முன்னாள் எம்.எல்.ஏவிடம் ரூ.3.5 மோசடி.. நடிகரும், முன்னாள் அதிமுக நிர்வாகியுமான அஜய் வாண்டையார் கைது!
சென்னை: பண மோசடி வழக்கில் நடிகரும், முன்னாள் அதிமுக நிர்வாகியுமான அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் எம்எல்ஏ ஒருவரிடம் கோடிக் கணக்கில் பணமோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் பெங்களூர் விமான நிலையத்தில் அஜய் வாண்டையாரை கைது செய்தது காவல்துறை.
கடந்த ஜூன் மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் நடைபெற்ற தகராறில், அஜய் வாண்டையார் மதுபோதையில் மற்றொரு தரப்பினரை தாக்கி வன்முறையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அஜய் வாண்டையார் மீது பட்டினப்பாக்கம், எழும்பூர் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த புகார் தொடர்பாக அஜய் வாண்டையார் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அஜய் வாண்டையார் மீது ஏற்கெனவே அடிதடி, தகராறு, மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நடிகரும், அதிமுகவை சேர்ந்தவருமான அஜய் வாண்டையார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மன்னார்குடியைச் சேர்ந்த இந்த அஜய் வாண்டையார் தமிழ் சினிமாவில் சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். சனம் ஷெட்டி உடன் ஒரு படத்திலும், இதுதவிர 'ரெட் அண்ட் பாலோ' மற்றும் 'மாய நாரிழை' ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் இருந்த அஜய் வாண்டையார் பின்னர் அதிமுகவில் இணைந்து ஐ.டி விங்கில் பொறுப்பு வகித்தார்.
ஏற்கனவே ஹைதராபாத்தில் உள்ள தொழிலதிபரிடம் பண மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. ஹைதராபாத் தனியார் நிறுவன உரிமையாளர் பரத்குமார் என்பவரிடம் இருந்து ரூபாய் 2.11 கோடி வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், அஜய் வாண்டையார் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ ஒருவரிடம் ரூபாய் 3.5 கோடி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் பெங்களூர் விமான நிலையத்தில் அஜய் வாண்டையாரை கைது செய்தது காவல்துறை. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications