கசந்த திருமண வாழ்க்கை.. உள்ளே புகுந்த "ரகசிய" காதலன்.. இடையே சிக்கிய குழந்தைக்கு நேர்ந்த கதி
சென்னை: காதலனுடன் சேர்ந்துகொண்டு தனது இரண்டு வயது குழந்தையை கொடுமைப்படுத்திய தாயை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே திருமணமான நிலையில் கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த பானு , இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சம்பவம் குறித்த வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், பானுவுடன் சேர்ந்து காதலனையும் கைது செய்துள்ளனர்.

அதிகரித்து வரும் குற்றங்கள்
பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் இதனை குறைக்க பாலின சமத்துவ கல்வியும், ஆண், பெண் சமம் என்கிற கருத்தும் ஆழமாக விதைக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்களின்படி கடந்த 2021ல் மட்டும் நாடு முழுவதும் 33,348 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 91 வழக்குகள். ஒரு மணி நேரத்திற்கு மூன்று வழக்குகள்.

காதல்
இவ்வாறு இருக்கையில் சென்னையில் ஓர் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, சென்னை சாஸ்த்திரி நகரை சேர்ந்த பானு எனும் இளம்பெண் திருமணமான நிலையில், கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 2 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி பானுவின் வீட்டில் சந்தித்து வந்துள்ளனர்.

பரிசோதனை
இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்வதென முடிவெடுத்துள்ளனர். ஆனால் 2 வயது குழந்தையை என்ன செய்வது என்று தெரியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜெகன் அக்குழந்தையை அடிக்கடி திட்டி வந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் பானு தனது தாய் கன்னியம்மாளுக்கு போன் செய்து குழந்தை உடல்நலக்குறைவாக இருக்கிறது என்று கூறியுள்ளார். பதறியடித்து வந்த கன்னியம்மாள் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

கைது
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதாவது குழந்தையின் முகம் மற்றும் உடலின் சில இடங்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இது சிகரெட்டால் ஏற்படுத்தப்பட்டதைப்போல இருக்கிறது என டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் சாஸ்திரிநகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் தாய் பானு மற்றும் அவரது காதலன் ஜெகனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர்.
இவர்களுக்கு குடி பழக்கம் உள்ளதாகவும், இந்த பழக்கத்தின் காரணமாக குடித்தவுடன் குழந்தை மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். பெற்ற தாயே குழந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications