"சதுரங்க ஆட்டம்".. கமலாலய வாசற்படியில், அதிமுக புள்ளிகள் "வெயிட்டிங்".. நறுக்குனு சொன்ன தயாநிதி மாறன்
கமலாலயத்தில் அதிமுக ஆதரவு கேட்டு சென்றதை தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்
சென்னை: இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லக்கூடிய அதிமுக, நோட்டாவிற்கு போட்டியிடுகின்ற பாஜக அலுவலகத்தில் காத்துக் கிடக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்று திமுக எம்பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.
வரப்போகும் ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில், பாஜக தனித்து போட்டியிடுவதா? அல்லது அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தருவதா? என்ற குழப்பத்தில் உள்ளது.
அநேகமாக இன்று அல்லது நாளைக்குள் தன் முடிவை பாஜக வெளிப்படுத்தும் என்று தெரிகிறது.. ஆனால், அதிமுக களத்தில் குதித்துள்ளது..
கூட்டணிக்கு சீட்டை ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேரடியாகவே போட்டியிட போகிறது அதிமுக.. அதாவது, எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் இரு தரப்புமே போட்டியிட போகிறார்கள்.. அதனால், அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களை, முன்னாள் முதல்வர் எடப்பாடி தரப்பினரும், ஓபிஎஸ் தரப்பினரும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேபி முனுசாமி, தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள், கமலாலயத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கேட்டார்கள்..
அண்ணே அங்க போகாதீங்க.. மீம்ஸ் போட்ருவாங்க! அமைச்சர் கே.என்.நேருவை எச்சரித்த தயாநிதிமாறன் எம்.பி.!
கமலாலய கேட்
அதேபோல, ஓபிஎஸ் தலைமையில் அவரது அணியினர் கமலாலயம் சென்று பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர்... இப்படி 2 தரப்புமே அடுத்தடுத்து ஆதரவு கோரியுள்ள நிலையில் பாஜவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? யாருக்கு ஆதரவை தரப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு எகிறி கொண்டிருக்கிறது.. இது ஒருபக்கம் இருந்தாலும், இவர்கள் 2 பேருமே, கமலாலயம் சென்று ஆதரவு கேட்டது பேசும்பொருளாகி வருகிறது.. இதுதொடர்பாக பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனும் இதுகுறித்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் விமர்சித்திருந்தார்..
தயாநிதி மாறன்
அதில், "தேடி வந்து ஆதரவு கொடுத்த காலம் போய், ஆதரவைத் தேடி ஓடுகிற காலம் வந்துவிட்டதே" என பதிவிட்டிருந்தார்.. அதுபோலவே, அதிமுக ஆதரவு கேட்ட சம்பவம் சோஷியல் மீடியாவிலும் விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது.. இந்நிலையில், திமுக எம்பி தயாநிதி எம்பியும் இதுகுறித்த தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.. சென்னை பிராட்வே ஆசீர்வாதபுரத்தில் நவீன வசதியுடன் கட்டப்பட்ட புதிய உடற்பயிற்சி கூடம் மற்றும் விளையாட்டு மைதானத்தை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் இளைஞர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.
கமலாலயம் வாசல்
நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி தயாநிதிமாறன், "கொள்ளை வாசல் வழியாக பாஜக தமிழகத்தை ஆட்டி படைக்கலாம் என்று இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு இங்கே நடந்த சதுரங்க ஆட்டத்தில் முழுக்க முழுக்க பாஜகவின் கட்டுப்பாட்டில் தான் அதிமுக இருந்தது. பாஜகவினர் முதலில் ஜெயலலிதா காலில் விழுந்து கொண்டு இருந்தனர். பிறகு தற்போது பாஜக காலில் அவர்கள் விழும் நிலைமை வந்துவிட்டது. இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லக்கூடிய அதிமுக நோட்டாவிற்கு போட்டியிடுகின்ற பாஜக அலுவலகத்தில் காத்துக் கிடக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இதை வைத்து பார்த்துவிடலாம் அதிமுகவின் நிலைமை எந்த அளவிற்கு கீழே சென்றுள்ளது'' என்று தயாநிதி மாறன் காட்டமாக அதிமுகவை விமர்சித்துள்ளார்..
தெம்பு புதுசு
அதிமுகவை இப்படி பலரும் விமர்சித்து வருவது, அக்கட்சிக்கான பலவீனமாக பார்க்கப்பட்டாலும், பாஜகவுக்கு இதெல்லாம் தெம்பை தந்துவருவதாகவே சொல்கிறார்கள்.. "தமிழ்நாட்டில் நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி" என்று விடாமல் சொல்லி வரும்நிலையில், இப்போது பிரதான எதிர்க்கட்சியையே தங்கள் அலுவலக வாசலில் நிற்க வைத்ததும், பாஜக தங்கள் வளர்ச்சிக்கான அடையாளமாக பார்க்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.