மதுரையில் மாநாடு.."தெறி" போஸ்டர்கள்..லோக்சபா தேர்தலுக்கு விஜய் போடும் "மாஸ்டர்"பிளான் இதானாமே
சென்னை : தமிழக உள்ளாட்சி தேர்தலில் அரசியல் ஆழம் பார்த்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிடவும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் பிறந்தநாளுக்காக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் 2024 பாராளுமன்றமே, 2028-ன் சட்டமன்றமே ' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் விரைவில் மதுரையில் மாநாடு என்றும் கூறப்பட்டுள்ளது.
எம்ஜிஆர், விஜயகாந்த், கமல்ஹாசன் போல நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவரது ரசிகளின் விருப்பம். பல்வேறு விதங்களில் அதனை தெரியப்படுத்துவதை ரசிகர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால் விஜய் அது குறித்து இப்போது வரை வாய் திறக்கவில்லை. நடிகர் விஜய்யும் வெளிப்படையாக அரசியல் குறித்து அறிவிக்காவிட்டாலும், ரசிகர் மன்றத்தை எல்லாம் விஜய் மக்கள் இயக்கம் என ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சு உள்ளது. அதற்கேற்ப விஜய்யின் படங்களிலும் அரசியல் வசனங்கள் தவறாது இடம் பெறுகின்றன. தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வாசகம் இடம் பெற்றது. கத்தி, மெர்சல், சர்க்கார் என அடுத்தடுத்த படங்களிலும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றன. ஆடியோ வெளியீட்டின் போது அரசியல் திட்டம் குறித்துத் தொடர்ந்து மறைமுகமாக வெளிப்படுத்தி வருபவர் விஜய். ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளின் போது அவரது ரசிகர்கள் ஒட்டும் வாழ்த்து போஸ்டரில் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுப்பார்கள்.
கடந்த ஆண்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அனுமதி அளித்தார் விஜய். தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தவும் அனுமதி அளித்தார் விஜய். விஜய் ரசிகர்கள் வெற்றி பெற்று விஜய் கட்சியின் அரசியல் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டனர். வெற்றி பெற்ற ரசிகர்களை சந்தித்தார் விஜய்.
விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் நிறைய உதவிகளை செய்து வருகிறார். அது போல் அவரது ரசிகர்களையும் மக்கள் நல பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி வருகிறார். மழை, வெள்ளப் பாதிப்பு, கொரோனா ஊரடங்கு காலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு நிறைய உதவிகளை செய்திருந்தனர். அதன் பலனை நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அறுவடை செய்தனர். கணிசமான அளவில் வெற்றி பெற்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
உள்ளாட்சித் தேர்தலில் ஆழம் பார்த்த விஜய், அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட வேண்டும் என்றும், அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதன்மூலம் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதற்கான அறிகுறி தான் என்று தகவல் பரவியது.
விஜய் மக்கள் இயக்கத்தின் கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான் அடுத்த கட்ட பிளானாம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக இப்போதிருந்தே தயாராக சொல்லியிருக்கிறாராம். பூத் கமிட்டி தொடங்கி வார்டு வாரியாக கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான் விஜய்யின் திட்டமாம்.
இந்த நிலையில்தான் நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் அவரது ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் தற்போது பெரும் பரபரப்பை பற்ற வைத்துள்ளன. அதில், '2024 பாராளுமன்றமே, 2026ன் தமிழக சட்டமன்றமே ' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. அத்துடன் 'விரைவில் மதுரையில் மாநாடு' என்றும் கூறப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டி தெறிக்க விட்டு வருகின்றனர். இந்த போஸ்டர் மூலம், மதுரையில் லோக்சபா தேர்தலில் விஜய் போட்டியிடுவதற்காக மாநாடு எதுவும் நடத்தப் போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மதுரையில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டர்கள் பற்றியும் அரசியல் கட்சி துவங்குவதற்கான மாநாடு பற்றியும் நடிகர் விஜய் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்றும் அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications