பாஜக வளர்ச்சிக்கு அதிமுக காரணமா? "கொடிக்கம்பம் நட பணத்தை கொட்டுறாங்க".. இதான் அஜெண்டா.. வைகோ பகீர்!
சென்னை : தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்கு அதிமுக காரணம் இல்லை என்றும், பாஜகவின் வளர்ச்சியை ஏடுகளும் ஊடகங்களும் பெரிதுபடுத்துகின்றன, அவர்கள் வளர்ந்த அளவைவிட, பலமடங்கு பிரம்மாண்டமான பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பாஜக தமிழ்நாட்டில் 2024 தேர்தலைக் குறிவைத்து தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. அனைத்துப் பகுதிகளிலும் பூத் கமிட்டி அமைப்பதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவின் சரிவர செயல்படாத தன்மையே பாஜகவின் வளர்ச்சிக்கு உதவுவதாக பலதரப்பிலும் விமர்சிக்கப்படுகிறது.
இதுபற்றிப் பேசியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாஜகவினர் ஒவ்வொரு ஊரிலும் சென்று பணத்தைக் கொட்டுகின்றனர் என்றும், அதிமுக பாஜகவின் வளர்ச்சிக்குக் காரணம் என்று சொல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜக 'லெட்டர்’ கேம் எடப்பாடியை 'கார்னர்’ செய்யவா? கூப்பிடவே இல்லை.. பாயிண்ட் பிடிக்கும் ஓபிஎஸ் டீம்!
பாஜக அஜெண்டா
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்தியில் ஆளும் மோடி அரசு பாஜகவின் ஒவ்வொரு அஜெண்டாவையும் நிறைவேற்றி வருகிறது. காஷ்மீரில் 370-வது சட்டப் பிரிவை நீக்கினார்கள். புதிய கல்வி கொள்கையை உருவாக்கி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் புகுத்த பார்க்கிறார்கள். தமிழக ஆளுநரும் சனாதன சக்திகளின் ஏஜெண்டாக இருந்து புதிய கல்வி கொள்கையை ஆதரித்துப் பேசுகிறார்.
இந்தியாவில் சிறந்த ஆட்சி
தமிழையும், திருக்குறளையும் பேசி மக்களை ஏமாற்றி விட முடியாது. சமூக நீதியையும், மதச்சார்பற்ற தன்மையையும் சீர்குலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரி தொகையை வழங்குவதில் தமிழகத்துக்கு மத்திய அரசு வஞ்சகம் செய்கிறது. சகோதரர் மு.க.ஸ்டாலின் ஆட்சி இந்தியாவில் சிறந்த ஆட்சியாக பாராட்டப்படுகிறது. இந்த ஆட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் எந்த முயற்சியும், போராட்டமும் எடுபடாது" எனத் தெரிவித்தார்.
ஒன்று சேர்ந்து
அப்போது அவரிடம், பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கும் வகையில், எதிர்க்கட்சிகளிடம் பலமான ஒற்றுமை இல்லாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, "இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும். பாஜக வலுவாகத்தான் இருக்கிறது. எண்ணிக்கை அளவில் வலுவாக இருக்கும் அவர்கள், மீண்டும் அதே அளவு எண்ணிக்கையைப் பெறுவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இப்போது பல கட்சிகளும் பிரிந்து கிடக்கின்றன. பாஜக அல்லாத மற்ற கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தால்தான், பாஜகவை வீழ்த்தும் நிலையை ஏற்படுத்த முடியும்" எனத் தெரிவித்தார்.
வாய்ப்பு இருக்கிறதா?
அப்போது அவரிடம் அதற்கு வாய்ப்பிருக்கிருக்கிறது என்று நினைக்கிறீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வைகோ, "அதற்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா? என்று சொல்ல முடியாது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அவ்வாறு ஈடுபட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருமே இப்போது சொல்ல ஆரம்பித்துவிட்டனர். எனவே அதற்கான வாய்ப்பு ஏற்படலாம்" என்றார்.
பாஜக வளர அதிமுக காரணமா
தொடர்ந்து, தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த வைகோ, "ஏடுகளும் ஊடகங்களும் இதை பெரிதுபடுத்துகின்றன. அவர்கள் வளர்ந்த அளவைவிட, பலமடங்கு ஏடுகளும் ஊடகங்களும் பிரம்மாண்டமான தோற்றத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் சென்று பணத்தைக் கொட்டுகின்றனர். கொடிக்கம்பம் நட்டால் இவ்வளவு பணம் கொடுக்கிறோம் என்று பணத்தைக் கொட்டி அவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவின் வளர்ச்சிக்கு அதிமுக காரணம் என்று சொல்லமுடியாது. அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனையின் காரணமாக அவர்களுக்குள்ளே பிளவுபட்டு போராடிக் கொண்டிருக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.