பெரிய விக்கெட்! கமலாலயத்திற்கு காரை விட்ட மூத்த "புள்ளி".. வலை போட்டு "அதிமுக" மீனை பிடித்த தாமரை?
சென்னை: அதிமுகவில் கடந்த சில நாட்களாக "ஆஃப்பில்" இருக்கும் மூத்த புள்ளி ஒருவரை பாஜக தங்கள் பக்கம் இழுக்க போவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக பாஜக இடையே சமீப நாட்களாக சில சில மோதல்கள் ஏற்பட தொடங்கி உள்ளன. ஹனிமூனுக்கு பின் சண்டை போட தொடங்கும் தம்பதிகள் போல சின்ன சின்ன சண்டைகளை வெளிப்படையாக இரண்டு கட்சி நிர்வாகிகளும் போட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்.. முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல்?
சமீபத்தில்தான் அதிமுக அமைப்புச்செயலாளர் பொன்னையன், பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். பாஜக, தன்னை எதிர்க்கட்சி போல காட்டிக்கொள்கிறது, ஆனால் அதில் உண்மை இல்லை என்று கூறினார்.
எதிர்க்கட்சி
பாஜக தன்னை எதிர்க்கட்சி போன்று காட்டி பிம்பத்தை ஏற்படுத்த பார்க்கிறது என்று குறிப்பிட்டார். அதோடு, தேசிய கட்சிகளுக்கு மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கு பெரிய ஆதரவு இருக்காது என்று ஜெயக்குமாரும் குறிப்பிட்டு இருந்தார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க செல்லூர் ராஜுவோ.. பாஜகவிற்கு கூடுவது காக்கா கூட்டம். கூட்டம் கூட்டுவது எல்லாம் விஷயமா என்றும் கேட்டு இருந்தார்.
அண்ணாமலை
இந்த நிலையில்.. இது அதிமுக நிலைப்பாடு அல்ல.. அதிமுக நிலைப்பாட்டை ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலையும் தெரிவித்தார். இதற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எட்டப்பாடியோ, அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது என்று பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார். இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுகவிற்கு அதிர்ச்சி தரும் விதமாக, கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரை பாஜக தங்கள் பக்கம் இழுக்க போவதாக செய்தி வெளியாகி உள்ளது.
பாஜக தூண்டில்
அதிமுகவில் கடந்த ஆட்சியின் போது அந்த மூத்த நிர்வாகி அமைச்சராக இருந்தார். இரண்டு இனிஷியல் கொண்ட அந்த நிர்வாகி, சமீப நாட்களாக பெரிதாக எதுவும் பேசுவது இல்லை. கட்சி விவகாரங்களில் கருத்து தெரிவிப்பது இல்லை. கட்சி கூட்டங்களிலும் கலந்து கொள்வது இல்லை. முன்பே பாஜகவிடம் நெருக்கமாக இருந்த அவர் சமீப நாட்களாக அதிக நெருக்கமாக இருக்கிறாராம்.
கமலாலயம்
அடிக்கடி கமலாலயம் பக்கம் காரில் சென்று வருகிறார் என்றும் கூறப்படுகிறது. அதிமுக தோல்வி, தனக்கு எதிரான வழக்குகள், அதிமுக உட்கட்சி தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு முக்கியத்துவம் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த புள்ளி அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சூழ்நிலையை பயன்படுத்தி, அவர் பாஜகவில் இணைய போவதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் ஏற்கனவே பாஜக தலைவர்களோடு செம க்ளோஸ்தான்.
அதிமுக பாஜக
இவர் கொஞ்சம் பெரிய புள்ளி என்றாலும், அவர் பாஜகவில் இணைந்தால், அதிமுக தலைமை நிர்வாகிகள் பெரிதாக கவலைப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதிமுக தலைமைக்கும், அவருக்கும் பெரிதாக நட்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் விரைவில் அந்த இரண்டு இனிஷியல் கொண்ட புள்ளி பாஜகவில் ஐக்கியம் ஆகலாம் என்கிறார்கள். ஏற்கனவே பாஜகவில் வேற்று கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய பதவிகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இவருக்கு முக்கிய பதவி வழங்கப்படலாம் என்கிறார்கள் தாமரை கட்சியினர்!