"லூசு பசங்களா".. நம்பவே முடியலை.. நம்ம குஷ்புவா இது... கடைசில இவரும் பச்சையா பொய் சொல்லிட்டாரே!
கடந்த காலங்களில் அதிகமாக பாஜகவை விமர்சித்தவர் குஷ்புதான்
சென்னை: பாஜகவில் சேரப் போகிறீர்களா.. இது கடந்த சில வாரங்களாகவே பல்வேறு தரப்பினரும் விதம் விதமான கேள்விகளால் குஷ்புவிடம் கேட்டு வந்தனர். ஆனால் எல்லாவற்றுக்கும் திட்டவட்டமான மறுப்பையும், உங்களுக்கெல்லாம் மன நலம் பாதிச்சிருச்சா என்றெல்லாம் கூட காட்டமாக கேட்டு பதிலளித்து வந்தார் குஷ்பு. ஆனால் இன்று ஜம்மென்று போய் அவர் பாஜகவில் சேர்ந்திருப்பதை பலரும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
காரணம் பாஜகவை மிக மிக கடுமையாக விமர்சித்து வந்தவர் அவர்.. ரொம்பவெல்லாம் தூரமாக போக வேண்டாம்.. போன வாரம் கூட கடுமையாக திட்டி டிவீட் போட்டிருந்தார். பாஜக குறித்த கேள்விகளுக்கும் கூட சூடாக பதிலளித்து வந்தார்.
அதை விடுங்க, காங்கிரஸ் சார்பில் நடந்த உபி பாலியல் பலாத்கார கொடுமைக்கு எதிரான போராட்டத்திலும் கலந்து கொண்டு படு ஆவேசமாக பேசியிருந்தார். எல்லாவற்றையும் செய்து விட்டு இன்று பாஜக வாசலில் போய் அவர் கை கட்டி நின்றதைப் பார்த்தபோது.. நம்ம குஷ்புவா இது.. உண்மைதானா இது என்று எல்லோருமே ஆச்சரியப்படுகின்றனர். குறிப்பாக பெண்கள்!
பளிச் பேட்டிகள்
குஷ்புவை ஒரு நடிகை என்று யாரும் புறம் தள்ளி விட முடியாது.. நல்ல அறிவாளி, விஷய ஞானம் உள்ளவர். நாட்டு நடப்புகளை ஃபிங்கர் டிப்ஸில் வைத்திருப்பவர். பளிச்சென பேசக் கூடியவர். பூசி மெழுகியெல்லாம் பேச மாட்டார். யோசித்து பேசுவார்.. பேசியது தவறென்றால் மன்னிப்பு கேட்கவும் தயங்க மாட்டார். யாராக இருந்தாலும் கண்டிப்பார். தவறென்றால் தட்டிக் கேட்பார். ஈர மனசு கொண்டவர். எத்தனையோ பேருக்கு உதவியிருக்கிறார்.
கருணாநிதி
ஆரம்பத்தில் கட்சி சார்பற்றுதான் இருந்தார் குஷ்பு. பின்னர் திமுக தலைவர் கருணாநிதி மீது கொண்ட பற்று ,பாசத்தால் திமுகவில் இணைந்து செயல்பட்டார். பின்னர் அங்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விலகினார். இடையில் அவர் மீது அவதூறு வழக்குகள் பல பாய்ந்தன. அத்தனை வழக்குகளையும் உச்சநீதிமன்றம் ஒரே நாளில் தள்ளுபடி செய்து அவருக்கு நிவாரணம் கொடுத்தது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ். வழக்குகள் தள்ளுபடியான நிலையில் காங்கிரஸில் இணைந்தார் குஷ்பு.
முக்கியத்துவம்
காங்கிரஸில் இணைந்து ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வந்த குஷ்புவுக்கு, ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைவராக இருந்தபோதுதான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் அந்த முக்கியத்துவம் காணாமல் போய் விட்டது. இதனால் அப்செட்டான குஷ்பு ஒதுங்கி விட்டார். நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கேட்டதாக கூறப்பட்டது. அதுவும் கிடைக்கவில்லை. பெரிய அளவில் பதவியும் தரப்படவில்லை. இந்த நிலையில்தான் குஷ்பு இப்போது பாஜக பக்கம் போய் விட்டார்.
பாஜக
அது அவரது விருப்பம்.. அதை யாரும் கேள்வி கேட்கவும் முடியாது, தடுக்கவும் முடியாது. ஆனால் குஷ்பு தேர்ந்தெடுத்த கட்சியும், அதற்கான சமயமும்தான் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மிகக் கடுமையாக பாஜகவை விமர்சித்து வந்தார் குஷ்பு. அப்படிப்பட்டவர் எப்படி அதே கட்சியின் வாசலில் போய் நின்றார் என்பதுதான் மக்களின் ஆச்சரியம்.. குறிப்பாக பெண்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். காரணம் அப்படி ஒரு சிச்சுவேஷனில் இன்று நாடு இருக்கிறது. இந்த நிலையில் குஷ்பு எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்பதுதான் அவர்களின் கேள்வியாக உள்ளது.
விமர்சனம்
சில டிவீட்டுகளைப் பார்த்தாலே இது புரியும். முதல் டிவீட்.. அக்டோபர் 8ம் தேதி இந்தி செய்தியை மேற்கோள் காட்டி ஒரு டிவீட் போட்டிருந்தார் குஷ்பு. அதில், ஏன் இந்த பாஜக - ஐக்கிய ஜனதாதளம் - செக்ஸ் கொடுமை கூட்டணி என்று கூறியிருந்தார். இது நிச்சயம் மிகக் கடுமையான சொல்லாடல் என்பதில் யாருக்குமே சந்தேகம்இல்லை. அப்படி பாஜகவை கடுமையாகவே வர்ணித்திருந்தார் குஷ்பு.
ஜவஹர்லால் நேரு
பாஜகவின் ஐடி செல் பிரிவைச் சேந்த அமித் மாளவியா போட்ட ஒரு டிவீட். இவரை ரொம்ப நாளாகவே சுப்பிரமணியம் சாமியும் சாடி வருகிறார். அவர் போட்ட டிவீட்டில் ஜவஹர்லால் நேருவை மிகக் கடுமையாக கோழை என்று குறிப்பிட்டிருந்தார் மாளவியா.. அதுதொடர்பான டிவீட்டை ஒருவர் ரீடிவீட் செய்து. வருண் காந்தி உங்க தாத்தாவை மாளவியா கோழை என்று சொல்லியுள்ளார் . உங்க கருத்து என்ன என்று கேட்டிருந்தார். வருண் கா்ந்தி பாஜகவில்தான் உள்ளார். அதை குஷ்பு ரீடிவீட் செய்திருந்தார்.
வதந்திகள்
அடுத்து இன்னொரு டிவீட். அதாவது அக்டோபர் 7ம் தேதி ஒரு டிவீட் போட்டார். அதில் 2 ரூபாய் வாங்கிக் கொண்டு டிவீட் போடுபவர்கள் ரொம்ப நல்லா வேலை பார்க்கிறாங்க என்று கூறியிருந்தார். அதாவது தான் பாஜகவில்சேரப் போவதாக வதந்தி பரப்புவதாக கூறி இப்படி ஒரு டிவீட் போட்டிருந்தார் நடிகை குஷ்பு. இந்த டிவீட்டைத்தான் இப்போது அனைவரும் மேற்கோள் காட்டி குஷ்புவை விமர்சித்து வருகின்றனர். பொய் சொல்லி விட்டார் குஷ்பு என்ற அவப் பெயரும் அவருக்கு இதன் மூலம்தான் வந்து விட்டது.
லூசு பசங்களா
லூசுப் பசங்களா.. இப்படி ஆரம்பித்து அதே அக்டோபர் 7ம் தேதி இன்னொரு டிவீட் போட்டிருந்தார். சொல்ல வந்தது புரியுது இல்ல.. அப்புறம் என்ன என்று அவர் கோபமாக கேட்டிருந்தார். அப்பக் கூட தமிழக மக்களுக்கு சத்தியமாக புரிந்திருக்காது.. குஷ்பு கட்சி மாறப் போகிறார் என்று. அதுகுறித்த அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அவர் போட்ட ஒரு டிவீட் தப்பான அர்த்தத்தில் போனதால்தான் இந்த மாதிரி லூசுப் பசங்களா என்று கோபம் காட்டியிருந்தார் குஷ்பு.
நிலைப்பாடுகள்
இது மட்டுமா இப்படி எடுத்துக் காட்டிக் கொண்டே போகலாம் நடிகை குஷ்புவின் பாஜக எதிர்ப்பு நிலைப்பாடுகளை.. மிகக் கடுமையான சொற்களையெல்லாம் கூட அவர் பயன்படித்தியிருக்கிறார். இப்போது அத்தனையும் அர்த்தமில்லாமல் போய் விட்டது. அதை விட இத்தனை காலம் சேர்த்து வைத்திருந்த நல்ல பெயரை குஷ்பு ஒரே நாளில் இழந்து விட்டார் என்றுதான் பலரும் கருதுகிறார்கள். இனி உபி பலாத்கார வழக்குகள், சம்பவங்களைப் பற்றி குஷ்பு பேசுவாரா என்று கூட பலர் கேள்வி கேட்கின்றனர். காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.