லட்சுமண ரேகையை தாண்டிய முதல்வர் ஸ்டாலின்.. தகுந்த பாடம் கிடைக்கும்.. எடப்பாடிக்காக பொங்கிய உதயகுமார்
சென்னை : எதிர்க்கட்சிக்கு விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை என்று பேசி இருப்பது, முதலமைச்சர் வகிக்கின்ற பதவிக்கு இலக்கணமாக இல்லை. லட்சுமணன் கோட்டை தாண்டிய பேச்சாக முதலமைச்சருடைய பேச்சு உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் அரசு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆட்சியில் இருந்த போது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்று உலக மகா உத்தமனை போல பேசுபவர்களுக்கு, விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை என கடுமையாகச் சாடியிருந்தார்.
இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என தெரிவித்துள்ளார் ஆர்.பி.உதயகுமார்.
சர்வாதிகார போக்குடன் செயல்படும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் - எடப்பாடி சவால்
தமிழக முதல்வர் முக ஸ்டாலினையும் தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்து வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தற்போது பொது இடத்தில் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என சவால் விடுத்துள்ளார். நேற்று எடப்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பழனிசாமி, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்தும் திமுக ஆட்சியின் 18 மாத சாதனைகள் குறித்தும் பொது இடத்தில் விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தயாரா என சவால் விடுத்துள்ளார். முன்னதாக, விமர்சனம் செய்பவர்களுக்கு அதற்கான அருகதை இருக்க வேண்டும் எனப் பேசி இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

அருகதை
இந்நிலையில் இது தொடர்பாக ஈபிஎஸ் ஆதரவாளர் ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதலமைச்சர் ஸ்டாலின் அரசு விழாவில் பேசிய போது, நாங்கள் விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல, விமர்சனங்களை வரவேற்கிறேன், விஷமத்தனம் கூடாது, விமர்சனம் செய்பவர்களுக்கு அதற்கான அருகதை இருக்க வேண்டும். கையிலே ஆட்சி இருந்த போது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்று உலக மகா உத்தமனை போல பேசுபவர்களுக்கு, விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை என்று பேசி இருப்பது, முதலமைச்சர் பதவி வகிக்கின்ற அந்த பதவிக்கு ஒரு இலக்கணமாக ஒரு தகுதியாக இல்லை. மரபு மீறிய லட்சுமணன் கோட்டை தாண்டிய பேச்சாக முதலமைச்சருடைய பேச்சு அமைந்திருக்கிறது.

மக்கள் தான் நிர்ணயிக்க வேண்டும்
எதிர்க்கட்சிகளுக்கு தகுதி என்பது முதலமைச்சர் நிர்ணயிப்பது அல்ல, நாட்டு மக்கள் தங்கள் வாக்குரிமை மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தான், முதலமைச்சரும் உருவாகிறார், எதிர்க்கட்சித் தலைவரும் உருவாகிறார். உங்களை போல் தந்தையின் கரம்பிடித்து, அரசியல் களத்திற்கு வந்தவர் அல்ல எடப்பாடியார், தன்னுடைய உழைப்பால் உயர்ந்தவர். எடப்பாடியார் ஒரு சவால் விடுத்திருக்கிறார், அதில் கடந்த பத்தாண்டு அதிமுக அரசு செய்திருக்கிற திட்டங்களால் மக்கள் பெற்றிருக்கிற பயன்களை நேருக்கு நேராக விவாதிக்க தயார் எனக் கூறி இருக்கிறார்.

இப்போ ஷாக் அடிக்கலையா?
கடந்த 19 மாதங்களிலே இந்த நாட்டு மக்களுக்கு என்ன திட்டங்களை திமுக அரசு கொடுத்திருக்கிறீர்களோ அந்த திட்டங்களுக்கான பயன்கள் என்ன, இந்த மக்களுக்கு சேர்ந்திருக்கிறதோ அதை விவாதிக்க தயாரா என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் கேள்வி கேட்டிருக்கிறார். நாங்களும் சட்டமன்றத்தில் இருந்து உங்களுடைய நடவடிக்கைகளை பார்த்திருக்கிறோம். நீங்கள் அதை செய்வோம் இதை செய்வோம் என்று 505 தேர்தல் வாக்குறுதிகள் தந்தீர்கள், அதுமட்டும் இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறபோது மின்சார கட்டண உயர்வு ஷாக்கடிக்கிறது என்று சொன்னீர்கள், இப்போது மின்சார கட்டணம் உங்களுக்கு ஷாக்கடிக்கவில்லையா?

கிடப்பில் திட்டங்கள்
அதேபோல டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உங்கள் வீட்டுக்கு முன்பாக நீங்கள் போராட்டம் நடத்தினீர்கள், இன்றைக்கு டாஸ்மாக் பார்கள் நாடெங்கும் திறந்து இருப்பது உங்கள் கவனத்திற்கு வந்ததா வரவில்லையா? அதேபோன்று 19 மாதங்களிலே 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள், பட்ஜெட் உரையில் அறிவித்த திட்டங்கள், மானிய கோரிக்கையில் அறிவித்த திட்டங்கள், இவையெல்லாம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எடப்பாடியார் அறிவித்த திட்டங்களைத் தான் இன்றைக்கு நீங்கள் ரிப்பன் வெட்டி திறக்கிறீர்கள்.

மக்கள் பாடம் புகட்டுவார்கள்
மக்கள் பிரச்சனைகள் எதிர்க்கட்சித்தலைவர் வாயிலாக தான் தெரிந்து கொள்ள முடியும் என்கிற அந்த ஜனநாயகம் மாண்பை முழுமையாக கற்றறிந்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் எடப்பாடியார் கேட்ட கேள்விக்கு மாண்புகளை மறைத்த மர்மம் என்ன என்பதுதான் இன்றைய எதார்த்தமான கேள்வி. இந்த நிலையிலே நீங்கள் சென்றீர்கள் என்றால் மக்கள் உங்களுக்கு எப்படி பாடம் புகட்டுவார்கள் என்பதை வருகிற பாராளுமன்ற தேர்தல் அதற்கு விடையாக அமையும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications