போன் போட்டு மின்னல் குமாரை எச்சரித்த விஜய்.. தமிழ்நாடு முழுக்க மக்கள் இயக்கம் விறுவிறு சம்பவம்
சென்னை: தமிழ்நாட்டில் 185 தொகுதிகளில், பூத் கமிட்டி அமைக்கும் பணியில் விஜய் மக்கள் இயக்கம் தீவிரமாக உள்ளது. பூத் கமிட்டி விவரங்கள் வெளியிடுவதில் குளறுபடி எழுந்ததால் தாம்பரம் தொகுதி மாவட்ட தலைவர் மின்னல் குமாரை நடிகர் விஜய் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவது கிட்டத்தட்ட உறுதி என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. அனேகமாக 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து விஜய் தனது அரசியல் கட்சியை விரைவில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் அரசியல் இயக்கம் ஆரம்பிக்கும் முன்பே, ஒரு அரசியல் இயக்கத்திற்கான அத்தனை கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று விஜய் நினைக்கிறாராம்.

திமுக, அதிமுக போன்ற கட்சிகளில் பூத் கமிட்டி முதல் ஐடி விங் வரை பல்வேறு கட்டமைப்புகள் உள்ளன. அதுபோல் அனைத்து கட்டமைப்பையும் ஏற்படுத்தி வருகிறாராம் விஜய். அண்மையில் மகளிர் அணி, வழக்கறிஞர் அணி போன்றவற்றை உருவாக்கிய விஜய், ஐடி விங்கை உருவாக்கும் பணியில் உள்ளாராம்.
இது ஒருபுறம் எனில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கும் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் சமூகப் பணிகளையும் அடிக்கடி செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்களைக் கொண்ட இலவச சட்ட மையம் என்ற திட்டத்தை அண்மையில் அறிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரம் முன்பு வட சென்னையில் இலவச சட்ட ஆலோசனை மையமும் தொடங்கி வைக்கப்பட்டது.
இதனிடையே தமிழ்நாட்டில் 185 தொகுதிகளில், பூத் கமிட்டி அமைக்கும் பணியில் விஜய் மக்கள் இயக்கம் தீவிரமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பூத் கமிட்டி அமைக்கும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நடிகர் விஜய் தொலைபேசி மூலம் பேசி ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
விஜய் எச்சரிக்கை: பூத் கமிட்டி அமைக்கும் பணியில் நிர்வாகிகள் உற்சாகமாக ஈடுபடுகிறார்களாம். பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைப்பு பணிகள் விஜய் மக்கள் இயக்கத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், பூத் கமிட்டி விவரங்களை வெளியிடுவதில் குளறுபடி ஏற்பட்டதற்காக தாம்பரம் தொகுதி மாவட்ட தலைவர் மின்னல் குமாரை எச்சரித்த நடிகர் விஜய் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
விஜய் பாராட்டு: அதேநேரம் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளை பாராட்டும் விஜய், குளறுபடியில் ஈடுபடும் நிர்வாகிகளை எச்சரித்து, அறிவுரையும் வழங்கி வருகிறாராம். திடீரென அரசியல் கட்சி ஆரம்பிக்காமல் சரியான காய்நகர்த்தலுடன் விஜய் ஒவ்வொரு நகர்வையும் செய்து வருவது அரசியல் நிபுணர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அரசியல் கட்சிகளும் விஜய்யின் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
விஜய் அரசியல்: தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக அரசியல் கட்சியை உருவாக்க பல்வேறு நடிகர்கள் பல்வேறு காலக்கட்டத்தில் முயன்றனர். இதில் விஜயகாந்த் மட்டுமே ஓரளவு வெற்றியும் பெற்றார். ஆனால் துரதிஷ்டவமாக விஜயகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.அதன்பிறகு தேமுதிக பெரிய அளவில் வாக்கு வங்கியில் முன்னேற வில்லை.. இந்த சூழலில் விஜய் அரசியல் கட்சி அறிவிப்பினை வெளியிட்டால் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்கிறார்கள் சில அரசியல் விமர்சகர்கள். இளம் தலைமுறை வாக்காளர்களை குறிவைத்து , புகழின் உச்சியில் இருக்கும் போதே விஜய் அரசியலில் இறங்குவதால் 2026 தேர்தல் வித்தியாசமானதாக இருக்கும் என்கிறார்கள். விஜய் முழுமையாக அரசியலுக்கு இறங்குவது எப்போது என்பது தான் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications