இவர்தான் செல்லூர் ராஜு.. வணக்கம் சொல்லுங்க.. மாஜி அமைச்சர் போல நடித்து.. பலரை ஏமாற்றிய கும்பல் ஷாக்-
சென்னை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு போல நடித்து இளம் பெண் உட்பட பலரை ஒரு கும்பல் நூதனமாக மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் செல்லூர் ராஜு. இந்த நிலையில் அவர் பதவி வகித்த கூட்டுறவுத்துறையில் வேலை வாங்கித்தருவதாக, செல்லூர் ராஜு போலவே நடித்து ஒரு மோசடி கும்பல் பலரை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் காயத்திரி. இவர் தான் ஏமாற்றப்பட்டது குறித்தும், செல்லூர் ராஜு போல நடித்து பெரிய கும்பல் ஒன்று பணமோசடி செய்தது குறித்தும் போலீசில் புகார் அளித்துள்ளார்.

காயத்திரி
இவர் சென்னையில் தனது சகோதரியோடு சேர்ந்து மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்த கடைக்கு அடிக்கடி வந்த சத்தியநாராயணன் என்பவர் காயத்திரிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி உள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தனக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறி, உங்களுக்கு கண்டிப்பாக வேலை வாங்கித்தருவேன் என்று சத்தியநாராயணன் கூறியுள்ளார். இதற்காக அந்த பெண்ணிடம் பணம் வாங்கி உள்ளார்.

பண மோசடி
முன் பணம், அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் கூறி மொத்தம் 7 லட்சம் ரூபாயை அந்த பெண்ணிடம் வாங்கி இருக்கிறார். அதன்பின் செல்லூர் ராஜு கையெழுத்து போட்டது போலவே பணியானை ஒன்றையும் வழங்கி உள்ளனர். உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது. விரைவில் போஸ்டிங் போடுவார்கள். போஸ்டிங் குறித்த அறிவிப்பு வரும் என்றும் கூறியுள்ளனர்.

ஆள்மாறாட்டம்
அதன்பின் செல்லூர் ராஜுவை சந்தித்து நீங்கள் நன்றி சொல்ல வேண்டும். அவருக்கு மாலையிட்டு மரியாதை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அதன்படியே சென்னை மத்திய கூட்டுறவு வங்கிக்கு காயத்திரியை அழைத்து சென்று உள்ளனர். அந்த பகுதியில் தூரத்தில் கூட்டத்திற்கு இடையே தனியாக நின்ற அதிமுக வேட்டி கட்டிய நபரை காட்டி, அதோ அங்கே இருக்கிறாரே அவர்தான் செல்லூர் ராஜு என்று மத்திய வயது நபரை காட்டி.. அவரிடம் நன்றி தெரிவிக்கும்படி கூறியுள்ளனர்.

நன்றி சொல்லுங்கள்
அவரை போய் பார்த்து நன்றி சொல்லுங்கள்.. மாலை போடுங்கள் என்று அந்த பெண்ணிடம் மோசடி கும்பல் கூறியுள்ளது. அந்த பெண்ணும் செல்லூர் ராஜு போல தோற்றம் கொண்ட அந்த நபர் அருகே சென்று நன்றி தெரிவித்துள்ளார். செல்லூர் ராஜுவை அருகில் பார்த்திராத அந்த பெண், அவர்தான் செல்லூர் ராஜு என்று நம்பி ஏமாந்து இருக்கிறார். அதன்பின் தனக்கு போஸ்டிங் வரும் என்று நினைத்தவர், கடைசி வரை போஸ்டிங் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

ஏமாற்றம்
அதன்பின் வேலை வாங்கித்தருவதாக கூறிய சத்தியநாராயணனும் போனை எடுக்காமல் தலைமறைவாகி உள்ளார். இதனால் வேலை கிடைக்காத விரக்தியில் தற்போது போலீசில் இந்த கும்பல் குறித்து காயத்திரி புகார் அளித்துள்ளார். முதல் கட்ட விசாரணையில் அந்த கும்பல் செல்லூர் ராஜு பெயரை சொல்லி, அவரை போல ஆள்மாறாட்டம் செய்து பலரை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மோசடி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications