இதுவரை ’செய்யாததை’ செய்த ராஜ்கிரண்! தயாரிப்பு நிறுவனம் இப்படி பண்ணிருச்சே! பேஸ்புக்கில் ஓபன் டாக்!
சென்னை : நடிகர் ராஜ்கிரன், நடிகர் அதர்வா முரளி இணைந்து நடித்து வெளியாகி இருக்கும் 'பட்டத்து அரசன்' திரைப்படம் குறித்து கடந்த சில நாட்களாகவே பேஸ்புக்கில் நடிகர் ராஜ்கிரன் பதிவிட்டு வந்தார். இதுவரை அப்படி எந்த படத்திற்கும் அவர் ப்ரோமோஷன் செய்தது கிடையாது. தற்போது இந்த படத்திற்கு மட்டும் தொடர்ந்து பதிவுகள் இட என்ன காரணம் என அவரே கூறியிருக்கிறார்.
1980 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முக்கிய நாயகர்களில் ஒருவராக வலம் வந்த நடிகர் ராஜ்கிரண். நடிகர் மட்டுமல்லாது இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்ட இவர் நடிகர் வடிவேலுவை அறிமுகப்படுத்தியவர் ஆவார்.
நாயகனாக நடிப்பதை நிறுத்திக் கொண்ட அவர் தற்போது தந்தை, தாத்தா உள்ளிட்ட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியான பட்டத்து அரசன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
பட்டத்து அரசன்
குறிப்பாக அதில் நடிகர் ராஜ்கிரனின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்தது. படத்தில் நாயகனாக அதர்வா முரளி, ராதிகா சரத்குமார், சிங்கம் புலி பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். தேசிய விருது வென்ற படத்தை இயக்கிய சற்குணம் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஜிப்ரான் படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
ராஜ்கிரண்
மிகப்பெரிய கபடி வீரரான ராஜ்கிரன் அரசு வேலையை விட ஊரின் மானம் பெரிது என்று ஊருக்காக கபடி விளையாடும் ஒரு கதாபாத்திரம். அவரது மகன் பேரன் என அனைவருமே கபடி தான் ஆடுகின்றனர். சில சூழ்நிலைகள் காரணமாக அவரது குடும்பம் ஊரில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறது. கபடி விளையாடத் தெரியாத அதர்வா தனது குடும்பத்தோடு சேர்ந்து ஊரை எப்படி ஜெயிக்கிறார் என்பது தான் பட்டத்து அரசன் படத்தின் கதை.
பாராட்டு
சண்டிவீரன் படத்தை தவிர கிராமத்து கதைகளில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத அதர்வா மீண்டும் கிராமத்து இளைஞனாக நடித்து இருக்கிறார் கபடி குடும்பம் பாசம் என அனைத்தையும் சேர்த்து இந்த படம் ஓரளவு வரவேற்பை பெற்றிருக்கிறது. படத்தில் அதர்வாவுக்கு அடுத்து நாயகன் என்றால் அது நடிகர் ராஜ்கிரன் தான் தற்போதும் அதே கம்பீரம் அவரது நடிப்பில் தெரிகிறது. விளையாட்டுக்காக அரசு வேலையை துறப்பது குடும்பத்திற்காக அவமானங்களை தாங்கிக் கொள்வது என ஒரு நிஜ குடும்ப தலைவனாகவே வாழ்ந்து காட்டி இருக்கிறார்.
ஃபேஸ்புக்
சினிமா துறையை போலவே பேஸ்புக்கிலும் நடிகர் ராஜ்கிரன் மிகவும் ஆக்டிவாக இருப்பார். கடந்த காலங்களில் பொதுவான விஷயங்கள் குறித்தும் அரசியல் குறித்து மட்டுமே பதிவிட்டு வருவார். எத்தனை பேர் கமெண்ட் செய்தாலும் அதற்கு நடிகர் ராஜ்கிரன் நேரடியாக பதில் அளிப்பது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக பட்டத்து அரசன் திரைப்படம் குறித்து தினமும் குறைந்தது 5 பதிவுகளையாவது நடிகர் ராஜ்கிரன் பதிவு செய்து வந்தார். படம் குறித்த போஸ்டர்கள் புகைப்படங்கள் கருத்துக்கள் நாளிதழ்களில் வெளியான செய்திகள் யூடியூப் சேனல்களில் வெளியான வீடியோக்கள் என அனைத்தையும் பதிவு செய்து படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டார்.
லைக்கா
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் தனது பேஸ்புக் பக்கத்திலும் நடிகர் ராஜ்கிரன் படம் குறித்து பேசி வந்தார். ஆனால் இதுவரை எந்த ஒரு படத்திற்கும் நடிகர் ராஜ்கிரன் இப்படி மெனக்கட்டது கிடையாது. இந்த படத்துக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என ரசிகர் ஒருவர் அவரிடம் வெளிப்படையாகவே கேட்டு விட்டார். அதற்கு தயாரிப்பு நிறுவனம் தான் காரணம் என உண்மையைச் சொல்லி இருக்கிறார் ராஜ்கிரண். லைக்கா நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து வெளியிட்டு இருக்கிறது.
சின்னப்படம்
ரசிகருக்கு பதிலளித்து ராஜ்கிரண்,"ஆமாம் தம்பி. தயாரிப்பு நிறுவனம், பெரிய படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி, இதை சின்னப்படம் என்ற பார்வையில் எவ்வித முன் விளம்பரங்களும் இல்லாமல், டி.வி விளம்பரம் கூட கொடுக்காமல், படத்தை திடுதிப்பென்று வெளியிட தேதி குறித்து விட்டார்கள். அதனால் தான், பலரது உழைப்பு வெளியே தெரியாமல் போய்விடக்கூடாது என்பதற்காக, எந்தப்படத்துக்கும் நான் செய்யாத வேலையை, இந்த படத்திற்கு செய்து கொண்டிருக்கிறேன் தம்பி" என பதில் சொல்லியிருக்கிறார். இதனால் லைகா நிறுவனம் மீது அவர் அதிருப்தியில் இருக்கலாம் என கூறப்படுகிறது.