இலாகாவுக்கு வேட்டு? ஸ்டாலின் முடிவால் பதைபதைத்த 3 அமைச்சர்கள்! சைஸா காய்நகர்த்தும் 2 தலைகள்! ஓஹோ!
சென்னை : உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என அத்தனை அமைச்சர்களும் குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது அமைச்சரவை மாற்றம் நெருங்கும் சூழலில் சில அமைச்சர்கள் பதற்றத்தில் இருக்கிறார்களாம்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்காக, தனது துறை மாற்றப்படுமா? அல்லது அமைச்சரவையில் இருந்தே கழற்றிவிட்டு விடுவார்களோ என கோட்டை மாவட்ட அமைச்சர் பீதியில் இருக்கிறாராம்.
அதேபோல, சீனியர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு இலாகா மாற்றி முக்கியத்துவம் வாய்ந்த துறை ஒதுக்கப்பட இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தென் மாவட்டங்களைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் பதைபதைப்பில் இருக்கிறார்களாம்.
காசியில் பாரதியார் நினைவு இல்லம்.. சிலையை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்! ஆர்வமாக குவிந்த மக்கள்
அமைச்சரவையில் உதயநிதி
திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதலே, உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போது அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற கேள்விகள் எழுந்தன. திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடையும்போது இந்தக் குரல் மேலும் வலுத்தது. திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் எனப் பலரும், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என போட்டி போட்டு பேசி வந்தனர். இந்நிலையில், தற்போது அதற்கு முதல்வர் ஸ்டாலின் பச்சைக்கொடி காட்டி, தேதியும் குறித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. உதயநிதிக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பதைபதைப்பில் அமைச்சர்
இந்நிலையில், சில அமைச்சர்கள் தங்கள் இலாகாக்கள் பறிக்கப்படுமோ என அச்சத்தில் இருக்கிறார்களாம். இதில், சுற்றுச்சூழல் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சராக இருக்கும் சிவ.வீ. மெய்யநாதனிடம் இருந்து விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையை பிரித்து உதயநிதிக்குக் கொடுக்கப்போவதாக பேச்சுகள் அடிபடுவதால், அமைச்சர் மெய்யநாதன் பதைபதைப்பில் இருக்கிறாராம்.
கல்தா?
தன்னிடம் இருக்கும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் இலாகாக்களை உதயநிதியிடம் கொடுத்துவிட்டு, சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறையை விட்டுவைப்பார்களா, அல்லது அமைச்சரவையில் இருந்தே கல்தா கொடுப்பார்களா என அச்சத்தில் இருந்து வருகிறாராம். முன்பிருந்தே தனது தனது துறைதான் உதயநிதிக்கு வழங்கப்பட இருப்பதாக பேச்சு அடிபட்டு வருவதால், கட்சியின் சீனியர்களிடம் விசாரித்து வருகிறாராம் அவர்.
பதவி தப்புமா?
துறை வேண்டுமானால் மாறலாம், தலைவருக்கு உங்கள் மீது எந்த அதிருப்தியும் இல்லை, அமைச்சரவையில் இருந்து தூக்க மாட்டார், வேறு சிலர் பெயர் தான் லிஸ்ட்டில் அடிபடுகிறது என சீனியர்கள், மெய்யநாதனுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார்களாம். மேலும், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சில அமைச்சர்கள், தங்கள் பதவி தப்புமா என பயத்தில் இருக்கிறார்களாம்.
சீனியர் அமைச்சர்
இதற்கிடையே, சீனியரான ஐ.பெரியசாமி, தனக்கு, முக்கியத்துவம் இல்லாத கூட்டுறவுத்துறையை கொடுத்து விட்டார்களே என ஆரம்பம் முதலே அதிருப்தியில் இருந்து வருகிறார். இதன் காரணமாகவே, அரசு இல்லத்தில் தங்காமல், சென்னை வந்தால் தனியார் ஹோட்டலிலேயே இருந்து வருகிறார் ஐ.பெரியசாமி. பல வகைகளில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியும், தனக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதால் அதிருப்தியில் இருந்தார்.
இலாகா மாற்றம் உறுதி
இந்நிலையில், அவருக்கு வேறு முக்கியமான துறையை ஒதுக்குவதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறாராம். சமீபத்தில், தென்காசிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் முதல்வர் ஸ்டாலின் சென்றபோது அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோரும் முதல்வருடன் சென்றனர். அப்போது, ஐ.பெரியசாமியிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார் முதல்வர். அப்போதே, விரைவில் உங்களுக்கு இலாகா மாற்றித் தருகிறேன் என்றும் உறுதி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆஹா.. 2 அமைச்சர்கள் துறை
ஐ.பெரியசாமிக்கு, வருவாய்த்துறை அல்லது ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. வருவாயைத் துறையை கையில் வைத்திருக்கும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும், ஊரக வளர்ச்சித்துறையைக் கையில் வைத்திருக்கும் கே.ஆர்.பெரியகருப்பனும் இதனால் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். குறிப்பாக, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், இந்த தகவல் கசிந்ததுமே முதல்வரிடம் பேசி, தனது துறையை மாற்ற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இலாகாவுக்கு வேட்டு
இதனால், யார் இலாகாவுக்கு வேட்டு வைக்கப்படும் என அமைச்சர்கள் வட்டாரத்தில் பெரும் பஞ்சாயத்தே ஓடிக் கொண்டிருக்கிறதாம். இதற்கிடையே, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக இருக்கும் ராஜகண்ணப்பனும், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜும், தங்களுக்கு வேறு வலுவான துறைகளை கேட்டுக் கொண்டிருப்பதாகவும் திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
புது பஞ்சாயத்து
ஆகமொத்தம், ஐ.பெரியசாமியை சமாதானப்படுத்த நடக்கும் துறை மாற்றத்தால், புதுப் பஞ்சாயத்துகள் கிளம்பப்போகின்றன என்கிறார்கள் திமுக வட்டாரத்தில். அமைச்சர்கள் இடையே அதிருப்திகள் வெடிக்காமல், முதல்வர் ஸ்டாலின் எப்படி இந்த அமைச்சரவை மாற்றம், இலாகா மாற்றம் விஷயத்தைக் கையாளப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.