இளையராஜா பாடல் எழுதியுள்ளார்.. வைரமுத்து இசையமைக்க முடியுமா.. ரசிகையின் தடதடக்கும் பதிவு!
சென்னை: வைரமுத்து "இசை பெரியதா? பாடல் பெரியதா" என்று இளையராஜாவைத் தாக்கி பேசியது பரபரப்பை கிளப்பி இருக்கும் நிலையில், இளையராஜா பாடலும் எழுதுவார் என ரசிகை ஒருவரின் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா தனது இசை தான் பெரியது என்று இசையை உருவாக்கியவருக்கு தான் பாடல் சொந்தம் எனக் கூறி நீதிமன்றத்தில் காப்பரிமை கேட்டு வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதனிடையே கவிஞர் வைரமுத்து பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை பற்ற வைத்துள்ளது. ஒரு பாடலில், இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருகிறது. இதில் என்ன சந்தேகம்? இசை எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது மொழி என பேசியிருந்தார்.
இதனையடுத்து இவர்களின் வார்த்தை போர் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி மோதலாகவேமாறிப் போயிருக்கிறது. இந்நிலையில் இளையராஜாவுக்கு ஆதரவாக நீண்ட பதிவொன்றை வெளியிட்டிருகிறார் ரசிகை ஒருவர். அதில்,"கரகாட்டக்காரன் படத்தின் துவக்கத்தில் title கார்டில்,"பாட்டாலே புத்தி சொன்னார்" என்கின்ற பாடல் ஒன்று வரும். சில வருடங்களாக அந்தப் பாடல் கங்கை அமரன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஏனென்றால் எனக்கு கங்கை அமரனின் பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும். கடந்த 10 வருடங்களாக அவருடைய பாடல்வரிகளை தேடி தேடி நேசித்துக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இந்தப் பாடல் அவரின் எழுத்து வகைமையில் இல்லாவிட்டாலும் அவராக இருக்கும் என்று கற்பனை செய்து வைத்திருந்தேன். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு தான் அது இளையராஜா எழுதிய பாடல் என்று தெரிய வந்தது. கொஞ்சம் சிலிர்த்து விட்டேன். ஏனென்றால் அந்தப் பாடல் வரிகள் மிக ஆழமாக தனி மனிதனின் தத்துவார்த்த பயணத்தை பேசியிருக்கும்."இளையராஜா தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்ட இடங்கள்" என்று ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறேன், அதில் இந்தப் பாடல் மிக முக்கியமாக இடம்பெறுகிறது.
"காளையர்கள் காதல் கன்னியரை கவர்ந்திட பாடல் கேட்டார்கள்.. ஏழைகளும் ஏவல் அடிமைகளாய் இருப்பதை பாடச் சொன்னார்கள்..கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலின் மெட்டு போடச் சொன்னார்கள்
தெருவோடு சேர்ந்திட திருவாசகம் தேவாரம் கேட்டார்கள் "பல நாட்களுக்கு இது சாதாரண வரிகளாக தோன்றியது. ஆனால் இது இளையராஜாவின் சமூக பார்வையை அதாவது தன்னுடைய சமூக பார்வையை தான் வந்த இடத்தில் இருந்து மிக அழகாக பேசுகிறது. உழைக்கும் மக்களுக்கு காதலை தவிர இன்பம் வேறு எதுவும் கிடையாது. அது மட்டுமே மலிவாக கிடைக்கக் கூடியது. ஆனால் அது அவர்களுக்கு புரியக்கூடிய அவர்களிடம் மொழியில் அவர்களுக்கு பரிச்சயம் பட்ட இசை வடிவங்களில் இசை கருவிகளில் இருந்து வரும் பொழுது அவர்களுக்கு அது காதலுக்கு மிக நெருக்கமாக இருந்தது.
பறையடித்துக் கொண்டே ஒரு பாட்டை பாட வேண்டும். "மச்சானை பார்த்தீர்களா மலைவாழை தோப்புக்குள்ளே" .அந்த மாதிரி. ஒரு பக்கம் உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்திருக்கிறார், சோசியலிச தொடர்பு இருக்கிறது. ஆகவே உழைக்கும் வர்க்க மக்களின் பிரச்சனைகளை சிறுவயது முதலே தன் அண்ணனோடு மேடைகளில் பாடியிருக்கிறார். பண்ணைகளில் ஏவலாட்களாய் இருந்தவர்களுக்கு தான் அதை எதிர்த்து இசை எழுதும் தெம்பும் இருக்கும்.
ஏழைகளின் குடிசை மிக சிறியதாக இருக்கும். பல நாட்களில் குழந்தைகளை உள்ளே படுக்க வைத்து விட்டு பெரியவர்கள் வெளியே படுத்துக் கொள்வார்கள். இளைஞர்கள் வளர வளர அவர்களுக்கு சில விஷயங்கள் புரிய ஆரம்பிக்கும். சத்தங்கள் மூலமாக. அப்பொழுது அவர்கள் அதை கற்பனை செய்து கொள்ள ஒரு இசை தேவைப்படுகிறது. அந்த இசையை அந்த இடத்திலிருந்து வந்த இளையராஜாவால் கொடுக்க முடிகிறது.
சேரியில் இருப்பவர்கள் ஊர் தெருவில் சேர்வதற்கு அவர்களுக்கு பக்தி தேவைப்படுகிறது. சிவக்குலம் என்று சொல்லி ஊர் தெருவொடு சேர்ந்து கொள்ள திருவாசகம் தேவாரமும் பாடலாக தேவைப்படுகிறது. "நான் படும் பாடுகள் அந்த ஏடுகள் அதில் எழுதினாலும் முடிந்திடாது" அவர் எப்பேர்பட்ட உயரத்தை அடைந்திருந்தாலும். அவள் எப்படிப்பட்ட புகழை பெற்றிருந்தாலும். அவர் மீது அவரின் அடையாளம் காரணமாக, அந்த அடையாளத்தை துறக்க அவர் எடுத்துக் கொண்ட சிரத்தைகள் காரணமாக அவர் மீது எழுந்த கடினமான விமர்சனங்கள் அவரை எப்படி எல்லாம் மன வாட்டத்திற்கு உட்படுத்தி இருக்கும் என்பதை இந்த வரியில் முடிப்பார்.
உண்மையிலே இளையராஜா நேரில் தன்னை பெரிதாக வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை. ஆனால் பாடல்களில் அவர் நம்மிடம் கெஞ்சி கெஞ்சி கொஞ்சி கொஞ்சி அவர் நிலையை நம்மிடம் எடுத்துரைக்கிறார். ஆகவேதான் இந்தப் பாடல் வரிகள் மிகச்சிறந்தவை. இதுபோன்று பல பாடல்களை இளையராஜா எழுதி இருப்பதாக சொன்னார். குறிப்பாக "இதயம் ஒரு கோவில் " பாடல். இன்னும் சொல்லப்போனால் அந்தப் பாடலை குறித்து சமீப காலகட்டத்தில் ஒரு கச்சேரியில் பேசும் பொழுது "நான் அடிக்கடி பல பாடல்களை எழுதுவேன் "என்று சொன்னார். உதாரணத்திற்கு "அன்னக்கிளி உன்னை தேடுதே "பல்லவியை சொன்னார்.
உண்மையில் இளையராஜா வெறும் இசையமைப்பாளர் மட்டுமல்ல. அவர் ஒரு தேர்ந்த பாடலாசிரியர். மிக அற்புதமான பாடகர். நாம் இங்கு இசை பெரிதா , வார்த்தை பெரிதா என்று பேசிக் கொண்டிருக்கிறோம். உண்மையில் சொல்லப்போனால் இளையராஜாவால் பாடல் எழுத முடியும் இசையும் போட முடியும். வைரமுத்துவால் இளையராஜாவைப் போல் ஒரே ஒரு பாடல் இசையமைக்க முடியுமா?" என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை இளையராஜாவுக்கு ஆதரவாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications