ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. அதிமுக எடப்பாடி அணியின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு
ஈரோடு கிழக்கு தொகுதியின் அதிமுக இபிஎஸ் அணியின் வேட்பாளர் கே.எஸ். தென்னரசு அறிவிப்பு
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியின் அதிமுக இபிஎஸ் அணியின் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசுவுக்கு (65) கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஈரோட்டில் அதிமுக வேட்பாளரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிமுகப்படுத்தினார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இவருக்கு மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ ஆகியன ஆதரவு தெரிவித்துள்ளன.
அது போல் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் அறிவிக்கப்பட்டுள்ளார். அமமுக சார்பில் 29 வயதான சிவபிரசாந்த் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கு மத்தியில் இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படாமலேயே இருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் தேர்தல் என வந்துவிட்டால் முதலில் அறிவித்துவிடுவார்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக ஜெயிக்காது.. நாளைக்கு வரும் ஹேப்பி நியூஸ்: செங்கோட்டையன்
இரு அணிகள்
ஆனால் தற்போது அதிமுக இரு அணிகளாக பிரிந்துள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு யாரை வேட்பாளராக அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இவர் அறிவித்தால் ஓபிஎஸ்ஸும் போட்டி வேட்பாளரை அறிவிப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது. இதனிடையே ஓபிஎஸ்ஸோ பாஜக போட்டியிட்டால் அந்த வேட்பாளரை தங்கள் தரப்பு ஆதரிக்கும் என கூறியிருந்தார்.
பாஜக
ஆனால் பாஜகவோ இதுவரை தனித்து போட்டியா இல்லை, எடப்பாடி தரப்பினருக்கு ஆதரவா, ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அதிமுகவின் எடப்பாடி தரப்பு சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, நந்தகுமார் ஆகிய மூவரில் ஒருவர் என அனுமானிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு யார் வேட்பாளர் என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்றைய தினம் கூறுகையில் நாளை (இன்று) மகிழ்ச்சிகரமான செய்தி வரும் என கூறியிருந்தார். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியின் அதிமுக இபிஎஸ் அணி வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
இவரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிமுகப்படுத்தினார். வேட்பாளர் கே.எஸ். தென்னரசு கடந்த 2001 , 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஈரோடு இவர் ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராக தென்னரசு இருக்கிறார். தென்னரசு 25 ஆண்டுகளாக ஈரோடு சுமை தூக்குவோர் மத்திய சங்க பொதுச் செயலாளராக இருந்தார்.
வலிமையான வேட்பாளர்
திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஏற்கெனவே வலிமையான வேட்பாளராக இருக்கிறார் என சொல்லப்படுகிறது. தற்போது அதிமுக எடப்பாடி அணி அறிவித்த கே.எஸ்.தென்னரசுவும் அந்த தொகுதியில் இரு முறை எம்எல்ஏவாக இருந்தவர். இதுகுறித்து எடப்பாடி ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கூறுகையில் எங்கள் தரப்பில் வலிமையான வேட்பாளரை அறிவித்துவிட்டோம். களத்தில் யார் இருந்தாலும் நாங்கள்தான் வெல்வோம். அது போல் இரட்டை இலை சின்ன வழக்கிலும் அதிமுக பொதுக் குழு வழக்கிலும் நாங்களே வெல்வோம். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் என ஜெயக்குமார் தெரிவித்தார்.