மத்தளத்துக்கு 2 பக்கம் தான் அடி! ’அவருக்கு’ எல்லா பக்கமும் அடி! திணறித் தவிக்கும் எடப்பாடி பழனிசாமி!
சென்னை : நிர்வாக ரீதியாக அதிமுக தனது கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் கொடநாடு கொலை வழக்கு முதல் தற்போது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை அறிக்கை வரை அடுத்தடுத்து நெருக்கடிகள் வரிசை கட்டி வருவதால் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அடுத்ததாக சில மாதங்களில் தேர்தலை சந்தித்து கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளராக பதவி ஏற்பதற்கான தீவிரமான முன்னேற்பாடுகளை செய்து வருகிறார்.
இதற்காகவே அவர் காய்களை நகர்த்தி வருகிறார் என்கின்றனர் அவர் தரப்பு ஆதரவாளர்கள். அதே நேரத்தில் பாஜக தலைமையின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்துக்கு தான் இருக்கிறது என கூறுகின்றனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.

ஓபிஎஸ் நெருக்கடி
கடந்த காலங்களிலும் சரி தற்போதும் சரி சமூக வலைதளங்களில் அல்லது செய்தியாளர்களை சந்திக்கும் போது தொண்டர்கள் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்திற்கு தான் உள்ளது என அடிக்கடி குறிப்பிட்டு பேசி வருகின்றனர். பொதுச் செயலாளர் தேர்தலில் சந்திக்கும் போது எடப்பாடி பழனிச்சாமிக்கு தைரியம் இருந்தால் ஓ.பன்னீர் செல்வத்தையும் போட்டியிட வைக்க வேண்டும். அதில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெறலாம் என கூறுகின்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி
ஆனால் இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுகவின் பொது செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் என்ன முயன்றாலும் மீண்டும் அவரால் கட்சிக்குள் வர முடியாது என்கின்றனர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள். தற்போது டெல்லி தரப்பை இருவரும் அணுகியிருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதே அடிமட்ட தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனாலும் அதிமுக அதிகாரம் கையில் இருந்தாலும் அடுத்தடுத்து நெருக்கடிகள் வரிசை கட்டி வருவதால் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அடுத்தடுத்து நெருக்கடி
அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிச்சாமிக்கு எப்போதும் தலைவலி தான். ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் என அடுத்தடுத்து ஏதாவது ஒரு சிக்கல் எழுந்து வருகிறது. மேலும் அவரது ஆதரவாளர்களும் அடுத்தடுத்து நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கின்றனர். எஸ்பி வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு, தற்போது ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிக்கி உள்ளது என விவகாரங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டே தான் இருக்கின்றன.

கடும் அதிருப்தி
இதன் காரணமாக கடும் அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி தனது நெருங்கிய ஆதரவாளர்களிடம் இது குறித்து பேசியதாக கூறப்படுகிறது. வழக்கமாக தீபாவளி அன்று ஏராளமானோர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கும் நிலையில், நேற்று பலரை வர வேண்டாம் என கூறி விட்டதாகவும், இதனால் நெருங்கிய் வட்டாரத்தை தவிர யாரும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வரவில்லை என்கின்றனர். இன்னும் சில நாட்களுக்குள் நெருக்கடிகளை சமாளித்து அதிமுக நிரந்தர பொதுச்செயலாளராக தான் வர வேண்டும் என காய்களை நகர்த்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.












Click it and Unblock the Notifications