’மெகா கூட்டணி’ எடப்பாடிக்கு ஓகே சொன்ன அண்ணாமலை! குறுக்கே வந்த ஓபிஎஸ்! மீண்டும் அதே ப்ளான் தானா?
சென்னை : நாமக்கல் அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசிய பேச்சுக்கள் அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சேலத்தில் பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டு இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது. அதிமுகவில் இணைந்து விட வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் முயற்சித்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.
ஒருபுறம் நீதிமன்றம் மறுபுறம் பாஜக தலைமையுடன் பேச்சுவார்த்தை என முயற்சித்து வந்தாலும் நிர்வாகிகள் ஆதரவு தனக்கு இருப்பதால் நம்பிக்கையோடு இருந்தாலும் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு என்ன நடக்கும் என்பது தெரியாததால் குழப்பத்தில் இருக்கிறார் எடப்பாடி.

எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் பலத்த விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. மாநாடு போல நடத்தப்பட்ட அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தொடர்பாக பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதிமுக தலைமையில் தான் அந்த கூட்டணியும் அமைக்கப்படும் என உறுதியுடன் கூறி இருக்கிறார்.

பாஜக அண்ணாமலை
இது பாஜக தலைவர்களை சற்றே அதிருப்தியில் ஆழ்த்தினாலும் அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் அண்ணாமலை தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி அதன் தலைமையில் தான் கூட்டணி இருக்கும் என ஒப்புக் கொண்டிருக்கிறார். இது ஓ.பன்னீர்செல்வம் தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பாஜக தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் என அண்ணாமலை போர் கொடி தூக்கினால் அதற்கு ஆதரவளித்து தானும் இணைந்து கொள்ளலாம் என பன்னீர்செல்வம் நினைத்திருந்த நிலையில் அண்ணாமலை இப்படி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வம்
மேலும் அதிமுக மெகா கூட்டணியில் மீண்டும் பாஜக பாமக உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தனக்கான முக்கியத்துவம் குறைந்து விடுமோ என ஓ.பன்னீர்செல்வம் நினைக்கிறார். அது மட்டுமல்லாமல் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள் தான் அவர்கள் கட்சியில் மீண்டும் சேர ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை எனவும் அதிரடியாக கூறி இருக்கிறார். ஒருவேளை உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்தால் தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்பதை உணர்ந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு திட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்.

சேலத்தில் கூட்டம்
அதாவது சேலத்தில் இன்னும் சில நாட்களில் அதிமுக 51 வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார். ஏற்கனவே அங்கு கூட்டம் நடத்தப்படும் என அவரது தீவிர ஆதரவாளரான கோவை செல்வராஜ் கூறியிருந்த நிலையில் தற்போது அதற்கான நேரம் கைகூடி வந்திருப்பதாக கருதும் ஓபிஎஸ் இந்த கூட்டத்தில் தனது ஆதரவாளர்களை திரட்டி எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடி கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார். மேலும் சேலம் தரப்பு நிர்வாகிகள் பலரும் அந்த கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு வர தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் எடப்பாடி தரப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறது. இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications