Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழை இழித்த நாகசாமிக்கு அரசு மரியாதை தர கோருவதா? ரவிக்குமார் எம்.பி.க்கு வலுக்கும் கடும் எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்தி தமிழை இழிவுபடுத்திய மறைந்த கல்வெட்டு ஆய்வாளர் நாகசாமிக்கு அரசு மரியாதை தர வேண்டும் என்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமாருக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

கல்வெட்டியல் ஆய்வாளரான நாகசாமி அனைத்தையும் சமஸ்கிருதக் கண்ணோட்டத்தில் இருந்தே பார்ப்பவர். தமிழ் என்பதே சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்த என்கிற கருத்தைக் கொண்டவர்.

அவரது கருத்துக்கு தமிழகத்தில் மிக கடுமையான எதிர்ப்பு தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக நாகசாமி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருந்தனர்.

சமஸ்கிருதமே மூத்த மொழி

சமஸ்கிருதமே மூத்த மொழி

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமாரும் சமூக வலைதளபக்கத்தில் விரிவான இரங்கல் செய்தி வெளியிட்டார். ரவிக்குமாரின் இரங்கல் செய்தி: கல்வெட்டியல் அறிஞர் இரா.நாகசாமி அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன்.தமிழ்நாடு முழுவதும் கவனிப்பாரற்றுக் கிடந்த கல்வெட்டுகளை மாவட்டவாரியாகப் படியெடுத்துப் பதிப்பித்ததில் அவரது பங்கு மகத்தானது.அவருக்கு என் அஞ்சலி. சமஸ்கிருதமே மூத்த மொழி என அவர் பேசி வந்தாலும் தமிழ்நாடு தொல்லியல்துறையின் இயக்குநராக இருந்தபோது அவர் ஆற்றிய பணிகள் பாராட்டுக்குரியவை. சங்க இலக்கியங்களின் காலம் குறித்து ஹெர்மன் டீக்கன் எழுப்பிய ஐயங்களை மறுத்து கோவையில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் (2010) அவர் பேசினார். ஹெர்மன் டீக்கனின் விமர்சனங்களைக் குறிப்பிட்டு, அவற்றை மறுக்கும் விதமாகவே தனது கட்டுரையை அவர் அம்மாநாட்டில் அமைத்திருந்தார்.

நாகசாமி செய்தது என்ன?

நாகசாமி செய்தது என்ன?

பாண்டியர் கால ஆவணங்கள் சிலவற்றைப் படித்துக் காட்டி அவை எந்த அளவுக்கு சமஸ்கிருத சொற்கள் கலந்து எழுதப்பட்டுள்ளன என்று விளக்கிய இரா.நாகசாமி அவர்கள், புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றைப் படித்துக்காட்டி அவை இந்த மொழி நடையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக சமஸ்கிருதம் கலக்காத தன்மை கொண்டதாக அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். பாண்டியர் காலத்து செப்பேடுகளான தளவாய்புரம், வேள்விக்குடி, சின்னமனூர் செப்பேடுகளில் எவ்வாறு சமஸ்கிருதச் சொற்கள் அதிக அளவில் கலந்துள்ளன.அவற்றை சங்கப் பாடல்களோடு தொடர்புப்படுத்திப் பேசுவதும், சங்கப் பாடல்கள் பாண்டியர் காலத்தில் எழுதப்பட்டவை என்பதும் முற்றிலும் தவறானவை என்று கூறிய அவர், ''கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து 10 -15 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த நடுகற்கள் கிடைத்துள்ளன. அவற்றைப் பார்க்கும்போது, தமிழ் வரிவடிவம் எவ்வாறு வளர்ச்சி அடைந்து வந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அவற்றில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களும்,அவை குறிப்பிடுகின்ற பெயர்களும் சங்க காலத்துக்கு பிந்தியவையாக உள்ளன'' என்றும் தெளிவுபடுத்தினார்.

நாகசாமிக்கு அரசு மரியாதை

நாகசாமிக்கு அரசு மரியாதை

சமஸ்கிருதத்தை முதன்மைப்படுத்தி அவர் எழுதிய நூலை மறுத்து ' சமஸ்கிருதமும் தமிழும்' என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கை 2012 இல் மணற்கேணி ஆய்விதழ் சார்பில் நான் நடத்தினேன். அந்த நூல் இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ளது. இரா.நாகசாமி அவர்களின் கருத்துகளை நாம் மறுக்கும் அதே நேரத்தில் அவரது பங்களிப்புகளையும் அங்கீகரிக்கவேண்டும். 'அசோகன் பிராமிக்குப் பிறகுதான் தமிழ் பிராமி' என வலியுறுத்தி வந்தாரெனினும் திரு ஐராவதம் மகாதேவன் அவர்களின் பங்களிப்பை நாம் மறுத்துவிட முடியாது. அதுபோலவே இரா.நாகசாமி அவர்களின் பங்களிப்பையும் நாம் அணுகவேண்டும் என்பது எனது நிலைபாடு. தமிழ்நாடு அரசின் பெருந்தன்மையை உணர்த்தும் விதமாக கல்வெட்டியல் அறிஞர் இரா.நாகசாமி அவர்களை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முன்வரவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரவிக்குமார் கூறியிருந்தார். நாகசாமிக்கு அரசு மரியாதை அளிக்கப்பட வேண்டும் என ரவிக்குமார் கூறியிருப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

முதல்வர் ஸ்டாலினை இழிவுபடுத்தியவர்

முதல்வர் ஸ்டாலினை இழிவுபடுத்தியவர்

ரவிக்குமாரின் ஃபேஸ்புக் பதிவிலேயே Sathish Srinivasan என்பவர், முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இரா.நாகசாமியைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் "வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது என்று திருவள்ளுவரை சிறுமைப்படுத்தி, திரிபு வாதத்தை முன்வைத்த முன்னாள் தொல்லியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் 'குடியரசுத் தலைவர் விருதுகளை' தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமித்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மொழிக்கு எதிராகவும், தமிழ் கலாச்சாரத்தினை தன் மனம் போன போக்கில் திரித்து பாஜக மற்றும் மதவாத சக்திகளின் கவனத்தைத் தன்பால் திருப்பிடும் நோக்கில் எழுதி வரும் அவருக்கு ஏற்கெனவே பத்மவிபூஷண் விருதை வழங்கி கவுரவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, இப்போது செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திலும் ஒரு பொறுப்பினை வழங்கி செம்மொழித் தமிழுக்கும் பேரிழுக்கு ஏற்படுத்த முயற்சி செய்து பார்த்திருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதில் அளித்திருக்கும் இரா.நாகசாமி அறிக்கையின் இறுதி வரிகள் இப்படியாக முடிந்திருக்கின்றன. "ஸ்டாலினுக்கு இதை விடக் கேவலம் வேறு எதுவும் இல்லை. ஆனால் மானம் மரியாதை வெட்கம் இதையெல்லாம் துறந்ததால்தான் இப்போது கட்சியின் தலைவர் ஆகியிருக்கிறார்! வாய்புளித்தது; மாங்காய் புளித்தது...! மண்டபத்தில் எவனோ எழுதிக் கொடுத்ததைப் பகிர்ந்து, மடையனும் ஆகிவிட்டாயிற்று! சாதாரண மடையன் அல்ல... மாங்காயுடன் சேர்ந்து!" என மிக இழிவாக விமர்சித்திருந்தார். அவருக்கா அரசு மரியாதை கேட்கிறீர்கள்? என கொந்தளித்திருக்கிறார்.

அரசு மரியாதை அபத்தம்

அரசு மரியாதை அபத்தம்

திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில செயலாளர் பொள்ளாச்சி மா.உமாபதியும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளார். பொள்ளாச்சி உமாபதி தமது பதிவுகளில், ரவிக்குமார் அவர்களே! அரசு மரியாதையை அவமதிக்க வேண்டாம்!! நாகசாமிக்கு அரசு மரியாதை செய்தால் அவரது தமிழர் விரோத அந்தங்கெட்ட ஆய்வுகளை அங்கீகரிப்பதாகிவிடும். நாகசாமிக்கு இரங்கல் தெரிவித்தால் தவறில்லை. அரசு மரியாதை கேட்பது அபத்தம் என கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+