ஓபிஎஸ்க்கு கூடிய சேலம் கூட்டம்! பரபரத்த உட்லாண்ட்ஸ் மீட்டிங்! சொந்த ஊரில் இபிஎஸ்க்கு புரட்சி படையா?
சென்னை : எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதற்கு போட்டியாக சென்னையில் தனியாக ஓபிஎஸ் தலைமையில் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிக அளவில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளதால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று மாலை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் இக்கூட்டம் நடந்தது.
அதிமுகவில் இருக்கும் 69 மாவட்ட செயலாளர்கள், 61 சட்டமன்ற உறுப்பினர்கள், அமைப்பு செயலாளர் உள்ளிட்ட 56 தலைமைக் கழக நிர்வாகிகள் என 160 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்
இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சிவி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில் பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளரும், ஓ.பன்னீர்செல்வத்தின் முன்னாள் ஆதரவாளருமான கேபி முனுசாமி கலந்து கொள்ளவில்லை. எடப்பாடி பழனிச்சாமி உடன் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகவும் அதன் காரணமாகவே கே பி முனுசாமி கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை எடப்பாடி தரப்பு திட்டவட்டமாக மறுத்தது.

கேபி முனுசாமி அதிருப்தி
எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகுந்த ஆதரவாக இருந்த கேபி முனுசாமிக்கு உரிய மரியாதை வழங்கவில்லை என்பதால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் இதன் காரணமாகவே ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என யூகங்கள் பரவி வருகின்றன. இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற கூட்டத் தொடரை எதிர்கொள்வது மக்களவைத் தேர்தல் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் ஏற்படுத்தி வரும் நெருக்கடிகளை சமாளிப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு நிகழ்ச்சிகளை பிரமாண்டமாக நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஓபிஎஸ் ஆலோசனை
அதே நேரத்தில் கட்சியில் நடைபெறும் சில உட்கட்சி மோதல்கள் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமி தனது அதிருப்தியை பதிவு செய்ததாகவும், சில மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்பட்டதை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்திய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலேயே போட்டி கூட்டம் நடத்தியது தற்போது தெரிய வந்திருக்கிறது. சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தனது ஆதரவாளர்கள் மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்களுடன் ஓபிஎஸ் நடத்திய இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து குறிப்பிடத்தகுந்த அளவில் ஆதரவாளர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

இபிஎஸ் ஆதரவாளர்கள்
குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து அதிக அளவில் நிர்வாகிகள் ஓபிஎஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெற்றதாகவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தாங்கள் செயல்பட தயாராக இருப்பதாக ஓ.பன்னீர் செல்வத்துக்கு உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு தங்கள் தரப்புக்கு சாதகமாக வரும் என நிர்வாகிகளிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம் அதற்கு பிறகு அதிமுக முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வரும் நிலையில் தற்போது தனது தரப்புக்கு ஆதரவளிக்கும் நிர்வாகிகளுக்கு உரிய மரியாதையும் பதவிகளும் வழங்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

கடும் அதிருப்தி
இதனால் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பாளர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல சட்டமன்ற கூட்டத்தொடரில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து தனது தரப்பில் இருக்கும் வைத்தியலிங்கம், ஐயப்பன் உள்ளிட்ட எம்எல்ஏக்களுக்கு ஓபிஎஸ் ஆலோசனை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. ஓபிஎஸ் தரப்புக்கு தாவியுள்ள நிர்வாகிகளால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது என்கின்றனர் மூத்த ரத்தத்தின் ரத்தங்கள்.












Click it and Unblock the Notifications