"ஆளுநர் உரையில் மாறுபட்ட கருத்து அதிமுகவுக்கும் இருக்கு.. ஆனால்.." ஜெயக்குமார் சொன்ன விளக்கம்!
சென்னை: சட்டசபையில் உரையாற்றிய போது தமிழ்நாடு என்ற சொல்லை ஆளுநர் ஆர்.என்.ரவி பயன்படுத்தாததில் அதிமுகவுக்கு மாறுபட்ட கருத்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டின் தமிழ்நாடு சட்டசபை கூட்டம் தொடங்கிய முதல் நாளே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றிய போது, தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை படிக்காமல், ஆளுநர் ஆர். என் ரவி சில வார்த்தைகளை நீக்கியும், சில வரிகளை சேர்த்தும் பேசியுள்ளார்.
ஆளுநராக இருப்பவர் மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை மட்டுமே வாசிக்க வேண்டும் என்பதே சட்டவிதி. இந்த விதிகளை மீறி, ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டுள்ளார். குறிப்பாக ஆளுநர் தனது உரையில் சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன.

ஆளுநர் தவிர்த்த வார்த்தைகள்
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது, என்ற பகுதியை மொத்தமாக தவிர்த்து உள்ளார்.

ஜெயக்குமார் கருத்து
இது தமிழக அரசியலில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், திமுக - அதிமுக இடையில் கொள்கை, கருத்து வேறுபாடு உள்ளது. அதேபோல் ஆளுநர் உரை என்பது உரிக்க உரிக்க வெங்காயம் என்பது போல் வெற்று உரையாக இருக்கிறது. அதேபோல் தமிழ்நாடு என்று சொல்வதே சரி என்று அண்ணா காலத்தில் இருந்தே அதிகளவில் விளக்கம் கொடுத்திருக்கிறோம்.

அதிமுகவுக்கு மாறுபட்ட கருத்து
அதனால் தமிழ்நாடு என்று ஆளுநர் சொல்லாததில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது. ஆனால் ஆளுநரை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவது என்பது சரியான விஷயம் அல்ல. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையில் ஆளுநர் கூறி இருப்பது 100 சதவிகிதம் உண்மை தான்.

திமுக மீதே ஆளுநர் விமர்சனம்
அதேபோல் திராவிடம் என்ற தேசிய கீதம் முதல் கொண்டு அனைத்திலும் இருக்கிறது. ஆனால் திராவிடத்தை கொச்சைப்படுத்தும் வகையில் திமுக செயல்பட்டு வருகிறது. திராவிட கட்சிகளால் தமிழகம் பின் தங்கியுள்ளது என்று ஆளுநர் விமர்சிப்பது திமுகவை தான் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications