குறுகி நிற்கிறேன்.. உடனே விலகுங்க! ஸ்டாலின் தந்த கடும் "வார்னிங்".. இப்போ பாருங்க.. வெடித்த மோதல்!
சென்னை: கரூர் மாவட்ட புலியூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற தேர்தல் தமிழ்நாடு அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
கடந்த பிப்ரவரியில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு முழுக்க திமுக கூட்டணிதான் அபார வெற்றியை பெற்றது. ஆளும் கட்சியின் வெற்றி என்றாலும் கூட எதிர்பார்த்ததை விட அதிக இடங்களை திமுக பெற்றது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணிதான் கைப்பற்றி உள்ளது.
பெரும்பான்மையான நகராட்சி சேர்மேன், பேரூராட்சி சேர்மேன் பதவிகளையும் திமுகதான் கைப்பற்றி உள்ளது.
952 மாநகராட்சி வார்டுகளை திமுக வென்றுள்ளது. 2360 நகராட்சி வார்டுகளை திமுக கைப்பற்றி உள்ளது. அதேபோல் 4388 பேரூராட்சி வார்டுகளை திமுக மொத்தமாக கைப்பற்றி வென்றுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் சொன்ன 'ஆட்டுக்குட்டி’ கதை.. ஆரவாரம் செய்த மாணவிகள்.. 'கருணாநிதி சொன்னது- இது கடமை’
என்ன நடந்தது?
அதன்பின் நகராட்சி தலைவர், மாநகராட்சி மேயர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடந்தது. இதில் கும்பகோணம் மாநகராட்சி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இதே மறைமுக தேர்தலில் சில குளறுபடிகளும் நடந்தன. தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தலில் சில இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த இடங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு வென்றனர். இது அப்போது பெரிய சர்ச்சையானது.
சர்ச்சை
விசிக, காங்கிரஸ், சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வென்றனர். இதன் காரணமாக தேர்தல் நாள் அன்று விசிக, சிபிஎம் கட்சியினர் பல இடங்களில் போராட்டம் செய்தனர். இது பெரிய மோதலாக வெடித்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டார் . இப்படி தேர்தலில் வென்றவர்கள் உடனே பதவி விலக வேண்டும். என்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினும் உத்தரவிட்டார். ஆனால் இதை கேட்காமல் இருந்த நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
அறிக்கை
அப்போது முதல்வர் ஸ்டாலினும் ஒரு காட்டமான அறிக்கை வெளியிட்டு இருந்தார். முதல்வர் ஸ்டாலின் அறிக்கையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது.
அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது.
பேரறிஞர் அண்ணா சொன்ன "கடமை கண்ணியம் கட்டுப்பாட்டில்" மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
விளாசல்
ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மாவட்ட கழகச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன், என்றும் முதல்வர் ஸ்டாலின் அப்போது சொல்லி இருந்தார்.
கூட்டணி
முதல்வர் ஸ்டாலின் உத்தரவை ஏற்று சில நிர்வாகிகள் பதவியும் விலகினார். இன்னும் பலர் பதவி விலகாமல் உள்ளனர். தேர்தலில் கூட்டணி கட்சிகளின் தோல்விக்கு காரணமாக இருந்ததாக கூறி நகர செயலர்கள் ஏன் கடலூர் எம்எல்ஏ அய்யப்பன் உட்பட பலர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பூந்தமல்லி நகர செயலாளர் ரவி குமார், கன்னியகுமார் கிழக்கு மாவட்ட மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன் அவரின் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த நிலையில்தான் தற்போது இதே போன்ற சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
என்ன நடந்தது?
கரூர் மாவட்ட புலியூர் பேரூராட்சிக்கு முன்பு மறைமுக தலைவர் தேர்தல் நடந்த நிலையில் அங்கு திமுகவின் புவனேஸ்வரி வெற்றிபெற்றார். இந்த தேர்தலில் பேரூராட்சி தலைவர் பதவி சிபிஎம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் சிபிஎம் சார்பாக வெற்றிபெற்ற கவுன்சிலர் பேரூபாட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் புவனேஷ்வரி வென்ற நிலையில், தலைமையின் உத்தரவை ஏற்று அவர் ராஜினாமா செய்தார். இதனால் அங்கு தலைவர் பதவி காலி ஆனது.
இரண்டு தேர்தல்
இதையடுத்து இரண்டு முறை அங்கு மறைமுக தேர்தல் நடந்தது. ஆனால் பெரும்பாலான திமுக கவுன்சிலர்கள் இந்த தேர்தலுக்கு வரவில்லை. இன்று மீண்டும் நடந்த மறைமுக தேர்தலில் மீண்டும் புவனேஷ்வரி தலைமையின் கட்டுப்பாட்டை மீறி சிபிஎம் கலாராணிக்கு எதிராக போட்டியிட்டு வென்றார். இந்த நிலையில் தற்போது கலாராணி அங்கு தர்ணா போராட்டம் செய்து வருகிறார். முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே இதில் வார்னிங் கொடுத்து இருந்த நிலையில் திமுக கவுன்சிலர் புவனேஷ்வரி மீண்டும் பேரூராட்சி தலைவரான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.