பட்டியலின மக்கள் குறித்து அவதூறு.. விசாரணைக்கு ஆஜராகாத “சூப்பர் மாடல்”.. மீரா மிதுன் அதிரடியாக கைது!
சென்னை : பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விசாரணை ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய நடிகை மீரா மிதுனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.
சூப்பர் மாடல் என தன்னைத் தானே கூறிக் கொண்ட அவர் நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து நடிகர்கள் குறித்தும் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

சர்ச்சை மீரா மீதுன்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட மீரா மிதுன் பட்டியல் இன சமூக மக்கள் குறித்து மிகவும் அவதூறாக பேசினார். இந்த வீடியோ பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

அவதூறாக பேசிய வழக்கு
இந்த புகாரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் சாம் அபிஷேக் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் மீரா மிதுன் அடைக்கப்பட்டார். அதன்பின்பு இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவரை கைது செய்து ஏப்ரல் 4-ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சர்ச்சை நடிகை மீரா மிதுனை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தினர்.

அதிரடி கைது
இந்த நிலையில் பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் விசாரணை ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகை மீரா மிதுனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சென்னையில் இருந்த அவரை கைது செய்துள்ள சென்னை சைபர் கிரைம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவர் மீது உள்ள மோசடி புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,.












Click it and Unblock the Notifications