கவனீச்சிங்களா.. கண்ணீரோடு இதயத்தில் அழுகை.. ஓ பன்னீர் செல்வத்தின் குணம் இதுதான்..ஜெயக்குமார் தாக்கு
சென்னை: மகன் ரவீந்திரநாத் எம்பிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதை சிலர் சதி செய்து தடுத்துவிட்டனர் என எடப்பாடி பழனிச்சாமியை ஓ பன்னீர் செல்வம் தாக்கி பேசிய நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் ஓ பன்னீர் செல்வம் கண்களில் கண்ணீருடன், இதயத்தில் அழுகையுடன் இருந்ததாக அவர் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் ஜெயலலிதா இருந்தார். இவரது மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர்.
இதற்கிடையே தான் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமானது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர். பொதுக்குழு மூலம் ஓ பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நீக்கம் செய்தது.

எடப்பாடி பழனிச்சாமியை சாடிய ஓபிஎஸ்
மேலும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஓ பன்னீர் செல்வம் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்தார். மேலும் நேற்று சென்னை வேப்பேரி திருமண மண்டபத்தில் ஓ பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்தார்.

மத்திய அமைச்சர் பதவியை தடுத்தனர்
இந்த கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் பேசியதாவது: தமிழகத்தில் 30 ஆண்டுக்கும் மேலாக அதிமுக ஆட்சி செய்தது. இதற்கு எம்ஜிஆர் ஜெயலலிதா தான் காரணம். ஆனால் இன்று அதிமுகவில் மனிதாபிமானம் இல்லாத நிலை உள்ளது. சர்வாதிகார உச்சியில் நின்று கொண்டு தோற்று போய் உள்ளனர். எம்ஜிஆரை எடப்பாடி பழனிசாமி நேரில் பார்த்ததுண்டா, அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது. தைரியம் இருந்தால் தனிக்கட்சியை நடத்தி பாருங்கள். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது எனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதாக இருந்தது. அதை சிலர் தடுத்து நிறுத்தி சதி வேலைகளை செய்தார்கள். இப்படி எத்தனை சதிகளை செய்துள்ளார்கள்'' என தாக்கி பேசினார்.

ஜெயக்குமார் பதிலடி
இந்நிலையில் தான் மகன் ரவீந்திரநாத் எம்பிக்கு அமைச்சர் பதவி கிடைப்பதை தடுத்ததாக ஓ பன்னீர் செல்வம் குற்றம்சாட்டியதற்கு அதிமுக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். சென்னை பெசன்ட் நகரில் இன்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:

யாரும் தடுக்கவில்லை
அதிமுகவில் ஒரேயொரு எம்பியாக உள்ள ஓபிஎஸ் மகன் ரவீந்திராத் அமைச்சராவதை யாரும் தடுக்கவில்லை. அதனை தடுக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. இந்த கருத்தை சொல்லும்போது ஓபிஎஸ் முகபாவணையை பார்க்கணுமே, உதட்டில் வார்த்தைகள் வராமல் கண்களில் கண்ணீர் கசிந்து, இதயம் அழுவது போன்ற நாக்கு தளர அவர் வார்த்தைகளை கூறினார். இதில் இருந்து அவரது குடும்ப பாசம், ஆதிக்கம் தான் வெளிப்பட்டுள்ளது'' என பதிலடி கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications