கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க.. கமலாலய வாசலில் காத்திருந்த அதிமுக தலைகள்? ட்ரெண்டாகும் #saveadmk
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் வேட்பாளரை ஆதரிக்கக் கோரி பாஜக தலைவர்களை அதிமுக மூத்த தலைவர்கள் நேரில் சென்று வலியுறுத்தினர். கமலாலயம் சென்ற அதிமுக மூத்த தலைவர்கள் அண்ணாமலை வருகைக்காக வாசலிலே காத்திருந்ததாக விமர்சனமானது எழுந்துள்ள நிலையில் #saveadmk என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பெரும் எதிர்பார்ப்புகள் பரபரப்புகளுக்கு இடையே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக களம் இறங்குவது உறுதியாகிவிட்டது. எடப்பாடி தரப்பும் ஓபிஎஸ் தரப்பும் தேர்தலில் போட்டி போட போவதாக அறிவித்திருக்கிறார்கள்.
தற்போது கூட்டணி கட்சியினரின் ஆதரவை பெறும் முயற்சியில் இரு தரப்பும் ஈடுபட்டுள்ள நிலையில் காலையில் தமாகா தலைவர் ஜிகே வாசனை சந்தித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவு கோரியது.

யாருக்கு ஆதரவு
அதேபோல ஓபிஎஸ் தரப்பும் அவரை சந்தித்த நிலையில் கூட்டணியில் இருக்கும் பூவை ஜகன் மூர்த்தி எடப்பாடி அணிக்கும், ஜான்பாண்டியன் இரட்டை இலைக்கும் ஆதரவளிப்பதாக கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் பாஜகவின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதுதான் தற்போது பேசுபொருளாக இருக்கிறது. இருதரப்பும் போட்டி போட்டுக் கொண்டு பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்தனர். 4 மணிக்கு சந்திப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்று மணிக்கே பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு நிர்வாகிகள் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கோரினர்.

பாஜக அலுவலகம்
தொடர்ந்து நான்கு மணிக்கு வைத்தியலிங்கம், ஜேசிடி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோருவுடன் ஓ.பன்னீர்செல்வம் பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினார் எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் ஓபிஎஸ் தரப்பும் பாஜக ஆதரவை கேட்டுள்ள நிலையில் அவர்கள் யாருக்கு ஆதரவு தரப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேலும் பாஜக தேர்தலை சந்திக்குமா என்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
முன்னதாக எடப்பாடி பழனிசாமி அணி தரப்பு சார்பாக முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், தங்கமணி, கேபி முனுசாமி, செங்கோட்டையன் உள்பட அதிமுக முக்கிய தலைவர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். பாஜக தரப்பில் அக்கட்சி தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச்.ராஜா, நாராயணன் உள்பட முக்கிய நிர்வாகிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். மாலை 3.15 மணியளவில் கூட்டம் தொடங்கிய நிலையில் 20 நிமிடத்திற்குள் கூட்டம் நிறைவடைந்தது. கூட்டம் தொடங்கிய வேகத்தில் நிறைவடைந்தது.

#saveadmk
இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட உள்ளதாகவும், பாஜக அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கமலாலயம் சென்ற அதிமுக மூத்த தலைவர்கள் அண்ணாமலை வருகைக்காக வாசலிலே காத்திருந்ததாக விமர்சனமானது எழுந்துள்ள நிலையில் #saveadmk என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தொண்டர்கள் புலம்பல்
தமிழகத்தில் பெரும் கட்சியான அதிமுக பாஜகவினரை ஏன் நேரில் சந்தித்து ஆதரவு கோரவேண்டும் என்ற கேள்வி எழுந்த நிலையில், இன்று கமலாலயம் சென்ற அதிமுக மூத்த தலைவர்கள் அண்ணாமலை வருகைக்காக வாசலிலே காத்திருந்தது மேலும் விமர்சனமானது. கடந்த தேர்தல்களில் பாஜக அதிமுக ஆதரவை எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், தற்போது பாஜகவுக்காக அதிமுக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கெல்லாம் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையேயான மோதல் தான் காரணம் என தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications