அம்மா உணவகம்.. இட்லி துணிய ஏன் சுத்தம் செய்யல.. பெண் ஊழியரின் காதை கடித்த சூப்பர்வைசர்!
சென்னை: அம்மா உணவகத்தில் பணியாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஊழியரின் காதை சூப்பர்வைசர் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்கள், அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களுக்காக மலிவு விலையில் சுகாதார மற்றும் தரமான உணவு வழங்கும் வகையில் 'அம்மா உணவகம்' திட்டம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் 2013ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.
இந்தத் திட்டம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், திமுக ஆட்சியிலும் அம்மா உணவகம் திட்டம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக ஏராளமான சூப்பர்வைசர்களும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள இரு அம்மா உணவகத்தில் பெண் சூப்பர் வைசருக்கும், பெண் பணியாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அந்த மோதலில், பெண் சூப்பர்வைசர், அம்மா உணவகத்தில் பணியாற்றும் பெண் பணியாளரின் காதை கடித்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமரைச்செல்வி. இவர் சாலிகிராமம் வி.வி. கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெண் சூப்பர்வைசர் ராதிகா, இட்லி துணியை ஏன் சரியாக சுத்தம் செய்யவில்லை, ஒழுங்காக வேலையை பார் என்று தாமரைச்செல்வியை கண்டித்தார்.
அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் திடீரென இருவரும் கட்டி புரண்டு ஒருவரையொருவர் முடியைப் பிடித்துக் கொண்டு சரமாரியாக தாக்கி கொண்டனர். இதனால் அந்த இடத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து இந்த மோதலில் தாமரைச்செல்வியின் காதை ராதிகா கடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த தாமரைச்செல்விக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல்துறையினரிடம் தாமரைச்செல்வி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்மா உணவகத்தில் நடைபெற்றுள்ள இந்த மோதல் சம்பவம், ஊழியர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் இருவர் இதுபோல் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.