புத்தாண்டில் பறந்த ஆர்டர்! 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! 27 பேருக்கு பதவி உயர்வு..முழு விபரம்
சென்னை : தமிழகத்தில் புத்தாண்டு நாளான இன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர்
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டின் போது அரசு பணியில் இருக்கும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கான உத்தரவு ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிடப்படுவது வழக்கமாக இருக்கிறது. தமிழகத்தில் நேற்று 20 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இன்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

ஐபிஎஸ் அதிகாரிகள்
அதன்படி அருண், கல்பனா நாயக், அவி பிரகாஷ், வித்யா ஜெயந்த் குல்கர்னி, பிரவீன் குமார் அபிநபு, நரேந்திரன் நாயர், ரூபேஷ் குமார் மீனா, சத்ய பிரியா, விஜேயந்திர பிதாரி, சி.விஜயகுமார், திஷா மிட்டல், துரை, மகேஷ், அபிநவ் குமார், சிபி சக்ரவர்த்தி, ஜியாவுல் ஹக், பி.விஜயகுமார், பகலவன், சாந்தி, விஜயலெட்சுமி, மூர்த்தி, ஜெயச்சந்திரன், மனோகர், தர்மராஜன், சமந்த் ரோஹன் ராஜேந்திரா ஆகியோர் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் பனீந்தர ரெட்டி வெளியிட்டுள்ளார்.

பதவி உயர்வு
அருண் ஐபிஎஸ் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு முன்னதாக அவர் காவல்துறை பயிற்சி பள்ளி ஐஜியாக இருந்து வந்தார் .ஊழல் கண்காணிப்பு துறை ஐஜி கல்பனா நாயக், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். உளவுத்துறை ஐஜியாக இருந்த ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ், தமிழ்நாடு காவல்துறை பயிற்சி மையத்தில் ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டு இருக்கிறறார். இதேபோல அபி பிரகாஷ், வித்யா ஜெயந்த் குல்கர்னி ஆகியோர் ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பணியிட மாற்றம்
ஐபிஎஸ் அதிகாரி நரேந்திரன் நாயருக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கி மதுரை மாநகர ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் டிஐஜி சத்ய பிரியாவுக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கி, திருச்சி மாநகர ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர ஆணையர் அபிநவ் குமாருக்கு ஐஜியாக பதவி உயர்வு வழங்கி, திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

என்ன பதவி?
மயிலாப்பூர் துணை ஆணையராக பணியாற்றி வந்த திஷா மிட்டல் ஐபிஎஸ் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளதோடு சென்னை கிழக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராகவும், தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை தெற்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இதேபோல ஆவடி சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் மகேஷ் உளவுத்துறை டிஐஜி ஆகவும் கள்ளக்குறிச்சி எஸ்பி பகலவன் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

எஸ்பி - டிஐஜி
விருதுநகர் மாவட்ட எஸ்பி மனோகரன் டிஐஜியாக பதவி உயர்வு பெற்று சென்னை காவல்துறை தலைமையகத்தின் டிஐஜியாகவும், பெரம்பலூர் எஸ்பி மணி ஐபிஎஸ் தாம்பரம் காவல் ஆணையத்தின் துணை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதேபோல திருச்சி ரயில்வே காவல்துறை எஸ்பி அதிவீரபாண்டியன் தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகவும், சிவகங்கை எஸ்பி செந்தில்குமார் திருச்சி ரயில்வே காவல்துறை எஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications