ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு! திமுக அரசு பம்முவது ஏன்? அதிமுக அதிரடி கேள்வி!
சென்னை: அதிமுக ஆட்சியில் ஆளுநர் செயல்பாடு குறித்து அன்று வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர்கள் இன்று பம்முவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இது தான் திமுகவினரின் இரட்டை நிலைப்பாடு என்றும் சாடியுள்ளார்.
தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ இறையன்புவிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி வளர்ச்சி திட்டங்கள் குறித்த ரிப்போர்ட் ஒன்றைக் கேட்டு இருப்பதாகக் கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் பலரும் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவு செய்திருந்தனர்.
ஓபிஎஸ்சுக்கு அந்த விஷயத்தை நினைவுபடுத்துகிறேன்! ஜெயக்குமார் பதிலடி! அதிமுகவில் வலுக்கும் மோதல்!
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
இதற்கு முன் அதிமுக ஆட்சியில் அப்போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாவட்டங்கள் தோறும் சென்று ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார். இதை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மிகக் கடுமையாக எதிர்த்தது. மேலும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. ஆளுநரின் செயல்பாடுகள் மாநில சுயாட்சியைப் பறிக்கும் வகையில் உள்ளதாக திமுகவினர் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து போராட்டங்களை நடத்தினர்.
புதிய ஆளுநராக ஆர்.என் ரவி
இந்நிலையில், திமுக ஆட்சி அமைந்ததும் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி நியமிக்கப்பட்டார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என் ரவி, உளவு துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதிமுக ஆட்சியில் மாநில சுயாட்சி என ஆளுநர் செயல்பாடுகளை எதிர்த்த திமுகவினர், இப்போது அமைந்த போது ஆளுநர் சொல்வதைக் கேட்டு நட்புடன் நடந்து கொள்ள முயல்வதாகப் பரவலாகக் கூறப்படுகிறது.
ஆட்சி ரிப்போர்ட்
இந்தச் சூழலில் நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் என்னென்ன, அதில் எவ்வளவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன, திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள், பயனடைந்த மக்களின் விவரங்கள் குறித்த ரிப்போர்ட்டை ஆளுநர் கேட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் திமுக தலைவர்கள் யாரும் இது குறித்து வாய் திறக்கவில்லை.
அமைதி காக்கும் திமுக
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, "ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுகிறார், பாஜகவை தமிழகத்தில் காலூன்ற வைக்க ஆளுநர் முயற்சி செய்கிறார்" என்று அடுக்கடுக்காக குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல தமிழ்நாடு மாநில சிறுபான்மை நலவாரியத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆளுநர் வரம்பை மீறினால் முதல்வர் பயப்படமாட்டார் எனத் தெரிவித்திருந்தார், காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலும் கூட இது குறித்து திமுகவினர் அமைதி காத்தே வருகின்றனர்.
அதிமுக விமர்சனம்
திமுகவின் இந்த நிலைப்பாட்டை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. திமுக எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்று ஆளும்கட்சியாக இருக்கும்போது ஒன்று என இரட்டை நிலைப்பாடு எடுப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார். இது குறித்து ஜெயக்குமார் கூறுகையில், "ஆளுநர் என்பவர் தான் நிர்வாக தலைவர் அவருக்கென அதிகாரங்கள் உள்ளன. ஆனால் ஆட்சியில் இல்லாத போது ஒன்று, ஆட்சியில் இருக்கும் போது ஒன்று என அவர்கள் இரட்டை நிலைப்பாடு எடுக்கின்றனர். இதனை நாங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகிறோம்.
பம்மி நிற்கும் திமுக
அதிமுக ஆட்சியில் ஆளுநர் மாவட்டம் வாரியாக சென்ற போதே, திமுகவினர் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தனர். ஆளுநருக்கு இதற்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தனர். ஆனால் இப்போது கத்தி கூப்பாடு போடாமல் பம்மி நிற்கின்றனர். இது தான் அவர்களின் இரட்டை வேடம்" என்று அவர் தெரிவித்தார்.