Exclusive: என்னிடம் கார் இல்லை; ஹவுசிங் போர்டு வீட்டில் வசிக்கிறேன்; அதிமுக அவைத்தலைவர் ஓபன் டாக்!
சென்னை: ஒரு கவுன்சிலரே காரில் பவனி வரக்கூடிய இந்தக்காலத்தில், இன்னும் தனக்கு சொந்தமாக கார் கூட வைத்துக்கொள்ளாமல் இருக்கிறார் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்.
இதுமட்டுமல்ல சென்னையில் இவர் வசித்து வருவது ஹவுசிங் போர்டு வீட்டில் என்பது கூடுதல் தகவலாகும்.
இதனிடையே தனக்கிருக்கும் பரபரப்பான பணிகளுக்கும், வாழ்த்துச்சொல்ல வருபவர்களை சந்திப்பதற்கும் மத்தியில் ஒன் இந்தியா தமிழுக்காக சில மணி துளிகள் ஒதுக்கி மனம் திறந்து பல்வேறு ருசிகர தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
அதன் விவரம் பின்வருமாறு;
பாதி ஆடையுடன் வந்து சின்ற சாட்சி! அதுவும் ஜட்ஜ் முன்னாடியே..! கடுப்பான வக்கீல்.
23 முறை ஜெயில்
''எனது உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக அதிமுக அவைத்தலைவர் பதவியை கருதுகிறேன். நிச்சயம் அனைத்து நிர்வாகிகளுடனும் அனுசரித்து சென்று கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வரக்கூடிய வகையில் எனது பணிகள் இருக்கும். அதிமுகவுக்காக 23 முறை ஜெயிலுக்கு சென்றிருக்கிறேன். எம்.ஜி.ஆர். காலத்தில் 14 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறேன். 1972 அக்டோபர் 10-ம் தேதி திமுகவிலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார் என்ற தகவலை கேட்டதும், மேலூர் அருகே நான் ஓட்டிச் சென்ற அரசுப்பேருந்தை அப்படியே நிறுத்திவிட்டு நடத்துநரிடம் அந்த ஸ்பாட்டிலேயே ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு ஊர் திரும்பினேன்.''
முதல் ஆளாக கூட்டம்
''எம்.ஜி.ஆர்.தனிக்கட்சி தொடங்கவேண்டும் என தமிழ்நாட்டிலேயே முதல் ஆளாக நான் தான் கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றினேன். எம்.ஜி.ஆர்.காலத்துக்கும் பிறகும் அம்மாவின் விசுவாசியாக எதையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக உழைத்தேன். 2011-ம் ஆண்டு அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளராக நியமித்த அம்மா, ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வீடு ஒன்றையும் ஒதுக்கிக் கொடுத்தார்கள். ராயப்பேட்டையில் உள்ள அந்த ஹவுசிங் போர்டு வீட்டில் தான் இன்றுவரை வசித்து வருகிறேன்.''
ஆட்சிமன்றக் குழு
''2012-ம் ஆண்டு அதிமுக ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக அம்மா என்னை நியமனம் செய்தார். அப்போது சென்னை பீச் ரோடு (காமராஜர் சாலை) வழியாக ஆட்டோவில் தலைமைச் செயலகத்திற்கு சென்றுகொண்டிருந்தேன். அதை அம்மா பார்த்துவிட்டார்கள் போல், கோட்டையிலிருந்து வீட்டுக்கு புறப்படுவதற்காக கார் ஏற வந்த அம்மா, என்னை பார்த்ததும் என்ன உசேன் இரண்டு பெரிய பொறுப்புகளில் இருக்கிறீர்கள், ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்களே எனக் கேட்டார். என்னிடம் கார் இல்லைங்கம்மா அதனால் தான் என்று சொன்னேன்.''
வக்பு வாரியம்
''கவலைப்படாதீர்கள் நாளை முதல் அரசு காரில் பயணிப்பீர்கள் எனக் கூறிவிட்டு சென்ற அம்மா, என்னை அடுத்த நாளே தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக நியமித்தார்கள். என்னை பொறுத்தவரை காரில் தான் செல்ல வேண்டும் என நினைக்கமாட்டேன், இப்போதும் கூட 10 நாளுக்கு ஒருமுறை சொந்தஊரான நாகர்கோவிலுக்கு ரயிலில் தான் சென்று வருகிறேன். ஊரில் என்னிடம் ஒரு பழைய அம்பாசிடர் கார் உள்ளது, ஆனால் அது ஓடாது. மெக்கானிக் ஷாப்பில் வேலைக்கு விட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. அதைச் சரிசெய்ய தேவையான பணம் இல்லாததால் அப்படியே அதை விட்டுவிட்டேன்''
ஆட்டோ பயணம்
''செகண்ட் ஹேண்ட்ஸ் இன்னோவா கார் ஒன்றை ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினேன், ஆனால் அதை பராமரிக்க முடியாததால் அதை கொடுத்துவிட்டேன். இப்போது என்னிடம் எந்தக் காரும் இல்லை. ஆட்டோவில் தான் பயணிக்கிறேன், ஹவுசிங் போர்டு வீட்டில் தான் வசிக்கிறேன். இதனால் எனக்கு எந்த பிரஸ்டீஜ் பிராப்ளமும் கிடையாது. என்னை பொறுத்தவரை சரிந்த வாக்குகளை மீண்டும் அதிமுகவுக்கு தூக்கி நிறுத்துவதிலும், கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறேன்.''
எளிமை
இந்தக் காலத்தில் ஒரு வார்டு கவுன்சிலரே ஆடி, ஸ்கார்பியோ என கார்களில் பவனி வரும் வேளையில், கட்சி கட்சி என்று தனது ஆயுட்காலம் முழுவதையும் கரைத்து இன்று அவைத்தலைவர் என்ற பதவியின் மூலம் ஒருவழியாக அரசியலில் கரையேறி இருக்கிறார் தமிழ்மகன் உசேன்.