வலுவிழந்த அசானி புயல்.. வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும்? தமிழகத்தில் எங்கே கனமழை இருக்கு?
சென்னை: அசானி புயல் வலுவிழந்துள்ள நிலையில், வரும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
வங்கக் கடல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சீக்கிரம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்த அது, புயலாகவும் வலுப்பெற்றது.
இந்த புயலுக்கு அசானி என்று பெயரிடப்பட்டது. மேலும், இந்த புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவிர புயலாக வலுப்பெற்றது.

புயல்
முதலில் வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்த அசானி புயல், மெல்ல அது மத்திய மேற்கு மற்றும் அதனை ஓட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிக்குச் சென்றது. வடகிழக்கு திசையில் நகர்ந்து வந்த இந்த அசானி புயல், திடீரென வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இதன் காரணமாக ஆந்திராவின் வட கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை கனமழையானது பெய்தது.

கரையைக் கடந்தது
குறிப்பாக ஆந்திராவின் விசாகப்பட்டினம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று காலை ஆந்திரப்பிரதேச கடலோரம் அருகே மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய "அசானி" புயல் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரப்பிரதேச மசூலிப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. இது இன்று (12.05.2022) காலை 05:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து ஆந்திரப்பிரதேச மசூலிப்பட்டினத்திற்கு மேற்கே நிலவியது.

வலுவிழந்தது
இது இன்று காலை 08:30 மணி அளவில் மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நிலவுகிறது. இது படிப்படியாக மேலும் வலுவிழக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

எங்கே மழை
அதேபோல நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மின்சாரம்
மேலும், அசானி புயல் காரணமாகக் கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் நல்ல காற்றும் வீசி வருகிறது. கடந்த புதன்கிழமை மட்டும் மாநிலத்தில் காற்றாலை மூலம் 9.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அசானி புயல் காரணமாக மின் தேவையும் குறைந்ததால், உபரி காற்றாலை மின்சாரம் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவது அதிகரித்துள்ளதாகும் மின் வாரிய வட்டாரங்களில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications