சின்கள் மட்டுமே தற்போது நடைமுறைக்கு வந்து இருக்கும். ஆனால் இவர்கள் உருவாக்கிய என்ஜிஎஸ் மூலம், கொரோனா வைரஸை வேகமாக ஆராய்ச்சி செய்து, அதன் பண்புகளை தெரிந்து கொண்டனர். இது வேக்சின் ஆராய்ச்சிக்கும் முதுகெலும்பாக இருந்தது.
தமிழர்
சென்னையை சேர்ந்த தமிழர் ஷங்கர் பாலசுப்ரமணியன் இந்த ஆராய்ச்சியில் பங்கு வகித்தது பெருமையான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஒரு டிஎன்ஏவை பல லட்சம் பகுதிகளாக பிரித்து, அந்த பகுதிகள் அனைத்தையும் ஒரே நேரத்தில் ஒன்றாக ஆய்வு செய்து அதன் ஜீனோமை வகைப்படுத்துவதுதான் Next Generation DNA Sequencing (NGS - என்ஜிஎஸ்) ஆகும். இந்த துரிதமான முறையை உருவாக்கியதற்காகவே மில்லினியம் டெக்னலாஜி பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.