3 சீனியர்கள்.. "இவர்'தான் அடுத்த அவை தலைவரா?.. பரபரக்கும் அதிமுக.. நாளை கூடுகிறது மா.செ. கூட்டம்
அடுத்த அவை தலைவர் யார் என்ற ஆலோசனை கூட்டம் நாளை நடக்க உள்ளது
சென்னை: அதிமுக பொன்விழா கொண்டாட்டம், அவைத்தலைவர் தேர்வு குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.. இதனிடையே, இன்று நடைபெறவிருந்த கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளைய தினம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக, 49 வருடங்களை கடந்து வரும் 17ம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த நாளை பொன்விழாவாக கொண்டாட அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்... பொன்விழாவன்று எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளுக்கு மாலை அணிவித்து சிறப்பிக்குமாறு ஓபிஎஸ், ஈபிஎஸ் கழகத்தினரை கேட்டுக் கொண்டுள்ளனர்.
2 எம்பிக்கள்.. 1 அமைச்சர்.. முதல்வர் ஸ்டாலினுக்கு வந்த திடீர் தலைவலி.. அவசரமாக நடந்த திமுக மீட்டிங்?
விழாக்கோலம்
அதேபோல, எல்லா இடங்களிலும் கொடி கம்பங்களை அமைத்தும் ஏற்கனவே இருக்கும் கொடிக் கம்பங்களுக்கு புது வர்ணம் பூசியும் விழாக்கோலம் பூண்டு இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.. இந்நிலையில், அதிமுகவின் பொன்விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடந்து வருகிறது.
முக்கிய நிர்வாகிகள்
காரணம், நடைபெற உள்ள பொன்விழாவில், ஆண்டு மலரை வெளியிட அவை தலைவரை அறிவிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.. அவை தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது... மேலும் நாளைய தினம் உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதால், அதுகுறித்த ஆலோசனையும் நடந்து வருகிறது. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
சசிகலா வருகை
இதனிடையே, இன்று நடைபெற இருந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த ஆலோசனை கூட்டமானது, அதிமுகவுக்கு மிக முக்கியமானதாக கூட்டமாக கருதப்படுகிறது.. இதற்கு 2 விதமான காரணங்கள் கூறப்படுகின்றன.. முதலாவதாக, சசிகலாவின் வருகை உறுதியாகி கொண்டிருக்கிறது.. விரைவில் ஜெயலலிதா நினைவிடம் அவர் செல்ல உள்ளதாக கூறப்படும் நிலையில், அதை தடுக்க அல்லது சசிகலாவின் அரசியல் எழுச்சியை தடுக்க தீவிரமான ஆலோசனைகள் இதில் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது..
அரசியல் களம்
அதிமுக அவைத் தலைவராக பதவி வகித்த மதுசூதனன் உடல்நலக் குறைவால் சமீபத்தில் காலமானதால், அடுத்த அவை தலைவர் யார் என்பது குறித்தும் நாளைய கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.. அந்தப் பதவிக்கு யார் வரப் போகிறார்கள் என்ற விவாதம் தமிழக அரசியல் களத்தில் கடந்த ஒரு மாதமாகவே நடந்து கொண்டிருக்கிறது.
கருத்து வேறுபாடுகள்
இந்த 5 வருட காலத்தில், அதிமுகவில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் உள்ளன.. இரட்டை தலைமை விவகாரமும், அதையொட்டிய அதிருப்திகளும் அதிமுகவுக்குள் தொடர்ந்து நிலவி வருகிறது.. இரு தரப்பிலும் அதிகார மோதல் மறைமுகமாக இருந்து வந்தாலும், இறுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பின் முடிவே கட்சியின் முடிவாக மாறிவிடுகிறது. அப்படித்தான் தேர்தல் கூட்டணி முதல் எதிர்கட்சித் தலைவர் விவகாரம் வரை நடந்து முடிந்தன.
3 சீனியர்கள்
இப்போது அந்த வரிசையில் அடுத்த அவை தலைவர் யார் என்ற பிரச்சனையும் கட்சி தலைமையிடம் வெடித்துள்ளது.. அந்த வகையில் 3 மூத்த தலைவர்களின் பெயர்கள் அடிபட்டன.. சீனியர்களான பொன்னையன், செம்மலை, ஜெயக்குமார் போன்றோரின் பெயர்களை இபிஎஸ் தரப்பு சொல்லவும், அதற்கு ஓபிஎஸ் தரப்பு எதிர்த்துள்ளதாக தெரிகிறது.. கொங்கு மண்டலம் சாராத ஒருவர்தான் தலைவராக வேண்டும், குறிப்பாக சிறுபான்மையினர் ஒருவரை அந்த பதவியில் அமர்த்தினால், அதிமுகவுக்கு அது பலமாக மாறும் என்பதே ஓபிஎஸ் தரப்பு எண்ணமாக இருந்து வருகிறதாம்..
நாளை முடிவு
இதன்காரணமாக, மேலும் சிலரது பெயர்கள் அவை தலைவர் பதவிக்கு கசிந்து வருகின்றன.. சைதை துரைசாமி, தமிழ்மகன் உசேன், லியாகத் அலிகான், கருப்பசாமி பாண்டியன் போன்றோரின் பெயர்கள் அடிபட துவங்கி உள்ளன.. அநேகமாக இதில் ஒருவர்தான் அடுத்த அவை தலைவராக இருக்க கூடும் என்ற செய்திகளும் வட்டமடிக்கின்றன.. அடுத்த அவைதலைவர் யார் என்பது குறித்தும் நாளை நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்கிறார்கள்... அந்த வகையில் நாளைய தினம் நடக்கும் மா.செ.கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆதரவாளர்
"தமிழ்நாட்டின் தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள் வந்தாச்சு... நிச்சயம் அது நடக்கும்" என்ற ரஜினியின் நம்பிக்கையான வார்த்தையை வரவேற்று அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்று சைதை துரைசாமி அன்று தெரிவித்திருந்தது பெரும் சர்ச்சையை கட்சிக்குள் ஏற்படுத்தியிருந்தது. இப்படி பகிரங்கமாகவே சைதை துரைசாமி அவர் ஆதரித்தால் ஓரங்கட்டப்பட்டுள்ளார்... மேலும் அவர் ஓபிஎஸ் ஆதரவாளரும்கூட. எனவே,அவருக்கு அவை தலைவர் பதவி கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
லியாகத் அலிகான்
லியாகத் அலிகான் அந்த அளவுக்கு செல்வாக்கு மிக்க தலைவர் இல்லை.. அதேபோல, கருப்பசாமி பாண்டியனை பொறுத்தவரை, தனக்கு திமுகவில் பெரிய அளவிலான பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கத்தில்தான் அதிமுகவில் இணைந்தார்.. சமீபத்தில்தான் கட்சியில் இணைந்தார்என்பதால், இவர் மீதான திமுக பிம்பம் முழுமையாக நீங்கவில்லை.. ஏற்கனவே கட்சி மாறி போனவர் என்பதாலும் அவை தலைவர் பதவி இவருக்கு கிடைக்க வாய்ப்பில்லை.
தமிழ் மகன் உசேன்
ஓரளவு வாய்ப்புள்ளது என்றால், தமிழ்மகன் உசேன்னுக்கு கிடைக்கலாம் என்கிறார்கள்.. இவர் அந்த காலத்தில் இருந்து அதிமுகவில் இருப்பவர்... ஜெயலலிதா இவருக்கு எப்போதுமே முக்கியத்துவம் தருவார்.. அது மட்டுமில்லை, ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்பினரிடமும் சரிசமமான, நடுநிலையான போக்கையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருபவர்... ஏற்கனவே ராஜ்யசபா சீட் சம்பந்தமாக இவரது பெயரும் அடிபட்டது. இப்போதும் அவை தலைவர் பதவிக்கு இவர் பெயர் பலமாக கேட்கிறது.. இரட்டை தலைமைக்கு பொதுவான மற்றும் அனுசரித்து போகும் நபர் என்பதால் இவருக்கு வாய்ப்பு அதிகமாக கிடைக்கும் என்கிறார்கள்.
முக்கியத்துவம்
ஜஸ்டின் பால்ராஜும் முக்கியத்துவம் பெறுகிறார்.. கட்சியின் சீனியர்.. இவர் ஆட்சிமன்றக்குழுவில் இருந்தவரும்கூட.. சிறுபான்மை மக்களின் ஆதரவை பெறும் வகையில், யாராவது ஒருவர் அவை தலைவர் பொறுப்பில் அமர வைக்க முயற்சி நடந்து வருவதாக தெரிகிறது.. ஆனால், ஏற்கனவே கொங்கு மண்டலம் எடப்பாடி பழனிசாமியால் வலிமையுடன் திகழ்கிறது.. இந்த முறையும் அதே கொங்கு மண்டலத்திலிருந்து யாரையாவது அவை தலைவராக நியமித்தால், அது மேலும் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே விரிசலை தந்துவிடக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.. யார் அடுத்த அவை தலைவர்? நாளை தெரிந்துவிடும்..!