மீண்டும் கைது... நீதிமன்றம் அழைத்து வரப்பட்ட மீரா மிதுன்: 2 நாள் காவலில் எடுக்க போலீஸ் மனு!
சென்னை: வேறு ஒரு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்ட துணை நடிகை மீரா மிதுனை எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவரை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர்.
துணை நடிகையும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவருமான மீரா மிதுன், பட்டியலினத்தவர்கள் பற்றி மிகவும் சர்ச்சையாக பேசினார். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உட்பட பலர் போலீசில் புகார் அளித்தனர்.
இதனை தொடர்ந்து மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவுப்செய்தனர். தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்த மீரா மிதுன் கேரளாவுக்கு தப்பி ஓடினார்.

மீரா மிதுன் கைது
அங்கு இருந்தபடி ''தன்னை யாரும் கைது செய்ய முடியாது'' என அவர் பேசி போலீசாருக்கு தொடர்ந்து சவால் விடுத்து வந்தார். இதனை தொடர்ந்து போலீசுக்கு சவால் விட்ட மீரா மிதுனை கேரளாவில் வைத்து கடந்த 14-ம் தேதி சென்னை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரது நண்பர் சாம் அபிஷேக்கையும் போலீசார் கைது செய்தனர்.

புழல் சிறையில் அடைப்பு
இதனை தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 'வாய் தவறி பேசி விட்டேன்'' என்று பின்னர் கதறி அழுதார் மீரா மிதுன். இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்து இருந்த மீரா மிதுன் ''சினிமாவில் நடிக்க நிறைய கால் ஷீட் கொடுத்துள்ளேன். அதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மீரா கேட்டிருந்தார். ஆனால் நீதிமன்ற ஜாமீன் கொடுக்க மறுத்து விட்டது.

மீண்டும் கைது
இதற்கிடையே மீரா மிதுனுக்கு அடிமேல் அடியாக வேறு ஒரு வழக்கை கொண்டு மீரா மிதுனை மீண்டும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் இந்த புகாரை கொடுத்து இருந்தார். அதன் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், பிறருக்கு தொல்லை தருதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உட்பட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்
இந்த நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட மீரா மிதுனை புழல் பெண்கள் சிறையில் இருந்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்துக்கு போலீசார் இன்று காலை அழைத்து வந்து ஆஜர்படுத்தினார்கள். ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுனிடம் மேலும் பலகட்ட விசாரணை நடத்த வேண்டியதுள்ளது. எனவே அவரை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் போலீசார் அனுமதி கேட்டனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருவதால் மீரா மிதுனுக்கு மேலும், மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications