ஒன்னே ஒன்னு. கண்ணே கண்ணு.. களத்தில் இறங்கிய ’வாரிசு’! டெல்லிக்கு பறந்த தூது! ’க்ரீன்’ சிக்னல் தானா?
சென்னை : அதிமுகவில் ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தாலும் தற்போது வரை அவர் அதிமுக எம்பி ஆகவே தொடர்வதாக மக்களவை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தந்தைக்கு ஆதரவாக டெல்லியில் அவர் லாபி செய்து வருவதாகவும், அதன் பலனாகவே தற்போது வரை அவர் எம்பி ஆக தொடர்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஓ பன்னீர் செல்வத்திற்கும் இடிந்த பனிப்போர் கடந்த மாதம் முதல் எரிமலையாக வெடித்து சிதறியது.
எம்எல்ஏக்கள் எம்பி எனக் கூட பார்க்காமல் ஓபிஎஸ் ஆதரவாளர்களை எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதிமுக மோதல்
அந்த வகையில் எம்எல்ஏக்களான ஓ பன்னீர்செல்வம் வைத்தியலிங்கம் ஆகியோரும் அதிமுகவின் ஒரே ஒரு மக்களவை உறுப்பினரான ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஆகியோர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர் இதன் காரணமாக மிகப்பெரிய கட்சியான அதிமுகவுக்கு தற்போது மக்கள் அதில் ஒரு எம்பி கூட இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது.

ஓ.பி.ரவீந்திர நாத்
அதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் 'ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு' என இருந்த ஒற்றை எம்பி ரவீந்திரநாத் அதிமுகவில் இருந்து நீக்கியது எடப்பாடி பழனிச்சாமியின் அதிகார திமிரின் உச்சம் என ஓ பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்த நிலையில் ரவீந்திரநாத் அதிமுக எம்பியாக கருதக்கூடாது என மக்களவை சபாநாயகருக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதினார். இந்த கடிதங்களை ஏற்கக் கூடாது தான் அதிமுகவின் பொருளாளர் என ஓ பன்னீர்செல்வம் சபாநாயகருக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

மேலிடம் ஆதரவு
எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி பல நாட்கள் கடந்துவிட்ட போதிலும் நாடாளுமன்ற நிகழ்வுகளில் ரவீந்திரநாத் கலந்து கொண்டுள்ளார். அப்போது மக்களவை தொலைக்காட்சியில் ரவீந்திரநாத் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அதிமுக எனவே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் நாடாளுமன்ற இணையதளத்திலும் தற்போது வரை அதிமுக எம்பி ஆகவே ரவீந்திரநாத் இருக்கிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதம் விசாரணையில் இருப்பதாக கூறப்பட்டாலும் இதுவரை எவ்வித முடிவுகளும் வெளியாகவில்லை.

தேர்தல் ஆணையம்
இதனால் தங்கள் தரப்புக்கு ஆதரவு இருப்பதாக கருதும் ஓபிஎஸ் தரப்பு உற்சாகத்தில் இருக்கிறது. மேலும் ஓ பன்னீர் செல்வத்துக்கும் பாஜக மேல் இடத்திற்கும் இடையே தூதுவராக ரவீந்திரநாத் செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்றத்தில் அதிமுகவை விட பாஜக குறித்து அதிகம் பேசி வரும் ரவீந்திரநாத்துக்கு டெல்லி மேலிடத்தில் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. அதனை வைத்து தனது தந்தைக்கும் தனக்கும் தேவையானவற்றை சாதித்துக் கொள்ளலாம் என ரவீந்திரநாத் நினைக்கிறார் .அது ஓரளவுக்கு கைகொடுத்தும் இருக்கிறது. அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது












Click it and Unblock the Notifications