கோயில் சொத்துக்களை ஆக்கிரமித்தவர்கள் மீது பாய போகும் புதிய சட்டம்.. ஆக்சனில் இறங்கிய அறநிலையத்துறை!
சென்னை : கோயில் நிலங்கள், கட்டிடங்களை ஆக்கிரமித்தால் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்க வழிவகை செய்யும் வகையில் அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்திலுள்ள சேர, சோழ, பாண்டிய, பல்லவ உள்ளிட்ட மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோயில்கள் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது தமிழ்நாட்டில் இந்து சமய அறிநிலையத்துறையின் கீழ் 44,218 கோயில்கள் உள்ளன.
இந்த கோயில்களுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக 4,78,283 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் உள்ளதாக கூறப்படுகிறது

வாடகை
இந்த நிலங்களில் பெரும்பாலானவை குத்தகை, வாடகைக்கு விடாமல் அப்படியே போடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள் ஆக்கிரமித்து உள்ளார்கள். ஒரு சிலர் அவர்களது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கோயில் நிலங்களை பயன்படுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

ஆக்கிரமிப்பு
இந்நிலையில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறிய சென்னை உயர் நீதிமன்றம் இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், கோயில் செயல் அலுவலர்கள், ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவினர் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் கோயில் நிலத்தை சட்ட விரோதமாக நிலக்கிரயம் செய்யப்பட்டிருக்கும் இனங்கள், மூன்றாம் நபர் அனுபவத்தில் உள்ள இனங்களை கண்டறிந்து வருகிறார்கள்.

கோயில் அலுவலர்கள்
அறநிலையத்துறைக்கு இக்குழுக்கள் சார்பில் அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களை நிலங்களை மீட்கவும், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

சட்ட நடவடிக்கை
எனினும் சிலர் வீட்டை காலி செய்யாமல் அதிகாரிகளை மிரட்டி வருகிறார்கள் அந்த மாதிரியான நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்து அறநிலையத்துறை சட்டம் 79 பி (3)ன் கீழ் ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

புதிய திருத்தம்
இதனிடையே அறநிலையத்துறை உயர்அதிகாரிகள் சட்ட வல்லுனர்களிடம் இதை திருத்துவது குறித்து கருத்து கேட்டுள்ளனர்.அவர்கள் அளித்த பரிந்துரைக்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வரப்படும். இந்த சட்டப்படி ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோயில் செயல் அலுவலர்/தக்கார்/ ஆய்வர் ஆகியோருக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்பட உள்ளது.

ஆக்கிரமிப்புக்கு செக்
இவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு புகார் அளிக்கலாம். இந்த புகார் மூலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்க முடியும் என்று அறநிலையத்துறை வட்டாரங்கள் கூறின.












Click it and Unblock the Notifications